Header Ads



உய்குர் முஸ்லிம்களுக்கு எதிராக அதிர்ச்சியூட்டும் மனித உரிமை மீறல் நிகழ்வுகள் - பிறப்புவீதம் 48.74 சதவீதம் குறைந்தது


சீனாவின் ஜின்ஜியாங் மாகாண உய்குர் மக்களுக்கு எதிரான சீனாவின் உரிமை மீறல்களை மதிப்பிடுவதற்காக லண்டனில் அமைக்கப்பட்டுள்ள மக்கள் தீர்ப்பாயத்தை சீனா முழுமையாக நிராகரித்து கண்டம் செய்திருந்தது. ஆனால் இப்போது துருக்கியை பூர்வீகமாகக் கொண்ட முஸ்லிம்களுக்கு எதிராக அதிர்ச்சியூட்டும் மனித உரிமை மீறல் நிகழ்வுகள் குறித்து முகவரகமொன்று சான்றாதாரங்களை கண்டறிந்துள்ளது.

அவுஸ்திரேலிய சிந்தனைக் குழு, அவுஸ்திரேலிய மூலோபாயக் கொள்கை நிறுவனம், ஆகியன மேற்கொண்ட ஆய்வொன்றில் மேற்கு சீனாவில் உள்ள ஜின்ஜியாங்; மாகாணத்தில், 2017 மற்றும் 2019க்கு இடையில், உய்குர் மக்களுக்கு எதிரான கடுமையான பிறப்பு கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை சீனா மேற்கொண்டுள்ளது. இதனால் இக்காலப்பகுதியில் உள்ள பிறப்பு விகிதங்களில் மிகக் கடுமையான சரிவு ஏற்பட்டுள்ளது. இந்தக் விடத்தினை ஆய்வாளர்கள் மற்றும் அறிக்கைகள் உறுதிப்படுத்தியிருக்கின்றன.

குறிப்பாக, உய்குர்கள், கசாக் மற்றும் பிற முஸ்லிம் இன சிறுபான்மையினரின் செறிவுள்ள பகுதிகளில் பிறப்புவீதம் 48.74 சதவீதம் குறைந்துள்ளதாக அவுஸ்திரேலிய நிறுவனத்தின் அறிக்கை சுட்டிக்காட்டுகின்றது. 2017 மற்றும் 2018க்கு இடையில், பெரும்பாலும் சிறுபான்மை மாவட்டங்களில் பிறப்புவீதம் 43.7 சதவீதமாக குறைந்துள்ளது. அதாவது 160,000க்கும் குறைவான குழந்தைகளே பிறந்துள்ளன. இந்த நிலைமையானது சீனாவின் ஹான் பெரும்பான்மையினராக வசிக்கும் மாவட்டங்களில் நிகழ்ந்த பிறப்புக்களுடன் ஒப்பிடுகையில் சிறிது குறைவான சதவீதமாகவே உள்ளது.

கடந்த மே மாதம் சர்வதேச செய்தி நிறுவனமான ஏ.பியின் இணை ஆசிரியர் நாதன் ருசர் வெளியிட்ட அறிக்கையில், ஐக்கிய நாடுகள் சபையானது, உலகளாவிய ரீதியில் கருவுறுதல் புள்ளிவிவரங்களை சேகரிக்கத் தொடங்கியதிலிருந்து 71 ஆண்டுகளில் பிறப்பு வீதவீழ்ச்சியானது இவ்வாறு தீவிரமாகியிருக்கவில்லை என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அத்துடன் சிரியாவில் நடைபெற்ற உள்நாட்டுப் போர், ருவாண்டா மற்றும் கம்போடியாவில் நடந்த இனப்படுகொலைகள் காலத்தில் ஏற்பட்ட வீழ்ச்சியையும் விட அதிகம் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

2020 ஆம் ஆண்டில் ஜேர்மனிய ஆராய்ச்சியாளர் அட்ரியன் ஜென்ஸின் அறிக்கையில், சீன அரசாங்கம் உய்குர்களின் பிறப்பு வீதங்களை குறைக்கும் வகையில் கருக்கலைப்பு மற்றும் கருக்களை கட்டுப்படுத்தும் சாதனங்களைப் பயன்படுத்துதல் மற்றும் மூன்று அல்லது அதற்கு மேற்பட்ட குழந்தைகளை பெற்றுக்கொள்பவர்களுக்கு அபராதம் விதித்தல் அல்லது தடுத்து வைத்தல் ஆகிய நடவடிக்கைகளை மேற்கொள்வதாக கண்டறியப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை, அவுஸ்திரேலிய அறிக்கையில் உள்ள பல புள்ளிவிவரங்கள் சீன அரசாங்க புள்ளிவிவரங்களை அடிப்படையாகக் கொண்டவை என்பதை ஏ.பி செய்தி நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளது. அந்த அறிக்கையின்படி, 2017 ஏப்ரலில் ஜின்;ஜியாங்கின் உயர்அதிகாரிகள், சட்டவிரோத பிறப்புக்களை திறம்பட கட்டுப்படுத்துவதற்கு அழைப்பு விடுத்தனர் எனக் கூறப்படுகின்றது. குறிப்பாக தெற்கு ஜின்ஜியாங்கில், பெரும்பாலான உய்குர்கள் வசிக்கின்றனர். அப்பகுதியில் இவ்விதமான நடவடிக்கைகள் தீவிரமாகின என்றும் கூறப்பட்டும் உள்ளது.

