Header Ads



தென்கிழக்கு பல்கலைக்கழக 5 சிரேஷ்ட விரிவுரையாளர்கள், பேராசியர்களாக பதவி உயர்வு பெற்றனர்


- நூருல் ஹுதா உமர் -

இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் அரசறிவியல் துறைத் தலைவர் கலாநிதி எம்.எம்.பாஸில் அரசறிவியல் பேராசிரியராக பதவி உயர்வு பெற்றுள்ளார். இப்பதவி உயர்வு 13.12.2019 ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் பழைய மாணவரான கலாநிதி எம்.எம்.பாஸில், ஜப்பான் மேஜி பல்கலைக்கழகம், மலேசியாவின் மலாயாப் பல்கலைக்கழகம் ஆகிய முன்னணிப் பல்கலைக்கழகங்களில் பட்டப்பின்படிப்புக் கற்கையினை நிறைவு செய்தவர்.

தென்கிழக்கு பல்கலைக்கழக பிரயோக விஞ்ஞான பீடத்தின் புள்ளிவிபரவியல் சிரேஷ்ட விரிவுரையாளராக கடமையாற்றும் கலாநிதி ஏ.எம்.றஸ்மி அவர்கள் 03.12.2019 ஆம் திகதியிலிருந்து பேராசிரியராக பதவி உயர்வு பெற்றுள்ளார். இவர் தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் பிரயோக விஞ்ஞான பீடத்தின் பீடாதிபதியாகவும் துறைத்தலைவர் மற்றும் ஏனைய துறைகளின் தலைவராககவும் கடமையாற்றியுள்ளார். இவர் தனது பாடசாலைக் கல்வியை கல்முனை சாகிரா தேசிய பாடசாலையிலும் உயர் கல்வியை பேராதெனிய பல்கலைக்கழகம், சிங்கப்பூரின் தேசிய பல்கலைக்கழகம் மற்றும் மொரடுவ பல்கலைக்கழகம் போன்றவற்றில் கற்று தேர்ச்சி பெற்றவராவார்.

தென்கிழக்கு பல்கலைக்கழக சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி எம்.ஐ.எம்.ஹிலால் சந்தைப்படுத்தல் முகாமைத்துவத்தில் பேராசிரியராக பதவியுயர்வு பெற்றுள்ளார்.கல்முனை ஸாஹிறா தேசிய பாடசாலையின் பழைய மாணவரான இவர் தனது இளமானி கற்கையினை தென்கிழக்கு பல்கலைக் கழகத்தில் சந்தைப்படுத்தல் துறையில் கற்று விஷேடத்துவம் பெற்றதோடு தனது முதுமானியினை களனி பல்கலைக்கழகத்தில் பெற்றுக் கொண்டார்  அத்துடன் தனது கலாநிதிக்கான ஆய்வினை கேரளாவின் கொச்சின் பல்கலைக்கழகத்தில் மேற்கொண்டு கலாநிதியானார். மேலும் இரண்டு முறை தொடர்ச்சியாக சிறந்த ஆராய்ச்சிக்கான உபவேந்தர் விருதினை பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் முகாமைத்துவ தகவல் தொழில்நுட்பத் திணைக்களத்தின் தலைவர் எஸ். சப்றாஸ் நவாஸ் முகாமைத்துவத் தகவல் தொழில்நுட்பத்தில் பேராசிரியராகப் பதவி உயர்வு பெற்றுள்ளார். இவருக்கு இப்பதவியுயர்வு 12.08.2020 ஆம் திகதியிலிருந்து செயற்படும் வண்ணம் வழங்கப்படுகின்றது. முகாமைத்துவ வர்த்தக பீடத்தில் முகாமைத்துவ தகவல் தொழில்நுட்பத்தில் சிரேஷ்ட விரிவுரையாளராகக் கடமையாற்றிக் கொண்டிருக்கும் இவர் இப்பீடத்தின் இளம் பேராசிரியராகத் தனது 42 வது வயதில் பதவியுயர்வு பெறுவதோடு இலங்கையில் இத்துறையில் பேராசிரியர் பதவியைப் பெற்றுக்கொள்ளும் முதலாவது முஸ்லிம் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இலங்கைத் தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் வியாபார நிருவாகமானி பட்டத்தை Information Systems பிரிவில் விசேட கற்கையை மேற்கொண்டு முதற்தர சித்தியை பெற்றதுடன், இலங்கைத் தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில் தனது விஞ்ஞான முதுமானிப் பட்டத்தையும் Information Systems இல் கற்று அங்கும் மேன்மைச் சித்தியோடு சிறந்த திறமையாளருக்கான விருதையும் பெற்றவராவார். இவர் தனது ஆய்வுக்கட்டுரைகளை சர்வதேச ஆய்வரங்குகளில் சமர்ப்பித்து சிறந்த ஆய்வுக் கட்டுரைகளுக்கான விருதுகளை மலேசியா, இந்தியா போன்ற நாடுகளில் பெற்றுக் கொண்டதோடு கடந்த வருடம் ஐக்கிய ராச்சியத்திலுள்ள உலகப்புகழ்பெற்ற Emerald Publishing நிறுவனத்தின் ஆய்வுச் சஞ்சிகையில் பிரசுரிக்கப்பட்ட தனது ஆய்வுக் கட்டுரைக்கு சிறந்த ஆய்வுக்கட்டுரைக்கான விருதையும் பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் முகாமைத்துவபீடத்தின் இரு தடவைகள் பீடாதிபதியாகக் கடமையாற்றிய கலாநிதி எஸ். குணபாலன் முகாமைத்துவப் பேராசிரியராக 12.12.2019 ஆம் திகதியிலிருந்து செயற்படும் வண்ணம் பதவியுயர்த்தப்பட்டுள்ளார். இவர் தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் ஆரம்பகால விரிவுரையாளர்களில் ஒருவராவார் என்பதும்  குறிப்பிடத்தக்கது. நிருவாகமானி சிறப்புப் பட்டத்தினை யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்திலும் முதுமானிப் பட்டத்தினை களனிப் மற்றும் இந்தியாவின் அழகப்பா பல்கலைக்கழகத்திலும் பெற்று தனது கலாநிதிப் பட்டத்தினை இந்தியாவின் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்திலும் பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

No comments

Powered by Blogger.