Header Ads



பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ள, அரசியல் கைதிகளை விடுவிப்பதற்கான புதிய முறைமை உருவாக்கப்படும்


பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகளை விடுவிப்பதற்கான புதிய முறைமை ஒன்று உருவாக்கப்படும் என நீதி அமைச்சர் அலி சப்ரி நாடாளுமன்றில் இன்று -22-தெரிவித்துள்ளார்.

அமைச்சர் நாமல் ராஜபக்ஷ முன்வைத்த விடயத்திற்கு பதிலளித்தபோதே அவர் இதனை குறிப்பிட்டார்.

தமிழீழ விடுதலை புலிகள் அமைப்புக்கு ஆதரவு வழங்கிய பலர், பல ஆண்டுகளாக சிறைச்சாலையில் உள்ளதாக அமைச்சர் நாமல் ராஜபக்ஷ சபையில் தெரிவித்தார்.

வழக்கு விசாரணைகளின் கீழும், சந்தேகத்தின் அடிப்படையிலும் பலர் உள்ளனர். சிலருக்கு 20 வருடங்களுக்கு மேல் வழக்கு விசாரணைகள் இடம்பெறுகின்றன.

எந்தவித வழக்குகளும் இன்றி 13 பேர் உள்ளனர். தண்டனை காலங்களுக்கும் அதிகமான காலம் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

எனவே அவர்களுக்கு புனர்வாழ்வு அல்லது ஏதாவது வகையில் தீர்வு கிடைக்கப்பெற வேண்டும். அவர்களுடைய வழக்கு விசாரணைகள் விரைவுப்படுத்தப்பட வேண்டும் என்றும் அமைச்சர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார்.

இதற்கு பதிலளித்த நீதி அமைச்சர் அலி சப்ரி, சட்டத்திற்கு அமையவே குற்றவியல் சட்டம் செயற்படுத்தப்படுகின்றது. தரவுகளின் அடிப்படையில் தமிழீழ விடுதலை புலிகள் அமைப்பு சார்ந்த பலர், பல ஆண்டுகளாக தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

அரசாங்கம் பழிவாங்கல் நடவடிக்கைகளில் ஈடுபடவில்லை எனவும் மாறாக பிரச்சினைகளுக்கு தீர்வு காணவே விரும்புவதாக தெரிவித்தார்.

மேலும் பயங்கரவாத தடை சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்வது தொடர்பில் அமைச்சரவை கூட்டத்தில் கலந்துரையாடப்பட்டதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

நாட்டுக்கு ஏற்றவகையிலும், தேசிய பாதுகாப்புக்கு ஆபத்து ஏற்படாத வகையிலும், மனித உரிமைகள் பேணப்படும் வகையிலும் அதில் திருத்தங்கள் மேற்கொள்ளப்படும் என நீதி அமைச்சர் அலி சப்ரி தெரிவித்தார்.

No comments

Powered by Blogger.