ஜின்ஜியாங் பிராந்தியத்தில் ஒரு பிரிவினைவாத இயக்கத்தின் வளர்ச்சியைக் கட்டுப்படுத்துவதை மையப்படுத்தி சீனா சுமார் நான்கு ஆண்டுகளுக்கு முன்பு உய்குர்கள் மீது தனது ஒடுக்குமுறையைத் ஆரம்பித்திருந்தது. அதனடிப்படையில் ஒன்றுகூடுவதற்கான எதிராக கடுமையான நடவடிக்கைகளை முன்னெடுத்ததோடு, ஒரு மில்லியனுக்கும் அதிகமான மக்களை புதிதாக கட்டப்பட்ட முகாம்கள் மற்றும் சிறைச்சாலைகள் ஆகியவற்றுக்குள் வைத்தது.

சீனா இவ்விதமான ஒடுக்குமுறையை கையாண்டமைக்கான உண்மையான காரணம், உய்குர்கள் வாழும் தன்னாட்சி பிராந்தியத்தை ஊடறுத்துச் செல்லும் மூலோபாயத்திட்டமான, சீனா,பாகிஸ்தான் பொருளாதார தாழ்வாரத்தின் பாதுகாப்பை உறுதி செய்வதாக இருக்கலாம் என்று ஆய்வாளர்கள் கூறுகிறார்கள். அதன் காரணமாகவே, கிழக்கு துருக்கியின் தனி மாநிலத்திற்கான கோரிக்கையை விடயத்திலும் சீனா முரண்படுகின்றது என்றும் அவர்கள் சுட்டிக்காட்டுகின்றார்கள்.

ஜின்ஜியாங்கில் ஹான் இனத்தவர்களின் ஆதிக்கத்திற்கான சீனாவின் முயற்சிகளையும், உய்குர் மக்களின் கலாசார ஒருங்கிணைப்புக்கு எதிரான செயற்பாடுகளையும் உய்குர்கள் தீவிரமாக எதிர்க்கிறார்கள்; என்று பி.பி.சி. அறிக்கையிட்டுள்ளது. அத்துடன் அந்த அறிக்கையில் பிராந்தியத்தின் மக்கள் தொகையில் 40சதவீதம் பேராகவுள்ள ஹான் சீனர்கள், உய்குர்களின் சிறப்பான வேலைகளையும், வணிகத்தையும் கட்டுப்படுத்துகிறார்கள் என்றும் கூறப்பட்டுள்ளது.

உய்குர்கள், கசாக் மற்றும் பிற துருக்கிய முஸ்லிம் மக்களுக்கு எதிராக நடந்துகொண்டிருக்கும் அட்டூழியங்கள் மற்றும் இனப்படுகொலை குறித்து விசாரணைகளை முன்னெடுப்பதற்காக ஒரு சுயாதீனமான மக்கள் தீர்ப்பாயத்தை நிறுவுமாறு பிரிட்டிஷ் உயிரியலாளர் சேர் ஜெஃப்ரி நைஸ் கியூசியை உலக உய்குர் காங்கிரஸ் முறையாக 2020 ஜுனில் கோரியது.

அந்தக் கோரிக்கைக்கு அமைவாக லண்டனில் திறந்த தீர்ப்பாயமொன்று 2020செப்டம்பரில் தொடங்கப்பட்டது. உய்குர் மக்களுக்கு எதிரான சீனாவின் உரிமை மீறல் செயற்பாடுகள் இனப்படுகொலைக்கு உட்பட்டதா என்பதை மதிப்பீடு செய்வதற்காக இவ்வாறு ஆரம்பிக்கப்பட்டுள்ள திறந்த மக்கள் தீர்ப்பாயம் சீனாவுக்கு பெரும் சங்கடமான நிலைமைகளை ஏற்படுத்தியுள்ளது.

