உலகிலிருந்து கொரோனா முழுமையாக அழியும் என கூற முடியாது - கலாநிதி சந்திம
கொவிட்-19 வைரஸ் உலகில் முழுமையாக அழியும் என உறுதியாக கூற முடியாத நிலையேற்பட்டுள்ளதாக ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின், ஒவ்வாமை, எதிர்ப்பு சக்தி ஆய்வு மற்றும் மரபணு விஞ்ஞான நிறுவகத்தின் பணிப்பாளர் கலாநிதி சந்திம ஜீவந்தர தெரிவித்துள்ளார்.
ஹிரு தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சலக்குன நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருந்த போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
கொரோனா வைரஸானது உலகில் என்றென்றும் நிலைத்திருக்க முடியும்.
எனவே இதற்கு எதிரான ஒரே தீர்வு தடுப்பூசி செலுத்திக்கொள்வதே என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
எந்த வகையான தடுப்பூசிகள் என்றாலும் அதனை செலுத்திக்கொள்ளும் தேவை ஏற்பட்டுள்ளது.
குறித்த நிறுவனத்தின் தடுப்பூசியை செலுத்திக்கொள்ள வேண்டும் என எவரும் காத்திருக்க வேண்டாம்.
தடுப்பூசி கிடைக்கும் வரை காத்திருந்தவரால் சில நேரம் நோயினால் பாதிப்பினை எதிர்நோக்கியிருக்ககூடும்.
எனவே தடுப்பூசி கிடைக்கும் முதலாவது சந்தர்ப்பத்திலேயே அதனை ஏற்றிக்கொள்ள வேண்டும்.
எதிர்வரும் மாதங்களானது தீர்மானமிக்க ஒரு காலப்பகுதியாகும்.
அத்துடன் வைரஸ் தொற்றில் இருந்து பாதுகாத்துக்கொள்ள உரிய முறையில் தரமான முகக்கவசங்களை அணிய வேண்டும்.
இருவருக்கு இடையில் உரிய சமூக இடைவெளியை பேணுதல் அவசியமாகும்.
முடிந்தவரை பொதுவெளியில் இதனை கடைப்பிடிக்க வேண்டியது அத்தியாவசியமாகும்.
பொது மக்கள் அதிகம் கூடும் இடங்களுக்கு செல்வதை தவிர்க்கவும்.
அத்தியாவசிய தேவை கருதி பொது மக்கள் ஒன்று கூடும் இடங்களுக்கு சென்றால் 15 நிமிடங்களில் அங்கிருந்து வெளியேறுவது சிறந்தாகும்.
நீண்ட நேரம் பொது மக்கள் இடையே நடமாடும் போதே வைரஸ் தொற்று ஏற்படுகின்றது.
அத்துடன் சவற்காரம் அல்லது தொற்று நீக்கியை பயன்படுத்தி உரிய முறையில் கைகளை சுத்தம் செய்ய வேண்டும்.
அத்தியாவசியமற்ற பயணங்களை தவிர்ப்பதன் ஊடாகவும் வைரஸ் தொற்றில் இருந்து பாதுகாத்து கொள்ள முடியும் என ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின், ஒவ்வாமை, எதிர்ப்பு சக்தி ஆய்வு மற்றும் மரபணு விஞ்ஞான நிறுவகத்தின் பணிப்பாளர் கலாநிதி சந்திம ஜீவந்தர சுட்டிக்காட்டியுள்ளார்.
Post a Comment