“அனைத்து ஊடகங்களும் பொதுச் சொத்துகளே அன்றி, தனியார் சொத்து அல்ல" - கெஹெலிய
- மகேஸ்வரி விஜயனந்தன் -
தவறான செய்திகளை பரப்பும் வலைத்தளங்கள் குறித்து தெளிவான ஒழுங்குப்படுத்தல்கள் தேவையெனத் தெரிவித்த அமைச்சரும் அமைச்சரவைப் பேச்சாளருமான கெஹெலிய ரம்புக்வெல 15 வயது சிறுமி துஷ்பிரயோகம் தொடர்பான விடயத்தில் சட்டம் முறையாக அமுல்படுத்தப்படும் குற்றம் தொடர்பாக கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களின் சமூக நிலையைப் பொருட்படுத்தாமல் சட்டத்தை முறையாக அமல்படுத்த வேண்டும் என்றார்.
அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் நேற்று (13) இடம்பெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
தொடர்ந்து தெரிவித்த அவர் “இது போன்ற சம்பவங்கள் குடும்பங்களை அழிக்கக்கூடும் மக்களின் சுயமரியாதையையும் கூட சேதப்படுத்தும் என்பதால் இந்த நாட்டின் மக்களின் சுயமரியாதையைப் பாதுகாக்க இதுபோன்ற தவறான செய்தி வலைத்தளங்களை கண்டறிந்து ஒழுங்குபடுத்த வேண்டும் ”என்றார்.
“அனைத்து ஊடகங்களும் பொதுச் சொத்துகளே அன்றி தனியார் சொத்து அல்ல என்றும் ஏதேனும் சிக்கல் காணப்படுமாயின் அவற்றைத் தீர்க்க சட்ட ஆலோசனைகள் பெறப்பட்டு சட்டவரையறைக்குள் செயற்படுத்தப்படும்” என்றார்.
பொதுமக்களின் சொத்துகளைப் பயன்படுத்தி நாட்டின் அமைதியை இல்லாமல் செய்யப்படுமாயின் இனங்களுக்கிடையில் வேற்றுமை ஏற்படும் வகையில் செயற்படுவார்களாயின் அவ்வாறான சந்தர்ப்பங்களில் சட்டவரையறைக்குள் செயற்பட ஊடகத்துறை அமைச்சர் என்ற ரீதியில் தான் பின் நிற்கப் போவதில்லை என்றும் அவ்வாறு செயற்படுவது தமது பொறுப்பு மற்றும் கடமையாகும் என்றார்.
Post a Comment