Header Ads



இலங்கையின் மாற்றத்துக்கான பயணத்தில் ஒன்றிணையுமாறு, ஜனாதிபதி சர்வதேச முதலீட்டாளர்களுக்கு அழைப்பு


 முதலீடு செய்வதன் மூலம், மாற்றத்துக்கான பயணத்தில் இணைந்துகொள்ளுமாறு, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, சர்வதேச முதலீட்டாளர்களுக்கு அழைப்பு விடுத்தார்.

உலகில் வேகமாக வளர்ந்துவரும் பிராந்தியங்களில், முக்கிய சேவை மையமாக துறைமுக நகரத்தை மாற்றுவதே அரசாங்கத்தின் நோக்கம் மற்றும் எதிர்பார்ப்பாகும். இங்கு முதலீடு செய்வதன் மூலம், துறைமுக நகரம் வழங்கும் தனித்துவமான பயன்களையும் பல்வேறு வாய்ப்புகளையும் முழுமையாக பயன்படுத்த, அனைத்து நாடுகளிலும் உள்ள வர்த்தகத் தலைவர்களுக்கு வாய்ப்புகள் உருவாகி இருப்பதாகவும் ஜனாதிபதி அவர்கள் சுட்டிக்காட்டினார்.

முதலீட்டுச் சபை, இலங்கை வர்த்தகச் சங்கம் மற்றும் கொழும்பு பங்குச் சந்தை ஆகியன ஒன்றிணைந்து  ஏற்பாடு செய்த, “2021 இலங்கை முதலீட்டு மன்றம்” என்ற தலைப்பிலான மூன்று நாள் அமர்வை இன்று (07) முற்பகல் ஆரம்பித்து வைத்து உரையாற்றும்போதே, ஜனாதிபதி அவர்கள் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். 

இம்மன்றத்தின் மூலம், இலங்கையில் நேரடி வெளிநாட்டு முதலீடுகள் மற்றும் மூலதனச் சந்தை வாய்ப்புகள் தொடர்பான முழுமையான அனுபவம் மற்றும் விரிவான புரிந்துணர்வை வழங்குவதற்கு எதிர்பார்க்கப்படுகின்றது. மன்றத்தின் இரண்டாம் நாளில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்களும் மூன்றாவது நாளில், நிதி, மூலதனச் சந்தை விவகார இராஜாங்க அமைச்சர் அஜித் நிவாட் கப்ராலும் அங்குரார்ப்பண நிகழ்வில் கலந்துகொள்ள உள்ளனர். 

2030ஆம் ஆண்டுக்குள், இலங்கையின் தேசிய உற்பத்தியைத் தற்போதைய மட்டத்திலிருந்து தனிநபர் மொத்தத் தேசிய உற்பத்தி 8000 அமெரிக்க டொலர்கள் வரை இரட்டிப்பாக்குவதற்காக, துரித பொருளாதார வளர்ச்சித் திட்டமொன்றைத் செயற்படுத்தியுள்ளதாக, ஜனாதிபதி அவர்கள் சுட்டிக்காட்டினார். தனித்துவமான புவிசார் மூலோபாய நிலை, அரசியல் ஸ்தீரத்தன்மை, வலுவான நிறுவனங்கள் மற்றும் சமூக உட்கட்டமைப்பு, கல்வி அறிவு மற்றும் திறமைவாய்ந்த தொழிற்படை என்பன, இந்நாட்டின் சக்திகளாகும் எனச் சுட்டிக்காட்டிய ஜனாதிபதி அவர்கள், அரசாங்கத்தின் வளர்ச்சி இலக்கை அடைவதற்கான தளத்தை அமைப்பதற்கு, இவற்றைப் பயன்படுத்துவதாகவும் குறிப்பிட்டார். 

கிழக்கையும் மேற்கையும் இணைக்கும் மையமாகவே பல நூற்றாண்டுகளாக இலங்கை இருந்து வருகின்றது. கொழும்பு மற்றும் ஹம்பாந்தோட்டைத் துறைமுகங்களில் காணப்படுகின்ற சர்வதேச தரத்திலான வசதிகள், இந்து சமுத்திரத்தில் பயணிக்கும் மிகப் பெரிய கொள்கலன் கப்பல்களுக்கு, செயற்திறன்மிக்க சேவைகளை வழங்கக்கூடிய இயலுமைகளைக் கொண்டுள்ளன. 

