Header Ads



முஸ்லிம்களுக்கு மட்டும் தடைகள் விதிக்கப்படுவது ஏன்..? வியாபாரத்தை முடக்குவதே நோக்கம் - இம்ரான் Mp


- ஹஸ்பர் ஏ ஹலீம் -

கொரோனாவை காரணம் காட்டி முஸ்லிம்களுக்கு மட்டும் தடைகள் விதிக்கப்படுவது ஏன் என திருகோணமலை மாவட்ட ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப் கேள்வி எழுப்பினார். 

சனிக்கிழமை இன்று(17)மாலை கிண்ணியாவில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் உரையாற்றும்போதே இவ்வாறு தெரிவித்தார். அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர்,

இந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்தால் முஸ்லிம்கள் இனவாத ஒடுக்குமுறைக்கு ஆளாக்கப்படுவார்கள் என நாம் அன்றே எச்சரித்திருந்தோம் நாம் கூறியபடி தற்போது ஒவ்வொன்றாக நடந்துவருகிறது. 

அரசாங்கத்துக்கு மக்கள் மத்தியில் அதிருப்தி ஏற்படும் சந்தர்ப்பங்களில் அவர்கள் முஸ்லிம்களுக்கு எதிரான இனவாதத்தை கையிலெடுத்தே அந்த அதிருப்தியை மறைக்கிறார்கள். 

உயிர்த்த ஞாயிறு அறிக்கையில் பரிந்துரைக்கப்பட்ட சிங்கள அமைப்புக்கள் எதனையும் தடைசெய்யாது முஸ்லிம் அமைப்புக்களை மாத்திரம் தடை செய்துள்ளனர். 

ரமழான் மாதத்தை முன்னிட்டு சுகாதார அமைச்சால் முஸ்லிம்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. 

பள்ளிவாயலில் நூறு பேருக்கு மேல் ஒன்றுகூட முடியாது. நோன்பு கஞ்சி பகிரமுடியாது என அதில் பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. 

ஆனால் புத்தாண்டை முன்னிட்டு மக்கள் கடைவீதிகளிலும் பொது இடங்களிலும் ஆயிரக்கனாக்களில் சமூக இடைவெளி இன்றி ஒன்று கூடியதை நாம் கண்டோம். மதுபான சாலைகளில் பெரிய கூடடமே கூடி இருந்தது. 

ஆகவே புத்தாண்டில் தடைகளை விதிக்காத அரசு ஏன் ரமழான் மாதத்தில் முஸ்லிம்களுக்கு மாத்திரம் தடைகளை விதிக்க வேண்டும். 

ரமழான் கஞ்சி பகிர்வது எங்களுக்கு ஒன்றும் பர்ளு ஐன் இல்லை.கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதை நாம் எதிர்க்கவில்லை. ஆனால் முஸ்லிம்களுக்கு மாத்திரம் தான் கொரோனா தொற்றுவது போன்று  முஸ்லிம்களுக்கு மட்டும் தடைகள் விதிக்கப்படுவது ஏன் என்றே நாம் கேட்க்கிறோம்.

இதற்கு பின்னாலும் பெரிய இனவாத நிகழ்ச்சிநிரல் உள்ளது.இந்த காலத்தில் இடம்பெறும் முஸ்லிம்களின் வியாபாரத்தை முடக்குவதே இந்த அரசின் நோக்கம். மே மாதத்தில் கொரோனாவின் மற்றொரு அலை உருவாக்கலாம் என ராணுவ தளபதி ஏற்கனவேஅறிவித்து விட்டார்.ஆகவே மே மாதத்தில் இடம்பெறும் பெருநாள் வியாபாரத்தை முடக்க அரசு திடடமிட்டுள்ளதா என்ற சந்தேகம் இதனால் இப்போது எழுகிறது. 

தற்போது விதிக்கப்பட்டுள்ள இறக்குமதி தடையால் முஸ்லிம் வியாபாரிகள் பலரே பாதிக்கப்பட்டுள்ளனர்.அவர்களை மேலும் சிரமத்துக்கு உள்ளாக்கவே அரசு திடடமிட்டு வருகிறது. 

இவ்வாறு ஒவ்வொரு துறைகளிலும் முஸ்லிம்களை பழிவாங்கவே இந்த அரசு முயற்சிக்கிறது.ஆனால் காபட் வீதி மற்றும் பாலங்களில் இருந்து வரும் கொமிஸ்களுக்காக சிலர் பசில் வந்தால் சரியாகும் நாமல் வந்தால் சரியாகும் என ஊருக்குள் கூறி திரிவது வேடிக்கையானது என தெரிவித்தார்.

No comments

Powered by Blogger.