Header Ads



தேசிய புத்தரிசி விழா, ஜனாதிபதி தலைமையில் நடைபெற்றது (படங்கள்)


அறுவடை செய்யப்பட்ட நெல்லின் முதற் பகுதியை ஜய ஸ்ரீ மகா போதிக்கு காணிக்கையாக செலுத்தும் வருடாந்த புத்தரிசி விழா ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் இன்று (04) முற்பகல் அனுராதபுரம் வரலாற்று முக்கியத்துவமிக்க ஜய ஸ்ரீ மகாபோதி வளாகத்தில் இடம்பெற்றது. 

விவசாயிகள் தாம் பெற்றுக்கொண்ட அறுவடையின் முதற் பகுதியை காணிக்கையாக வழங்குவது பாரம்பரியமாக இடம்பெற்றுவரும் வருடாந்த சம்பிரதாயமாகும். 54வது தடவையாக இடம்பெற்ற தேசிய புத்தரிசி விழா அட்டமஸ்தானாதிபதி கலாநிதி சங்கைக்குரிய பல்லேகம ஸ்ரீநிவாச நாயக்க தேரரின் ஆலோசனையின் பேரில் விவசாயத்துறை அமைச்சும் கமநல சேவைகள் திணைக்களமும் இணைந்து ஏற்பாடு செய்திருந்தன. 

உரிய பருவ காலத்தில் மழை கிடைக்கப்பெற்று தமது பயிர் நிலங்கள் செழிப்புற்று விளங்க இயற்கையின் பலமும் ஆசிர்வாதமும் கிடைக்க வேண்டுமென்ற எதிர்பார்ப்புடன் நாலா திசைகளிலும் இருந்து வருகை தந்திருந்த விவசாய சமூகத்தினர் புத்தரிசி விழா சம்பிரதாயங்களில் பங்குபற்றினர். 

பாரம்பரிய சம்பிரதாயங்களின்படி புத்தரிசி விழா ஊர்வலமானது மங்கள வாத்தியங்களுடன் கிழக்கு வாசலின் ஊடாக ஜய ஸ்ரீ மகா போதியை வலம்வந்து, அங்கு பிரத்தியேகமாக வைக்கப்பட்டிருந்த தங்க முலாம் பூசப்பட்ட பாத்திரத்தில் மிகுந்த கௌரவத்துடனும் பக்தியுடனும் புத்தரிசி நிரப்பப்பட்டது. 

 பல்லேகம ஸ்ரீநிவாச தேரர் உள்ளிட்ட மகா சங்கத்தினரின் பிரித் பாராயணத்திற்கு மத்தியில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பாத்திரத்தில் புத்தரிசியை நிரப்பும் சம்பிரதாயத்தை நிறைவேற்றினார். 


No comments

Powered by Blogger.