பிராந்தியத்தின் கப்பல் போக்குவரத்து மற்றும் தங்குமிட மையமாக இலங்கை நன்கு நிலை நிறுத்தப்பட்டுள்ளதால், இத்துறைகளில் முதலீடு செய்வதற்கு அதிக வாய்ப்புள்ளதாக, ஜனாதிபதி அவர்கள் சுட்டிக்காட்டினார். 

ஆரோக்கியமான மற்றும் சேதனமுறை விவசாயத்தை ஊக்குவிப்பதில், அரசாங்கம் ஓர் உறுதியான கொள்கை நிலைப்பாட்டை எடுத்துள்ளது. ஆரோக்கியத்தில் கரிசனை கொண்டுள்ள பிராந்திய மக்களுக்கு, உயர்தரமான விவசாய உற்பத்திகளை வழங்க இலங்கையால் முடியும். இச்சூழலில், புதிய தொழிநுட்பங்கள் மற்றும் விவசாய முறைமைகளில் முதலீடு செய்வதற்கு அதிக வாய்ப்புகள் உருவாகியுள்ளதாகவும், ஜனாதிபதி அவர்கள் குறிப்பிட்டார். 

2030ஆம் ஆண்டுக்குள், தேசிய மின்சாரத் தேவையில் 70 சதவீதத்தை மீள்பிறப்பாக்கச் சக்தி மூலங்களில் இருந்து உற்பத்தி செய்வதே அரசாங்கத்தின் இலக்கு. மின்சார விநியோகத்தை அதிகரித்தல் மற்றும் தொழில்மயமாக்களை மேம்படுத்துவதற்கு, பாரியளவிலான சூரிய, காற்றாலை மின்திட்டங்களில் முதலீடுகளைச் செய்யவும், முதலீட்டாளர்களுக்கு ஜனாதிபதி அவர்கள் அழைப்பு விடுத்தார். 

பல உயர் தொழிநுட்பக் கைத்தொழில்களில் பயன்படுத்தப்படும் பல்வேறு மூலப்பொருட்கள் இலங்கையில் உள்ளன. இந்த வளங்களுக்குப் பெறுமதி சேர்க்கின்ற உற்பத்திக் கைத்தொழிலில் முதலீடு செய்வதை அரசாங்கம் ஊக்குவிப்பதோடு, எதிர்காலத்தில் உலகளாவிய சந்தைக்கு இலத்திரனியல் உதிரிப்பாகங்களை உற்பத்தி செய்யும் பாதையை நோக்கிப் பிரவேசிப்பதற்கு எதிர்பார்ப்பதால், அதற்காகவும் முதலீட்டாளர்களுக்கு வாய்ப்புகள் உள்ளதாக ஜனாதிபதி அவர்கள் மேலும் குறிப்பிட்டார். 

உலகம் பூராகவும் வசிக்கின்ற பிரதான முதலீட்டாளர்களில் 3500க்கும் மேற்பட்டோர், காணொளி தொழிநுட்பத்தினூடாக இந்த மூன்று அமர்வுகளில் கலந்துகொள்கின்றனர். வெளிநாட்டு முதலீட்டாளர்களைக் கவர்வதற்காக நடைபெறும், ஆசியாவின் முதலாவது மற்றும் பாரிய வழிகாட்டல் மன்றம் இதுவென்று ஏற்பாட்டாளர்கள் குறிப்பிட்டனர். ஐரோப்பா மற்றும் அமெரிக்கத் தொழில் முயற்சியாளர்களின் வசதி கருதி, இரண்டாவது அமர்வாக மன்றத்தை ஔிபரப்புச் செய்யவும் திட்டமிடப்பட்டுள்ளது. 

நீதி அமைச்சர் அலி சப்ரி, நகர அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் நாலக்க கொடஹேவா, இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பக்லே (Gopal Baglay), தென்கொரிய தூதுவர் வுன்ஜின் ஜியோன்க் (Woonjin Jeong), ஜப்பான் தூதுவர் அக்கிரா சுக்கியாமா (Akira Sugiyama),  சீனத் தூதுவர் சீ செங் ஹொங், (Qi Zhen hong),  ஐரோப்பிய சங்கத்தின் பிரதிநிதிக்குழுவின் பிரதித் தலைவர் தோர்ஸ்டன் பார்க்பிரேட் (Thorsten Bargfrede) மற்றும் அமெரிக்கத் தூதரக அலுவலகத்தின் பிரதம தூதரக உத்தியோகத்தர் மாட்டின் கெலி (Martin Kelly) ஆகியோர் வளவாளர்களாக அமர்வில் கலந்துகொண்டனர்.

 

No comments

Powered by Blogger.