Header Ads



11 இஸ்லாமிய அமைப்புக்களுடன் தொடர்பு கொள்வதைத் தவிர்ந்து கொள்ளவும் - YMMA

 
அரசினால் அண்மையில் வர்த்தமானி அறிவித்தல் மூலம் 11 இஸ்லாமிய அமைப்புக்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில்,  இவ்வாறான அமைப்புக்களுடனோ அல்லது அவர்களது உறுப்பினர்களுடனோ தொடர்பு கொள்வதைத் தவிர்ந்து கொள்ளுமாறு, அகில இலங்கை வை.எம்.எம்.ஏ. பேரவையின் தேசியத் தலைவர் சஹீட் எம். ரிஸ்மி, அனைத்து வை.எம்.எம்.ஏ. உறுப்பினர்களிடமும் விசேட அறிவித்தல் மூலம் வேண்டுகோள் விடுத்துள்ளார். 

   வை.எம்.எம்.ஏ. பேரவையின் நம்பிக்கைப்  பொறுப்பாளர்,  சபை உறுப்பினர்கள்,  செயற்குழு உறுப்பினர்கள் மற்றும் சகல அங்கத்துவ  உறுப்பினர்களிடமும் தேசியத் தலைவர் இவ்வேண்டுகோளை விடுத்துள்ளார். 

   குறித்த வேண்டுகோளில் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது,

   நாம் அனைவரும் அறிந்திருப்பதைப் போல, 2021 ஏப்ரல் மாதம் 13 ஆம் திகதியிடப்பட்ட  2223/3 அரச  வர்த்தமானி மூலம் தேசிய பாதுகாப்பு, பொது ஒழுங்கு மற்றும் சட்டம் ஆகியவற்றின் அடிப்படையில், இலங்கை அரசு 11 இஸ்லாமிய அமைப்புகளைத் தடை செய்துள்ளது.

   அகில இலங்கை வை.எம்.எம்.ஏ.  பேரவை (ACYMMAC), அதன் நிர்வாக அமைப்பு மற்றும் அதன் அனைத்து உறுப்பினர்களும், எப்போதும் நாட்டின் சட்டங்களை மதிப்பதுடன் விதிவிலக்கு இல்லாமல் நூறு வீதம் சட்டத்தைப் பின்பற்றுகின்றன.

   இந்நிலையில், அனைத்து வை.எம்.எம்.ஏ.  உறுப்பினர்களும்,  குறித்த 11 இஸ்லாமிய அமைப்புக்களுடனோ அல்லது  அவர்களது உறுப்பினர்களுடனோ தொடர்பு கொள்வதைத் தவிர்த்துக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றார்கள்.

   அத்துடன், எந்தவொரு உறுப்பினரும் மேற்கூறப்பட்ட தடைசெய்யப்பட்ட அமைப்புக்களுடன் இணைந்திருந்தால் அல்லது ஏதேனும் தொடர்புகளை வைத்திருந்தால், வை.எம்.எம்.ஏ. எந்தப் பொறுப்பையும் ஏற்காது.

   அனைத்து உறுப்பினர்களும் 1980 ஆம் ஆண்டின் 31 ஆம் இலக்க தன்னார்வ சமூக சேவை நிறுவனங்கள் (பதிவு மற்றும் மேற்பார்வை) சட்டத்தின் கீழ், ஒரு தன்னார்வ சமூக சேவை அமைப்பாக, பிரதேச செயலாளர்  அலுவலகத்தில் பதிவு செய்து கொள்ளுமாறு எதிர்பார்க்கப்படுகிறது.

   மேலும், பின்வரும் விடயங்கள்  கண்டிப்பாகக் கடைபிடிக்கப்படுகின்றன என்பதையும் உறுதிப்படுத்தவும்:

அ) கூட்டங்களின் சரியான அறிக்கைகளைப் பராமரித்தல்;

ஆ) தற்போதைய தொடர்புத் தகவலுடன் உறுப்பினர்களின் புதுப்பிக்கப்பட்ட பதிவுகளைப் பராமரித்தல்;

இ) வருமானம் மற்றும் செலவுகளின் முழு மற்றும் முழுமையான பதிவுகளைப் பராமரித்தல் அத்துடன்  கணக்காய்வு அறிக்கைகளைப் பேணுதல்;

அங்கத்துவ வை.எம்.எம்.ஏ. க்களுக்கு வெளிநாட்டு நிதியை நேரடியாகப் பெறவோ அல்லது பொது அறிக்கைகளை வெளியிடவோ அங்கீகாரம் இல்லை.

   ஏற்கனவே செய்யாவிட்டால், மேற்கண்ட நடவடிக்கைகள் உடனடியாக நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்று நாங்கள் எதிர்பார்க்கின்றோம்.

   - சாபிர் சவாத் (சட்டத்தரணி) தேசிய பொதுச் செயலாளர்.


( ஐ. ஏ. காதிர் கான் )

No comments

Powered by Blogger.