இந்த வதந்திகளை இவ்வாறான மரணத்திற்குப் பின்பும், நீங்கள் நம்புவீர்கள் என்றால் உங்களை யாராலும் திருத்த முடியாது
- Dr. A.H.M. அஸ்மி ஹசன் - காத்தான்குடி -
இன்று எமது ஊரைச்சேர்ந்த இளம் வயதுடைய சகோதரர் ஒருவர் கொவிட் தொற்று காரணமாக இறந்தமை எம் எல்லோர் மத்தியிலும் மிகக் கவலையை ஏற்படுத்தியுள்ளது.
கொரோனா தொற்றானது எமது மட்டக்களப்பு மாவட்டத்தில் பரவியதன் காரணமாக பல நோயாளிகள் நாளுக்கு நாள் அதிகரித்துச் செல்வதை எமது கண்கூடாக காணக்கூடியதாயுள்ளது.
இந்த நோயானது எல்லா வயதினரையும் பாதிப்பதால் இறப்புகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கின்றது.
இந்த வகையான மரணங்களில் இருந்து நாம் கற்றுக்கொண்ட படிப்பினைகள் என்ன என்பதை கட்டாயம் நாம் சிந்திக்க கடமைப்பட்டுள்ளோம்.
1. “ நான் ஹெல்தியாத்தானே இருக்கன், நம்மல கண்டா கொரோனா அடுத்த வழியால ஓடிடும்” இப்படி சில இளைஞர்கள் சொல்வதை பல தடவை கேட்டிருப்பீர்கள்.
எமது இளைஞர்களே நீங்கள்தான் எமது எதிர்கால தலைவர்கள். இந்த சகோதரனின் மரணம் எம் எல்லோரையும் மாற்றவில்லை என்றால் நாம் எதிர்காலத்தில் பல இளைஞர்களை இழக்கலாம். தயவு செய்து கவனமாக இருந்து உங்களையும் உங்கள் குடும்பத்தையும் காத்துக்கொள்ளுங்கள்.
2. “ அந்த டொக்டர் கொரோனாவுக்கு மருந்து குடுக்காராம், வீட்ட வெச்சு பார்க்காராம், நிறைய பேரை சுகப்படுத்தினயாம்” என்று பலர் பேசிக்கொள்வதை அறியக்கூடியதாயுள்ளது. ஒரு விடயத்தை கட்டாயம் நான் கூறியே ஆக வேண்டும்.
இதுவரை எமது ஊரில் அனேகமாக மரணமானவர்கள் பலமுறை ப்ரைவெட்டில் அல்லது பார்மசியில் மருந்து எடுத்து கடைசி நேரத்தில் வைத்தியசாலை வந்தவர்களே. ஏன் உங்களது பொன்னான உயிரை சிறு சிரமத்திற்காக இழக்க ஆயத்தமாகின்றீர்கள். நீங்கள் கொரோனா நோயாளியாக இருக்கலாம் என்று சந்தேகம் ஏற்பட்டால் உடனே வந்து பரிசோதித்துக் கொள்ளுங்கள்.
3. “ டொக்டர் எனக்கு ஹொஸ்பிட்டலுக்கு வர ஏலா, வந்தா அன்டிஜன் எடுப்பாக, வீட்ட வெச்சு போட மருந்து தாங்களேன் ” என்று பல நோயாளிகள் அங்கலாய்க்கிறார்கள். கொரோனா நோயானது Covid-19 வைரஸால் ஏற்படும் நோயாகும். இந்த நோயை குணமாக்க நேரடியாக எந்த வித மருந்துகளும் இல்லை.
இதன் காரணமாகவே நோயாளிகள் வைத்தியசாலைக்கு கொண்டு செல்ல அறிவுறுத்தப்படுகிறார்கள். இவ்வாறு அனுமதிக்கப்படும் கொரோனா நோயாளிகள் தொடர்ச்சியாக அவதானித்து ( நாடித்துடிப்பு, ப்ரசர், உடலில் ஒக்ஸிஜன்அளவு மற்றும் பல) அவர்களில் யார் மோசமாக மாறக்கூடியவர்கள் என்பதை ஆரம்ப கட்டத்தில் அறிவதற்காகவே வைத்தியசாலைகளில் வைக்கப்படுகிறார்கள். இவ்வாறு ஆரம்ப கட்டத்தில் அறியப்பட்டால் அவருக்குரிய சிகிச்சைகள் உடனடியாக ஆரம்பிக்கப்படும்.
வீட்டில் நீங்கள் ஒளிந்து கொண்டு மருந்து செய்யும்போது உங்களால் இதனை அறிய முடியாது. எனவே ஆரம்ப கட்டத்தில் வந்து உங்கள் உயிரை பாதுகாத்துக்கொள்ளுங்கள்.
4. “ வெக்சீன் போட்டா ரெண்டு வருசத்தால செத்திடுவீங்க, கொரோனா என்டெல்லாம் இல்ல, சும்மா ஏமாத்துறானுகள்” என்ற வதந்தி மெசேஜ்கள் எமக்கு வருகின்றன.
இந்த வதந்திகளை இவ்வாறான மரணத்திற்குப்பின்பும் , இன்னும் நீங்கள் நம்புவீர்கள் என்றால் உங்களைப்போன்ற அறிவற்றவர்களை யாராலும் திருத்த முடியாது. எமது உறவுகளே உங்களுக்கு வெக்சீன் போடக்கூடிய சந்தர்ப்பம் கிட்டும்போது ஓடிச்சென்று போட்டுக்கொள்ளுங்கள். மூட நம்பிக்கைகளை ஏற்று உயிர்களை அநியாயமாக இழக்காதீர்கள்.
நாம் இன்று ஊரின் மிகப்பெறுமதியான ஒரு இளம் சகோதரரை இழந்துவிட்டோம். இவ்வாறான மரணங்கள் இனியும் நடக்காமல் இருக்க எம்மாலான முயற்சிகளை மேற்கொள்வோம். இறைவனின் நியதியை நம்பியவர்கள் என்ற வகையில் அந்த மரணத்தை நாம் பொருந்திக்கொள்வோம்.
யா அல்லாஹ் இந்த சகோதரருடைய பாவங்களை மன்னித்து மேலான சுவனபதியை அடைய நீயே ரஹ்மத்துச் செய்வாயாக. ஆமீன்
எந்த மரணத்தையும் குறைவான லிஸ்டில் போடுவதற்கு மீடியாக்களுக்கு எவ்வளவு நேரம் ஆகும்
ReplyDeleteஇப்போது நமது பள்ளிவாசல் களில் கொரோனா தொடர்பான விழிப்புணர்வு முழுமையாக கடைபிடிக்கப்படவில்லை.
ReplyDeleteசமூக இடவெளி, முகக்கவசம் என்பவை மறந்தேவிட்ட்து.
எனவே மீண்டும் முஸ்லீம்கள் மீது பழி வராமல் இருக்க நாம் காட்டுப்படுகளை பின்பற்றுவோம்.
இது எல்லாம் ஒழுங்கா சொல்ற நீங்க இதுக்கு பின்னால நிச்சயமாக ஒரு சதி இருப்பதையும் புரிந்து கொள்ள வில்லை என்றால்..
ReplyDeleteGuys just ignore his article
சாபக்கேடு
ReplyDelete