Header Ads



பேஸ்புக்கில் சேறு பூசியதாக இருவரை கடத்தி, கைளில் ஆணிகளை அறைந்த பூசாரி கைது - ஆயுதங்களும் பிடிபட்டது


- ஷேன் செனவிரத்ன -

இருவரை கடத்திச்சென்று, அவ்விருவரின் உள்ளங்கைகளில் ஆணிகளை அறைந்ததாகக் கூறப்படும் பூசாரி, சற்றுமுன்னர் கைது செய்யப்பட்டார்.

தலைமறைவாகியிருந்த பூசாரி, கண்டி –பலகொல்ல பொலிஸ் நிலையத்தில் சரணடைந்தார். அதன்பின்னர் அவர் கைது செய்யப்பட்டுள்ளார். எனினும், ஏனையோரை கைது செய்வதற்கான விசாரணைகளை பொலிஸார் முடுக்கிவிட்டுள்ளனர்.

அக்குழுவைச் சேர்ந்த மேலுமிருவர், ஏற்கெனவே, கைது செய்யப்பட்டிருந்தனர்.

  அத்துடன், பாதிக்கப்பட்ட இருவரையும் கடத்துவதற்குப் பயன்படுத்தப்பட்ட வானும் கைப்பற்றப்பட்டுள்ளது என விசேட அதிரடிப்படையினர் அறிவித்திருந்தனர்.  

இதேவேளை, இந்தச் சம்பவத்துடன் இன்னும் 10க்கும் மேற்பட்டவர்களுக்கு தொடர்பு இருக்கலாம் என சந்தேகிக்கும் விசேட அதிரடிப்படையினர், அவர்களைத் தேடி வலைவிரித்துள்ளதாக தெரிவித்தனர்.  

கண்டி- பலகொல்ல பிரதேசத்தை சேர்ந்தவர்களே, அவ்விருவரையும் அம்பிட்டி பகுதிக்குக் கடத்திச் சென்று, கடந்த 25ஆம் திகதியன்று இவ்வாறு துன்புறுத்தியுள்ளனர்.

பேஸ்புக்கில் சேறு பூசியதாகக் கூறப்படும் இவ்விரு இளைஞர்களையும், தன்னுடைய வீட்டுக்கு அந்த பூசாரி அழைத்துள்ளார். அதன்பின்னர், அம்பிட்டிய பிரதேசத்துக்கு அழைத்துச் சென்று, அங்கிருந்த சிலருடன் சேர்ந்தே அவ்விருவரையும் கடுமையாக தாக்கிவிட்டு, இவ்வாறு மிகக் கொடூரமான முறையில், ஆணிகளை ஏற்றித் துன்புறுத்தியுள்ளனர்.

சம்பவத்தை அடுத்து அந்தப் பூசாரியும் ஏனையோரும் அங்கிருந்து தப்பியோடிவிட்டனர் என்றும் பிரதேசத்திலிருந்தும் தலைமறைவாகியுள்ளனர் எனத் தெரிவித்த பலகொல்ல பொலிஸார், மேலதிக விசாரணைகளை முடுக்கிவிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

கைது செய்யப்பட்ட இவ்விருவரும் அம்பிட்டிய கால்தென்ன பிரதேசத்தில் பற்றைக்காட்டுக்குள் மறைந்திருந்த போதே கைது செய்யப்பட்டனர். ஹெரோய்ன் போதைப்பொருளுக்கு அடிமையான இவ்விருவரும் கைது செய்யப்படும் போது, ஹெரோய்ன் பயன்படுத்தியிருந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.