Header Ads



இராணுவ அதிகாரி ஒருவர், ஜனாதிபதியாக இருப்பதில் தவறென்ன..?


(வீரகேசரி)

நாட்டின் ஜனாதிபதி ஒரு இராணுவ அதிகாரியாக இருப்பதிலும், பாதுகாப்பு அமைச்சர்  ஒரு இராணுவ அதிகாரியாக இருப்பதிலும் என்ன தவறு உள்ளது? ஜனாதிபதியினால் மக்கள் சேவையை முன்னெடுக்க நடவடிக்கை எடுக்கும் வேளையில், இராணுவம் அதற்கு முன்னின்று செயற்படும் நிலையில் இராணுவம் மயம் என்ற பெயரை சூட்டி விமர்சிப்பதை கைவிட வேண்டும் என அமைச்சர் ரோஹித அபேகுணவர்தன சபையில் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று வியாழக்கிழமை, ஜெனரல் சேர் ஜோன் கொத்தலாவலை தேசிய பாதுகாப்பு பல்கலைக்கழக சட்டமூலம் மீதான விவாதத்தில் உரையாற்றும் போதே அவர்கள் இதனை கூறினர்.

அவர் மேலும் கூறுகையில்,

மைத்திரிபால சிறிசேனவை ஜனாதிபதியாக்கி உருவாக்கி அரசாங்கத்தில் பாதுகாப்பு செயலாளராக ஹேமசிறி பெர்னாண்டோவை நியமித்தீர்கள், ஈஸ்டர் தாக்குதல் இடம்பெற்று அந்த இடத்திற்கு வந்த பாதுகாப்பு செயலாளர் கூறியது என்ன, தாக்குதல் நடத்தப்படும் என நினைத்தோம் .ஆனால் இவ்வாறு தாக்குதல் இடம்பெறும் என நினைக்கவில்லை என்றார். இவ்வாறான ஆட்சியாளர்கள் வேண்டுமா, இந்த தாக்குதல் தடுக்கப்பட்டிருந்தால் அப்பாவி பொதுமக்கள் பாதுகாக்கப்பட்டிருப்பார்கள்.பொருத்தமான நபர் இன்று ஆட்சியில் உள்ளார், அதுமட்டுமல்ல இராணுவத்தை பிரதிநிதித்துவப்படுத்திய தலைவர் ஒருவர் பிரதான ஆசனத்தில் அமர்ந்துள்ளதை ஏற்றுக்கொள்ள முடியாது சிலர் விமர்சித்து வருகின்றனர்.

நாட்டினை பாதுகாத்து, கொவிட் நிலைமைகளை சரியாக கட்டுப்படுத்தும் இராணுவத்தை இன்று விமர்சிக்கின்றனர். இன்று சவேந்திர சில்வாவை விமர்சிக்கும் நபர்கள் எவ்வாறு அன்று சரத் பொன்சேகாவை ஜனாதிபதி வேட்பாளராக நியமிக்க தீர்மானம் எடுத்தீர்கள்.

இன்று நாடே கொவிட் நிலைமையில் பாதிக்கப்பட்டுள்ள நிலையில்,மக்கள் அனாதரவாகியுள்ள நிலையில்  சுகாதார துறையினர் போராட்டம் நடத்துகிறனர். எப்போதுமே இல்லாத அளவிற்கு நாட்டில் போராட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளது. அரசாங்கத்தை நெருக்கடிக்குள் தள்ளும் முயற்சிகளே இவை அனைத்தும். இதனால் பாதிக்கப்படுவது வேறு யாருமல்ல எமது அப்பாவி மக்களே.

அதனை தவிர்க்க இராணுவத்தை பயன்படுத்தி கொவிட் தடுப்பு சேவைகளை முன்னெடுக்க நடவடிக்கை எடுத்தது தவறா? உங்களில் ஒருவர் கொவிட் வைரஸ் தொற்றில் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் அவருக்கு சிகிச்சை வழங்கமுடியாத நிலையில் இராணுவம் உதவி செய்வதை நீங்கள் மறுப்பீர்களா?

மக்கள் சேவையை முன்னெடுக்க நடவடிக்கை எடுக்கும் வேளையில் இராணுவம் அதற்கு முன்னின்று செயற்படும் நிலையில் இராணுவம் மயம் என்ற பெயரை சூட்டி விமர்சிக்கிறனர். நாடு முன்னேரே புதிய கொள்கைத்திட்டங்கள் உருவாக்கப்பட வேண்டும் என்பதை ஏற்றுக்கொள்ள வேண்டும். கொத்தலாவல பல்கலைக்கழகம் அதற்கு அவசியமான ஒன்றாகும். அதனை சிலர் எதிர்கின்றனர்.

நாட்டின் ஜனாதிபதி ஒரு இராணுவ அதிகாரியாக இருப்பதில் என்ன தவறு உள்ளது? பாதுகாப்பு செயலாளர் இராணுவ அதிகாரியாக இருப்பதும், பாதுகாப்பு அமைச்சர் ஒரு இராணுவ அதிகாரியாக இருப்பதும் நாட்டுக்கு பிரச்சினையா என கேள்வி எழுப்புகின்றேன். இதில் ஒரு சில கட்சிகள் தமது அரசியலுக்காக இவ்வாறான பிரசாரங்களை செய்கின்றனர். 

No comments

Powered by Blogger.