"உங்களது ஆபாசப்பட பட்டியல் எங்களிடம் உள்ளது"
ரேன்சம்வேர் ரக ஹேக்கிங்குகளை பல ஆண்டுகளாக கவனித்து வரும் பிரெட் காலோ, 2019ஆம் ஆண்டின் முற்பகுதியில் இந்த போக்கில் புதிய பரிணாமத்தை கண்டதாக கூறுகிறார்.
"முன்பெல்லாம் ஒரு நிறுவனத்தை சீர்குலைக்க தரவானது குறியாக்கம் மட்டுமே செய்யப்பட்டு வந்தது. அடுத்து அதை ஹேக்கர்கள் பதிவிறக்கம் செய்வதை காண ஆரம்பித்தோம். ஏனெனில், இந்த தரவை மற்றொருவரிடம் பகிரும் வாய்ப்பு உள்ளதால், அதற்கேற்றவாறு அதிக பணத்தை பறிக்கும் முயற்சியில் ஹேக்கர்கள் ஈடுபட தொடங்கினர்" என்று அவர் கூறுகிறார்.
எதிர்ப்பது கடினம்
ஓர் அமைப்பு அல்லது தனி நபரை பகிரங்கமாக களங்கப்படும் ஹேக்கர்களின் இந்த சமீபத்திய போக்கை எதிர்கொள்வது கடினம் என வல்லுநர்கள் அச்சம் தெரிவிக்கின்றனர்.
நிறுவனங்கள் தங்களது முக்கியமான தரவுகளை காப்புநகல் (Backup) செய்து வைத்திருப்பது ரேன்சம்வேர் தாக்குதல்களிலிருந்து மீண்டுவர உதவிய நிலையில், அதே வழிமுறை மிரட்டி பணம் பறிக்கும் (Extortionware) ஹேக்கிங்கில் எடுபடுவதில்லை.
இதுதொடர்பாக பிபிசியிடம் பேசிய சைபர் - பாதுகாப்பு ஆலோசகர் லிசா வென்ச்சுரா, "நிறுவனத்தின் நற்பெயருக்கு தீங்கு விளைவிக்கும் எதையும் ஊழியர்கள் நிறுவனத்தின் சர்வர்களில் சேமிக்கக்கூடாது. இதுகுறித்து நிறுவனங்கள் தங்கள் அனைத்து ஊழியர்களுக்கும் பயிற்சி வழங்க வேண்டும்" என்று கூறுகிறார்.
"ஹேக்கர்களுக்கு சாதகமாக ரேன்சம்வேர் தாக்குதல்கள் புதிய பரிணாமம் அடைந்து, முன்பைவிட அதிகளவில் நடப்பதுடன் நவீனமயமாகி வருகின்றன. வெறும் தரவு என்பது போய், நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்துவது என்ற நிலைக்கு இவை சென்றுள்ளதால், பாதிக்கப்படுபவர்கள் இழக்கும் பணமும் அதிகரித்துள்ளது."
இதுபோன்ற ஹேக்கிங் தாக்குதல்களால் பாதிக்கப்படுபவர்கள் அதுகுறித்து புகார் தெரிவிக்காமல் இருப்பது, இவற்றின் வீரியத்தையும் இழக்கும் பணத்தையும் கணக்கிட முடியாத சூழலை உருவாக்குகிறது.
2020ஆம் ஆண்டில் மட்டும் ரேன்சம்வேர் வழியாக பெறப்பட்ட பணம், சேவை தடைகள் - பாதிப்புகள் உள்ளிட்டவற்றால் உலகம் முழுவதும், சுமார் 17000 கோடி டாலர்கள் இழக்கப்பட்டுள்ளதாக எம்சிஸ்சாப்ஃட் நிறுவனம் கணித்துள்ளது. BBC
Post a Comment