தீ பிடித்துள்ள கப்பலினால் ஏற்படும் பாதிப்புகளை குறைப்பதற்கு அதிக கவனம் செலுத்துமாறு ஜனாதிபதி பணிப்புரை
கப்பலை சூழவுள்ள கடற்பகுதியில் எண்ணெய் பரவக்கூடிய நிலை ஏற்பட்டால் தற்போதைய காலநிலைக்கு முகங்கொடுத்து அதனை குறைப்பதற்கு அதிக கவனம் செலுத்துமாறு ஜனாதிபதி அவர்கள் பணிப்புரை விடுத்துள்ளார். இத்தகைய அனர்த்த நிலைமைகளை முகாமைத்துவம் செய்வதற்கு உலகின் வேறு நாடுகள் மேற்கொண்ட நடவடிக்கைகள் குறித்து கவனம் செலுத்துமாறும் ஜனாதிபதி அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.
கடற்கரைகளில் கரை ஒதுங்கியுள்ள பொருட்களை அகற்றும் நடவடிக்கைகள் கடற்படை மற்றும் ஏனைய துறைகள் இணைந்து தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
சிங்கப்பூரில் பதிவு செய்யப்பட்டுள்ள இந்த கப்பல் கடந்த 20ஆம் திகதி கொழும்பு துறைமுகத்திற்கு அருகாமையில் உள்ள கடற்பரப்பில் வைத்து தீப்பற்றியது. நைட்ரிக் அமிலம் இரசாயனப் பொருட்கள் மற்றும் அழகுசாதன பொருட்கள் உள்ளிட்டவற்றை ஏற்றிக்கொண்டு கப்பல் இந்தியாவின் ஹசீரா துறைமுகத்திலிருந்து கொழும்பு துறைமுகத்திற்கு பயணித்தது.
ஜனாதிபதி அவர்களின் பணிப்புரையின் பேரில் சமுத்திர, சுற்றாடல் பாதுகாப்பு அதிகாரசபை தற்போது குறித்த கடற்பகுதியை சூழவுள்ள நீரின் மாதிரியை பரிசோதனைக்குட்படுத்தியுள்ளது. மேலும் கப்பலுக்கு சொந்தமான நிறுவனம், காப்புறுதி நிறுவனம் மற்றும் ஏனைய தரப்புகளுடன் மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து கலந்துரையாடப்பட்டுள்ளது.
தீயை கட்டுப்படுத்துவதற்கு கடும் முயற்சிகளை மேற்கொண்டுள்ள கடற்படை, விமானப்படை மற்றும் ஏனைய அனைத்து தரப்பினரையும் பாராட்டிய ஜனாதிபதி அவர்கள், கடற்பகுதியின் சுற்றாடல் குறித்து விசேட கவனம் செலுத்த வேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்தியுள்ளார்.
ஜனாதிபதி ஊடகப் பிரிவு
2021.05.26
Post a Comment