ஹர்திக் பாண்ட்யா குறித்து, சாமிக்க கருணாரத்னவின் நெகிழ்ச்சிப் பதிவு
இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கு இடையிலான முதலாவது இருபதுக்கு 20 போட்டி ஆரம்பமாவதற்கு முன்னதாக இடம்பெற்ற பயற்சிகளின்போது, இந்திய அணி சகலதுறை வீரர் ஹர்திக் பாண்ட்யா இலங்கை அணியின் சகலதுறை வீரர் சாமிக்க கருணாரத்னவுக்கு கிரிக்கெட் துடுப்பாட்ட மட்டை ஒன்றை பரிசளித்துள்ளார்.
இந்த துடுப்பை கொண்டே நேற்றைய போட்டியில் சாமிக்க விளையாடியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பில் இலங்கை வீரர் சாமிக்க கருணாரத்ன தனது உத்தியோகபூர்வ இன்ஸ்டாகிராம் கணக்கில் பதிவொன்றை இட்டுள்ளார்.
"கிரிக்கெட் போட்டியில் நான் முன்மாதிரியாகக் கருதும் ஒருவரான ஹர்திக் பாண்ட்யாவிடமிருந்து துடுப்பாட்ட மட்டையை பெற்றுக் கொண்டதையிட்டு மகிழ்ச்சியடைகிறேன். உங்களது மட்டையை கொடுத்தமைக்கு மிக்க நன்றி. குறிப்பாக எனது முதலாவது இருபதுக்கு 20 போட்டியில் கிடைத்த இந்த பாராட்டு எனக்கு விசேடமானது. இந்த நாளையும், உங்களது மனித நேயத்தையும் எனது வாழ்நாளில் மறந்துவிடமுடியாது" எனக் குறிப்பிட்டுள்ளார்.
ஹர்திக் பாண்ட்யா இந்தியா அணியின் சகலதுறை வீரராக மிகவும் சிறப்பான திறமைகளை வெளிப்படுத்திவரும் அதேவேளை, தனது வேகமான பந்துவீச்சை போலவே வேகமான துடுப்பாட்டத்தாலும் ரசிகர்களை கவர்ந்துள்ளார்.
இதேவேளை, நேற்றைய போட்டி ஆரம்பமாவதற்கு முன்னர் இலங்கை தேசிய கீதம் இசைக்கப்பட்டபோது, ஹர்திக் பாண்ட்யா இலங்கை தேசிய கீதத்தை பாடும் வகையில் வாயசைத்த காணொளி தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment