Header Ads



ஏப்ரல் 21 தாக்குதல் பெயரில் பணமோசடி: மிகுந்த அவதானமாக இருங்கள்


குற்றப் புலனாய்வு திணைக்களம் மற்றும் பயங்கரவாத விசாரணை திணைக்களத்தின் அதிகாரிகள் எனக் கூறி, தொலைப்பேசிகளுக்கு அழைப்பை ஏற்படுத்தி அச்சுறுத்தல் விடுத்து பணம் பறிக்கும் மோசடியில் குறித்து காவல்துறைக்கு தகவல்கள் கிடைத்துள்ளதாக காவல்துறை பேச்சாளர் பிரதி காவல்துறைமா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.

இந்த மோசடி தொடர்பில் மக்கள் அவதானமாக செயற்படுமாறு காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

ஏப்ரல் 21 தாக்குதலுடன் தொடர்புடையதாகவும், அதற்கான சாட்சிகள் உள்ளதாகவும், குறித்த நபர்கள் அழைப்பை ஏற்படுத்தி தெரிவிப்பதாக காவல்துறை பேச்சாளர் கூறியுள்ளார். 

இதற்கமைய, வாக்குமூலம் பதிவு செய்வதற்காக, சம்பந்தப்பட்டவரின் வீட்டுக்கு வருவதற்கான வாகனத்திற்கான பயண செலவை வைப்பிலிட வேண்டும் என குறித்த மோசடியாளர்கள் கோருகின்றனர். 

இல்லாவிடின், குறித்த நபர்கள், சம்பந்தப்பட்ட திணைக்களத்திற்கு வருகைத்தரவேண்டும் என்றும் மோசடியாளர்கள் தெரிவிப்பதாக காவல்துறை பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார். 

இந்த மோசடி தொடர்பில் விசாரணைகள் மேற்கொள்ளப்படுவதாகவும், பொதுமக்கள் இதற்கு ஏமாற வேண்டாம் என்றும் காவல்துறை பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.