Header Ads



மூதூர் பிரதேச சபையில், கண்டனத் தீர்மானம் நிறைவேற்றம்


- A.H.HASFAR HASFAR -

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட்  பதியுதீன், ஜனநாயகத்துக்கு முரணாக,பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டதைக் புறக்கணித்து, மூதூர் பிரதேச சபையின் மக்கள் காங்கிரஸ் கட்சியின் உறுப்பினர்களான ஏ.எஸ்.எம்.தாணீஸ், ஏ.எம்.எம்.ஹரீஸ், ஜெசீலா ஹுசைதீன், அகீதா நஷார் ஆகியோரால் முன்வைக்கப்பட்ட பிரேரணை, சபையில் ஏற்றுக்கொள்ளப்பட்டதோடு, கண்டனத் தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது.

மூதூர் பிரதேச சபையின் 2020 மே மாதத்திற்கான 38 ஆவது மாதாந்த சபை அமர்வு, இன்று (21) வியாழக்கிழமை காலை 9.30 மணிக்கு, மூதூர் பிரதேச சபையின் கௌரவ தவிசாளர் எம்.எம்.ஏ.அரூஸ் தலைமையில் நடைபெற்றது.

இதன் போது, மக்கள் காங்கிரஸ் கட்சியின் உறுப்பினர் ஏ.எஸ்.எம்.தாணீஸ் பிரேரணையை முன்வைத்து உரையாற்றுகையில்,

"கடந்த ஏப்ரல் மாதம் 24 ஆம் திகதி, அதிகாலை 2 .30 மணிக்கு மக்கள் காங்கிரஸ் தலைவர் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனை கைது செய்தமையானது, இந்த நாட்டில் வாழ்கின்ற 20 இலட்சம் முஸ்லிம்களை வேதனைப்படுத்துகின்ற, ஜனநாயக முரணான முறையில் மேற்கொள்ளப்பட்ட ஒரு சம்பவமாகப் பார்க்கப்படுகின்றது.

மேலும், இந்த ஜனநாயக நாட்டில், பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரை கைது செய்வதாக இருந்தால் சபாநாயகருக்கு தெரியப்படுத்தி, சபாநாயகர் நீதிமன்றத்திற்கு அறிவித்த பின்னரே கைது செய்யப்பட வேண்டுமென்பது மரபும் ஆகும். இது அவரின் சிறப்புரிமையை மீறும் விடயமும் ஆகும்.

பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் ஏற்கனவே ஒருமுறை கைது செய்து, ஜனாதிபதி ஆணைக்குழுவில் சாட்சியம் அளித்து, எவ்வித குற்றமும் அற்றவர் என விடுதலை செய்யப்பட்டவர் எமது கட்சியின் தலைவர். 

அவரை மீண்டும் கைது செய்திருப்பது, ஒரு சிலரை திருப்திப்படுத்துவதற்காகவும், அரசியல் பின்புலமாகவும் இருக்கலாம் என எண்ணத் தோன்றுகின்றது.

இந்த நாட்டின் ஒட்டுமொத்த முஸ்லிம்களின் உணர்வுகளை மதித்து, எவ்வித குற்றமும் செய்யாத எமது கட்சியின் தலைவர் ரிஷாட் பதியுதீனை விடுதலை செய்வதற்கான அனைத்து ஜனநாயக முறைகளையும் இந்த அரசாங்கம் மேற்கொள்ள வேண்டும் என கேட்டுக்கொள்கின்றோம்" என்றார்.

அத்தோடு, சிறுபான்மை சமூகத்தின் உணர்வுகளையும் உரிமைகளையும் மதித்து, முஸ்லிம் தலைமைகளை அவர்களின் குரல்களை நசுக்கும் செயற்பாடுகளையும் கைவிட்டு விடுமாறும் அவர்கள் கூட்டாக கோரிக்கை விடுத்துள்ளனர்.


No comments

Powered by Blogger.