பயங்கரவாதி சஹ்ரானை வழிநடாத்திய இந்தியர் ‘அபூ ஹிந்த்’ யார்..? ஆச்சரியமிகு தகவல்கள் அம்பலம், CID விசாரணை
(எம்.எப்.எம்.பஸீர் + Vidivelli)
ஏப்ரல் 21 தற்கொலை குண்டுத் தாக்குதல்களை நடாத்திய கும்பலுக்கு தலைவனாக செயற்பட்டதாக நம்பப்படும் சஹ்ரான் ஹஷீம், அவரது சகோதரர் ரில்வான் மற்றும் தேசிய தெளஹீத் ஜமாஅத்தின் சிரேஷ்ட தலைவராக கருதப்படும் நெளபர் மெளலவி ஆகியோர் மிக நெருங்கிய தொடர்புகளை பேணிய, ‘அபூ ஹிந்த்’ எனும் பெயரால் அறியப்படும் நபர் தொடர்பில் சி.ஐ.டி. சிறப்பு விசாரணைகளை முன்னெடுத்துள்ளது. சி.ஐ.டி.யின் பிரத்தியேக விசாரணைக் குழுவொன்று இது தொடர்பிலான விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.
இலங்கையில் கடந்த 2019 ஏப்ரல் 21 ஆம் திகதி, தற்கொலை தாக்குதல் இடம்பெறப்போகிறது என்பதையும், இலக்குகளையும் அபூ ஹிந்த் அறிந்திருந்திருக்கலாம் என பரவலான சந்தேகம் எழுந்துள்ள நிலையிலேயே இந்த விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
அதன்படி, ஏப்ரல் 21 தாக்குதலின் பின்னணியில் வெளிநாட்டு சக்தி ஒன்று செயற்பட்டுள்ளதாக பரவலாக நம்பப்படும் நிலையில், அது குறித்த வெளிப்படுத்தல்களுக்காக இந்த அபூ ஹிந்த் எனும் அடையாளம் குறித்து பூரண விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
இந் நிலையில் இது குறித்த விசாரணைகளையும், சஹ்ரான் கும்பலுடனேயே இருந்து சாய்ந்தமருது தற்கொலைத் தாக்குதலின் பின்னர் இறந்ததாக எந்த அறிவியல் தடயங்களும் இல்லாத, கட்டுவாபிட்டி தேவாலய தாக்ககுதல்தாரியின் மனைவி சாரா ஜெஸ்மின் குறித்த விசாரணைகளையும் இடை நிறுத்தாது உண்மைகளை வெளிப்படுத்த தொடர்ந்து முன்னெடுக்க வேண்டும் என ஜனாதிபதி விசாரணை ஆணைக் குழு தனது இறுதி அறிக்கை ஊடாக பரிந்துரைத்துள்ளது.
ஜனாதிபதி விசாரணை ஆணைக் குழுவின் பரிந்துரைகளுக்கு அமைய, 2019 ஏப்ரல் 21 தற்கொலை குண்டுத் தாக்குதல்கள் தொடர்பில் நேரடியாக தொடர்புபட்டவர்கள், சஹ்ரான் ஹஷீம் உள்ளிட்ட 20 பேர் ஆவர். இந் நிலையில் இந்த தாக்குதலின் பின்னணியில் வெளிநாட்டு சக்தியொன்று உள்ளதாக பல சாட்சியாளர்கள் ஆணைக் குழுவில் முன்வைத்த விடயங்களை ஆராய்ந்துள்ள ஆணைக் குழு அது தொடர்பிலும் தனது இறுதி அறிக்கையில் உள்ளடக்கத்தினை கொண்டுள்ளது.
பேராயர் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை, முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, முன்னாள் அமைச்சர்களான ரவூப் ஹக்கீம், ரிஷாத் பதியுதீன், முன்னாள் பாதுகாப்பு படைகளின் தலைமை அதிகாரி அத்மிரால் ரவீந்ர விஜேகுணரத்ன, பொலிஸ் விஷேட அதிரடிப் படையின் முன்னாள் கட்டளைத் தளபதி சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் எம்.ஆர். லதீப், தேசிய உளவுச் சேவையின் முன்னாள் பணிப்பாளர் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் நிலந்த ஜயவர்தன உள்ளிட்ட பலர் ஆணைக் குழுவுக்கு வழங்கிய சாட்சிகளில் வெளிநாட்டு மறைமுக சக்தி தொடர்பில் கேள்வி எழுப்பியிருந்தனர்.
இதில் தேசிய உளவுச் சேவை முன்னாள் பணிப்பாளர் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் நிலந்த ஜயவர்தன முன்வைத்துள்ள சாட்சியங்களின் போது வெளிப்படுத்தியுள்ள அபூ ஹிந்த் எனும் இந்தியர் தொடர்பிலேயே சி.ஐ.டி.யின் சிறப்பு விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.
இது தொடர்பில் ஜனாதிபதி விசாரணை ஆணைக் குழு தனது அறிக்கையில்,
2019 ஏப்ரல் 21 தாக்குதல்களுக்கு முன்னர் தேசிய உளவுச் சேவைக்கு தாக்குதல் தொடர்பில் கிடைத்த முன்கூட்டிய தகவல், இந்த அபூ ஹிந்த் எனும் நபரிடமும் இருந்திருக்கலாம் என தான் நம்புவதாக நிலந்த ஜயவர்தன தனது சாட்சியத்தின் போது தெரிவித்துள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அதன்படி, ஆணைக் குழுவும் தனது எல்லைகளை மீறாமல் அபூ ஹிந்த் தொடர்பில் முடியுமான விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாக ஆணைக் குழு அறிக்கையிட்டுள்ளது. அதன்படி தற்கொலைதாரி சஹ்ரான் ஹஷீமின் மனைவி பாத்திமா ஹாதியாவிடம் ஆணைக் குழு சாட்சியம் பெற்ற போது, அபூ ஹிந்த் எனும் ஒருவருடன் சஹ்ரானுக்கு 2017 அரையாண்டிலிருந்து தொடர்புகள் இருந்தமை வெளிப்படுத்தப்பட்டதாக அவ்வறிக்கை கூறுகிறது.