சீன மக்கள் குடியரசை சர்வதேச நீதிமன்றத்தின் முன் கொண்டுவர முடிந்திருந்தால், மக்கள் தீர்ப்பாயத்தை நிறுவவேண்டிய அவசியமில்லை என்று உய்குர் தீர்ப்பாய வலைத்தளம் கூறுகிறது. ஆனால் சீனாவை சர்வதேச நீதிமன்றத்தின் முன் கொண்டுவருவதற்கு ஜெனிவா ஒப்புதல் அளித்தாலும், ஹேக் நீதிமன்றத்தின் அதிகார வரம்பானது சீனாவுக்கு சாதகமான நிலைமைகளை வழங்குவதாக உள்ளது.

உய்குர்கள், கசாக் மற்றும் பிற துருக்கிய முஸ்லிம் மக்களை வதை முகாம்களில் தடுத்து வைத்தல், அவர்களை சித்திரவதை செய்தல், கற்பழிப்பு மற்றும் பிற பாலியல் வன்முறைகளுக்கு உட்படுத்தல், அடிமைப்படுத்துதல், கட்டாயமாக கருத்தடைகளைச் செய்தல், வலிந்து நாடு கடத்தல், நிரந்தர கருத்தடைகள் மற்றும் ஹான் இன சீனர்களை உய்குர்களின் வீடுகளில் வலிந்து உட்புகுத்தல் ஆகிய செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுவதாக உய்குர் தீர்ப்பாய வலைத்தளம் குறிப்பிடுகின்றது. இவ்விதமாக தீர்ப்பாயத்தின் முன் தீர்க்கக்கூடிய பிரச்சினைகளை நீதிமன்றத்தின் ஊடாகவோ அல்லது வேறு வழிகளிலோ தீர்க்க முடியுமென்று நம்பவில்லையென உய்குர் தீர்ப்பாய வலைத்தளம் கூறுகிறது.

இதேநேரம், லண்டனில் உருவாக்கப்பட்டுள்ள தீர்ப்பாயத்தின் முன் சாட்சிகளை வழங்குவற்காக ஆஜரான சீன தடுப்பு முகாம்களில் இருந்து தப்பிப்பிழைத்தவர்களில் சிலர் குறிப்பிடுகையில், ‘இளைஞர்கள் கைதிகளாக சிறைபிடிக்கப்பட்ட நிலையில் காணாமல் போயுள்ளதாகவும், உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைகளை மேற்கொள்ளப்பட்டதால் உயிழந்துள்ளதாகவும், அகற்றப்பட்ட உறுப்புக்கள் சீனாவின் கறுப்பு சந்தை வர்த்தகத்திற்கு பயன்படுத்தப்படுவதாகவும் கூறியுள்ளனர். அத்துடன், குறிப்பிட்ட இடத்தில் 50வரையான கைதிகள் தடுத்து வைக்கப்பட்டதாகவும் அவர்களுக்கு அறியப்படாத மருந்துகள் கொடுக்கப்பட்டு கடுமையான உடல் தண்டனைக்கு உட்படுத்தப்பட்டனர் என்றும் சாட்சியத்தில் சுட்டிக்காட்டியவர்கள் மிக முக்கியமாக, ஆறரை மாத கர்ப்பிணி கருக்கலைப்பு செய்வதற்கு நிர்பந்திக்கப்பட்டதாகவும் குறிப்பிட்டனர்.

உய்குர்கள் தொடர்பாக லண்டனில் அமைக்கப்பட்டுள்ள தீர்ப்பாயத்திற்கு தடைகளை விதிக்கும் அதிகாரம் இல்லை, ஆனால் மக்கள் சீனக் குடியரசுக்கு எதிராக தீர்ப்பாயத்தில் முன்வைக்கப்பட்டுள்ள மேற்படியான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டால் அது இனப்படுகொலைக்கு சமமாக இருக்கும் என்பதை தீர்ப்பாயம் உறுதி செய்யும். அவ்விதமான தீர்ப்பாயம் உறுதி செய்யும் பட்சத்தில் சர்வதேச நாடுகள், மாநிலங்கள், நிறுவனங்கள் தீர்ப்பாயத்தின் அறிவிப்பை அல்லது அறிக்கையை மையப்படுத்தி சீனாவுக்கு எதிரான வர்த்தகம் மற்றும் பிறபொருளாதர தடைகளை விதிக்க முடியும்.

அவ்வாறிருக்கையில் இந்த விடயம் சம்பந்தமான விசாரணைகளை முன்னெடுக்கும் முகமாக தீர்ப்பாயம் இரண்டு அமர்வுகளைத் திட்டமிருந்தது. அதன் முதல் அமர்வு கடந்த ஜூன் 4 ஆம் திகதியிருந்து ஜூன் 7 வரை நடைபெற்றது. இரண்டாவது அமர்வு எதிர்வரும் செப்டம்பர் 10 ஆம் திகதி முதல் செப்டம்பர் 13ஆம் திகதி வரை நடத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.

