Header Ads



பொது மக்களுக்கான முக்கிய அறிவித்தல்


பண்டிகை காலத்தில் சந்தையில் நிலவும் மோசடி செயற்பாடுகள் தொடர்பாக 1977 என்ற தொலைபேசி இலக்கத்தின் மூலம் அறிவிக்குமாறு நுகர்வோர் அதிகார சபை அறிவித்துள்ளது. 

பண்டிகை காலப்பகுதியில் சந்தைக்கு வரும் காலாவதியான மற்றும் பயன்பாட்டுக்கு பொருத்தமற்ற பொருட்களை கண்டறிந்து அதற்கெதிராக சட்டத்தை கடுமையாக நடைமுறைபடுத்தும் நோக்கில் மார்ச் மாதம் 15 ஆம் திகதி தொடக்கம் ஏப்ரல் மாதம் 23 ஆம் திகதி வரை விசேட வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டிருப்பதாக நுகர்வோர் அதிகார சபை தெரிவித்துள்ளது. 

அனைத்து அதிகாரிகளையும் ஈடுப்படுத்தி நாடு முழுவதிலும் உள்ள மாவட்டங்களில் தேடுதல் மற்றும் சுற்றிவளைப்புக்களை மேற்கொள்வதில் அதிகார சபை ஈடுப்பட்டுள்ளதாக சபையின் தகவல் பணிப்பாளர் அசேல பண்டார தெரிவித்தார். 

இதற்கமைவாக அனைத்து மாவட்டங்களிலும் உள்ள முக்கிய மொத்த விற்பனை நிலையங்கள் மற்றும் களஞ்சியசாலைகளை பரிசோதனை செய்வதற்காக முற்றுகையிடுவதாக அவர் கூறினார். 

காலாவதியான மற்றும் தகவல்களில் மாற்றம் செய்யப்பட்ட பொருட்கள் சந்தைக்கு வருவதை தடுப்பதே இதன் நோக்கமாகும் என்றும் அவர் தெரிவித்தார். 

சில்லறை வர்த்தக நிலையங்களை முற்றுகையிடுவதற்காக விசாரணை அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது. 

பண்டிகை காலப்பகுதியில் நுகர்வோர் பெரும் எண்ணிக்கையில் பொருட் கொள்வனவில் ஈடுப்படுகின்றனர். இனிப்பு பண்டங்கள், பலசரக்கு, மின்சார உபகரணங்கள் உள்ளிட்ட பொருட்கள் தொடர்பில் சேவை மற்றும் தரம் தொடர்பிலும் இவர்கள் கூடுதலான கவனம் செலுத்தவுள்ளனர் என்றும் அவர் மேலும் தெரிவித்தார். 

கையடக்க தொலைபேசி விற்பனையார்கள் விசேட கழிவு வழங்கி மேற்கொள்ளும் வர்த்தக செயற்பாடுகள் குறித்தும் விசேட கவனம் செலுத்தப்படும். 

அத்தியாவசிய பொருட்களை பதுக்குதல், பொருட்களுக்கு தட்டுபாடுகள் ஏற்படுவதை தடுத்தல், குறிப்பிட்ட பொருட்கள் மற்றும் சேவைகள் சந்தையில் விற்பனை செய்யப்படுகின்றதா என்பது தொடர்பிலும் முக்கிய கவனம் செலுத்தப்படும். பொருட்கள் மற்றும் சேவை விற்பனையில் விலைப்பட்டியலை கட்சிப்படுத்தல், கொள்வனவு செய்யப்படும் சகல பொருட்கள் மற்றும் சேவைகளுக்கு பற்றுச்சீட்டு வழங்குதல் கட்டாயமாகும். இவ்வாறு செய்யாத வர்த்தகர்களுக்கு எதிராக சட்டம் கடுமையாக நடைமுறைப்படுத்தப்படும் என்று அவர் கூறினார். 

சந்தையில் இடம்பெறும் மோசடி தொடர்பில் முறையிடுவதற்கு 1977 என்ற தொலைபேசி இலக்கம் 24 மணித்தியாலமும் செயற்படுவதாகவும், அலுவலக நேரங்களில் அதிகாரிகளுடன் தொடர்புகளை ஏற்படுத்திக்கொள்ள முடியும். அலுவலக நேரத்திற்கு பின்னர் நுகர்வோரின் தொலைபேசி உரையாடல் பதிவு செய்யப்படுவதுடன் (Voice Mail) அதற்காக மீண்டும் அதிகாரிகள் தொடர்புகளை ஏற்படுத்தி பிரச்சினை தொடர்பில் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் அசேல பண்டார சுட்டிக்காட்டினார்.

No comments

Powered by Blogger.