Header Ads



ரிஷாட்டின் தலையை வெட்டி, புகைப்படங்களை தயாரித்தவர் கைது


ஜனாதிபதி மற்றும் பிரதமரின் புகைப்படங்களுடன், உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல்களுடன் தொடர்புடைய குண்டுடதாரிகளின் புகைப்படங்களை இணைத்து, போலியான புகைப்படங்களை தயாரித்தவர் கைது செய்யப்பட்டு, விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

அந்தப் புகைப்படங்களை இணைத்தளங்களில் தரவேற்றி, இனங்களுக்கு இடையே குரோதங்களை ஏற்படுத்மும் செயற்பாட்டில் ஈடுபட்டார் என்ற குற்றச்சாட்டின் கீழே, குற்றப்புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டார்.

கைது செய்யப்பட்ட மாத்தளை பி​ரதேச சபையின் உறுப்பினர், கொழும்பு பிரதான நீதவான் புத்திக சிறி ராகலவின் உத்தரவின் ​பேரில், எதிர்வரும் 18 ஆம் திகதி வரையிலும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

மாத்தளை பிரதேச சபையின் முன்னாள் உப- தலைவரும் சுயாதீன குழுவின் தற்போதைய உறுப்பினருமான மாத்தளை யட்டவத்தையை வசிப்பிடமாகக் கொண்ட மலல் பண்டார ஏக்கநாயக்க என்பவரே இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் சம்பவங்களில் தற்கொலைத் தாக்குதல்கள் நடத்திய குண்டுதாரிகளுடன், பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியூதீன் நிற்கும் புகைப்படங்களில், ரிஷாட் பதியூதீனின் தலையை கொய்தெடுத்து, அதில், ஜனாதிபதி மற்றும் பிரதமரின் தலைகளை இணைத்துள்ளார்.

“ 100 சேர்ட்டுகள் அணிந்திருந்தாலும் இனங்காணமுடியா ஒன்று இந்த படங்களில் உறுதியாகிறது” என எழுதி, புகைப்படங்களை தயாரித்து, அதனை இணையத்தளங்களில் தரவேற்றியுள்ளார்.

அதுதொடர்பில், குற்றப்புலனாய்வுப் பிரிவினர் மேற்கொண்ட விசாரணைகளிலியே, மேற்படி நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

No comments

Powered by Blogger.