லண்டன் தீர்ப்பாயத்திற்கு எந்தவிதமான முக்கியத்துவமும் வழங்குவதில்லை என்று சீனா சீனா பாசாங்கு செய்தாலும், முதல் அமர்வின் நடவடிக்கைகளை சீனா தீவிரமாக கவனித்தது, அதுமட்டுமன்றி ஜூன் 9ஆம் திகதியன்று நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் சிலரை உறவினர்களாக உருவாக்கிய சீனா, லண்டன் தீர்ப்பாயத்தின் முன் சட்சியமளித்தவர்கள் கூறியவை பொய்யான விடயங்கள் என்று குறிப்பிட்டு கண்டனம் வெளியிடவும் செய்தது.

உய்குர்கள் மீதான மனிதாபிமானமற்ற நடத்தைகள் காரணமாக சீனாவுக்கு எதிராக சர்வதேச நடவடிக்கைகள் ஏற்கனவே ஆரம்பமாகியிருந்தது. ஐரோப்பிய ஒன்றியம், பிரித்தானியா, அமெரிக்கா மற்றும் கனடா ஆகியவற்றின் ஒருங்கிணைந்த முயற்சியில் சீனாவின் அதிகாரிகள் மீது பொருளாதாரத் தடைகள் விதிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக, 1989 இல் தியனன்மென் சதுக்க படுகொலைக்குப் பின்னர் ஐரோப்பிய ஒன்றியம் மனித உரிமைகள் பிரச்சினைகளை காரணம் காண்பித்து சீனா மீது பொருளாதாரத் தடைகளை விதித்தது இதுவே முதல் முறையாகும்.

கடந்த ஏப்ரல் மாதத்தில், பிரித்தானிய பாராளுமன்றம் பெல்ஜியம், நெதர்லாந்து மற்றும் கனடாவில் உள்ள சட்டமன்றங்களை பின்பற்றியது, உய்குர்களுக்கு எதிரான பீஜிங்கின் கொள்கைகளை இனப்படுகொலை மற்றும் மனிதகுலத்திற்கு எதிரான குற்றம் என்று அறிவித்தது. முன்னாள் அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் மைக் பொம்பியோ, ஜின்ஜியாங் முஸ்லிம்கள் மற்றும் இன சிறுபான்மையினருக்கு எதிரான சீனாவின் கொள்கைகள் மனிதகுலத்திற்கும் இனப்படுகொலைக்கும் எதிரான குற்றங்கள் என்று பதவி ஏற்பதற்கு முன்னதாகவே கூறியிருந்தார். அதேநேரம், அவருடைய பதவியை தற்போது ஏற்றுக்கொண்டுள்ள அண்டனி பிளிங்கன், பதவியை ஏற்றுக்கொண்ட முதல் நாளிலேயே பொம்பியோவின் கருத்தேயே பின்பற்றி மீண்டும் வலியுறுத்தினார்.

அதாவது, பூகோள பொருளாதாரத் தடைகள் திட்டத்தின் மூலம், கடுமையான மனித உரிமை துஷ்பிரயோகத்தை எதிர்ப்பதற்கான உலகளாவிய முயற்சிகளில் வலுவான தலைமைப் பங்கை வகிக்க அமெரிக்கா உறுதிபூண்டுள்ளது. மக்கள் சீனக் குடியரசின் குற்றங்களுக்கு உடனடியாக முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்று அழைப்பு விடுப்பதில் உலகெங்கிலும் உள்ள எங்களின் கூட்டாளிகளுடன் நாங்கள் தொடர்ந்து ஒருங்கிணைந்து நிற்போம் என்று பிளிங்கன் தனது உரையில் குறிப்பிட்டார்.

ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் அமெரிக்கா, அவுஸ்திரேலியா, நியூசிலாந்து மற்றும் கனடா ஆகியவை கடந்த மார்ச் மாதம் வெளியிட்ட கூட்டறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது, ‘சீனாவின் மனித உரிமை மீறல்கள் குறித்து கவனத்தை ஈர்க்க நாங்கள் தொடர்ந்து ஒன்றாக ஒற்றுமையாக நிற்கிறோம், ஜின்ஜியாங்கில் பாதிக்கப்படுபவர்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்று நாங்கள் கூட்டாக அழைக்கிறோம் என்றும் பிளிங்கன் தனது உரையில் கோரியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

டெய்லி ஏசியனேஜ்ஜுக்காக மருஃபா மஜார்

No comments

Powered by Blogger.