இந் நிலையில் குறித்த அபூ ஹிந்த் யார் என்பது தொடர்பில், தனது அடையாளத்தை வெளிப்படுத்த விரும்பாத பிரபல பயங்கரவாத விவகாரம் தொடர்பிலான சர்வதேச நிபுணர் ஒருவர் மிக ரகசியமான சாட்சியம் ஒன்றினை வழங்கியுள்ளதாக ஆணைக் குழுவின் அறிக்கை கூறுகின்றது. குறித்த நிபுணரின் சாட்சியத்துக்கு அமைய அபூ ஹிந்த் என்பது இந்திய மாநில உளவுத் துறை ஒன்று வடிவமைத்த கதாபாத்திரமாகும்.
பயங்கரவாத நடவடிக்கைகளுக்காக சிரியாவுக்கு செல்லும் இந்தியர்கள் இலங்கைக்கு வந்து, இங்கிருந்து சிரியா செல்வது தொடர்பிலான விடயங்களை ஆராயும் உளவு நடவடிக்கை தொடர்பில் அந்த உளவுப் பிரிவு அபூ ஹிந்த் எனும் கதா பாத்திரத்தை ஈடுபடுத்தியுள்ளதாக குறித்த நிபுணர் சாட்சியமளித்துள்ளதாக ஆணைக் குழுவின் அறிக்கை கூறுகின்றது.
அதன்படி சஹ்ரான் உள்ளிட்டவர்கள் அபூ ஹிந்தை, ஐ.எஸ். ஐ.எஸ். பிராந்திய தலைவனாக நம்பி, தாம் நடாத்தப் போகும் தாக்குதல் தொடர்பில் திட்டங்களை அவருடன் பகிர்ந்திருக்கலாம் என நிபுணரின் சாட்சியத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
ஏப்ரல் 21 முதல் தற்கொலை தாக்குதலை தொடர்ந்து வெடிகுண்டு நிரப்பப்பட்ட வாகனம் தொடர்பிலும் குறித்த மூலத்தின் ஊடாகவே தகவல் தேசிய உளவுச் சேவைக்கு கிடைத்துள்ள நிலையில், அதன் பிரகாரமே கொச்சிக்கடை தேவாலயம் அருகே குண்டு நிரப்பப்பட்ட வேன் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறான நிலையில், இந்தியாவின் மாநில உளவுத் துறை முன்னெடுத்த இந்த இரகசிய நடவடிக்கை, அந் நாட்டின் தேசிய உளவுச் சேவைக்கு தெரியாமல் இருந்திருக்கலாம் எனவும், கடந்த 2019 ஏப்ரல் 21 தாக்குதலுக்கு முன்னர் இந்திய பாதுகாப்பு செயலர் சஞய் மித்ரா ஏப்ரல் 7 ஆம் திகதி இலங்கைக்கு விஜயம் செய்தமை அதனையே காட்டுவதாக குறித்த பயங்கரவாதம் குறித்த நிபுணர் ஆணைக் குழுவுக்கு சாட்சியமளித்துள்ளதாக ஆணைக் குழுவின் அறிக்கை கூறுகின்றது.
இந் நிலையில் தற்போதும் அபூ ஹிந்தின் அடையாளத்தை வெளிப்படுத்த சி.ஐ.டி. விசாரணைகளை முன்னெடுக்கும் நிலையில், அவ்விசாரணைகளை தொடருமாறு ஆணைக் குழுவின் அறிக்கையும் கூறுகின்றது.
இதனைவிட, கட்டுவாபிட்டிய தேவாலயத்தில் தாக்குதல் நடாத்திய குண்டுதாரியின் மனைவி சாரா ஜெஸ்மின் அல்லது புலஸ்தினி மகேந்திரன் தொடர்பிலும் தொடர் விசாரணைகளை முன்னெடுக்குமாறு ஆணைக் குழு ஆலோசனை வழங்கியுள்ளது. வெளிநாட்டு மறைமுக சக்தியின் தொடர்புகள் உள்ளதா என ஆராயும் போதே ஆணைக் குழு தனது அறிக்கையில் அந்த விடயத்தை கூறியுள்ளது.
குறிப்பாக சாய்ந்தமருது தற்கொலை தாக்குதலின் போது சாரா குறித்த வீட்டில் இருந்த போதும், அங்கு இறந்தவர்களின் டி.என்.ஏ. பரிசோதனைகளின் போது சாரா கொல்லப்பட்டமைக்கான தடயங்கள் கிடைக்கவில்லை. அத்துடன் ஜனாதிபதி விசாரணை ஆணைக் குழுவில், குறித்த சம்பவத்தின் பின்னர் சாராவை நேரில் கண்ட இரு சாட்சியாளர்கள் சாட்சியம் அளித்துள்ளனர். இந் நிலையிலேயே சாரா தொடர்பிலான விசாரணைகளையும் தொடர்ந்து முன்னெடுக்குமாறு ஆணைக் குழு ஆலோசனை வழங்கியுள்ளது.
if you want overthrow goverment or fight with government , have some company at europe country (russia, uk, france, german) first of all pay then step by step progress will go
ReplyDeleteex libya, srilanka,