Header Ads



கிழக்கில் இதுவரை 125 கொரோனா மரணங்கள்


கிழக்கு மாகாணத்தில் கோவிட் தொற்றினால் இதுவரை 125 பேர் மரணமடைந்துள்ளதாக, கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஏ.ஆர்.எம். தௌபீக் இன்று(29) தெரிவித்துள்ளார்.​

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

கோவிட் -19 இரண்டாவது அலையில் 25 பேரும், மூன்றாவது அலையில் 100 பேரும் மரணமடைந்துள்ளதாகவும் திருகோணமலை மாவட்டத்தில் 71 பேரும், மட்டக்களப்பு மாவட்டத்தில் 25 பேரும், அம்பாறை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பிரிவில் 16 பேரும், கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பிரிவில் 13 பேருமாக 125 பேர் மரணமடைந்துள்ளனர்.

கோவிட்  03 வது அலையின் தாக்கம் கிழக்கு மாகாணத்தில் மிக வேகமாகப் பரவி வருவதால் பொது மக்கள் சுகாதார நடைமுறைகளைக் கடைபிடிக்கும்படி கேட்டுக்கொள்கிறேன்.

பயணத்தடை அமுல் படுத்தப்பட்டுள்ள காலப் பகுதியில் மக்கள் வெளியில் செல்ல வேண்டாமெனவும் வீடுகளில் சுய தனிமைப்படுத்தலில் இருப்பவர்கள் தனிமைப்படுத்தல் சட்ட திட்டங்களைக் கடைப்பிடிக்குமாறும், தனிமைப்படுத்தல் சட்ட திட்டங்களைக் கடைப்பிடிக்காதவர்களுக்கெதிராக தனிமைப்படுத்தல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படுமெனவும் அவர் தெரிவித்துள்ளார்.

சுகாதார பகுதியினராலும், பொலிஸாரினாலும் விடுக்கப்படும் அறிவுறுத்தல்களைச் சிலர் உதாசீனம் செய்து வருவதால் கோவிட் -19 தொற்றின் தாக்கம் மிக வேகமாகப் பரவிவருகின்றது.

கடந்த 24 மணி நேரத்தில் கிழக்கு மாகாணத்தில் 154 பேர் தொற்றாளர்களாக இனங்காணப்பட்டுள்ளதோடு அவதானத்திற்குரிய வலயங்களாக மட்டக்களப்பு திருகோணமலை, கிண்ணியா மூதூர், குறுஞ்சாங்கேணி ஆகிய 05 வைத்தியதிகாரி பிரிவுகள் இவ்வாரம் அடையாளப்படுத்தப்பட்டுள்ளதாகவும், இப் பகுதியில் வாழும் பொது மக்கள் மிக அவதானமாக இருக்குமாறும் கேட்டுக்கொண்டுள்ளார்.

No comments

Powered by Blogger.