அரபுக் கல்லூரிகள் சமூகத்திற்கு என்ன பணியாற்றுகின்றன..?
மௌலவி எஸ்.எச். ஆதம்பாவா மதனி (எம்.ஏ)
அரபுக் கல்லூரிகள் என்றால் என்ன? அவை என்ன பணி செய்கின்றன? என்பவற்றை அறிந்து கொள்ளாமல் தமது இளமைக்காலத்தில் குர்ஆன் மத்ரஸா சென்றதையும் அங்கு நடந்த காட்சிகளையும் வைத்துக்கொண்டு அவை போன்றதுதான் எமது அரபுக் கல்லூரிகள் என்று எண்ணி கருத்துத் தெரிவிக்கும் பலர் எமது சமூகத்தில் உள்ளனர். எமது சமூகப் புத்தி ஜீவிகளே அரபுக் கல்லூரிகள் பற்றி அறிந்திராத நிலையில் எமது அந்நிய சமூகத்தை நாம் எவ்வாறு குறை கூற முடியும்? ஒரு முறை கொழும்பிலே ஒரு கருத்தரங்கு நடைபெற்றது. அரபுக் கல்லூரி அதிபர்களை அழைத்து புதிய கல்விச் சீர்திருத்தம் தொடர்பாக ஒரு கருத்தரங்கை அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவின் அன்றைய செயலாளர் மௌலவி எம்.ஜே.எம். றியாழ் அவர்கள் ஏற்பாடு செய்திருந்தார்கள். அந்தக் கருத்தரங்கில் கருத்துத் தெரிவித்த கல்வியமைச்சின் முஸ்லிம் அதிகாரிகள் அரபுக் கல்லூரிகளை குர்ஆன் மத்ரஸாக்கள் போல நினைத்துக் கதைத்தார்கள். அவ்வேளை அரபுக் கல்லூரிகளின் அதிபர்கள் அவ்விடத்திலே கூறிய வார்த்தை என்னவென்றால் எங்களுக்கு நீங்கள் கல்வி கருத்தரங்கை நடத்தி புதிய கல்விச்சீர்திருத்தம் பற்றி கூறியது போல் எமது அதிகாரிகளுக்கு அரபுக் கல்லூரிகள் என்றால் என்ன என்ற ஒரு கருத்தரங்கை நடத்த வேண்டும் என்பதாகும். ஏனென்றால் எமது சமூகத்திலே அரபுக் கல்லூரிகள் பற்றி அறிந்திராத நிலமையில் ஏதோ யானை பார்த்த குருடர்கள் போல் கருத்துச் சொல்கின்ற நிலமைதான் காணப்படுகின்றது.
முதலாவது நாங்கள் அரபுக் கல்லூரிகள் என்ன செய்கின்றன என்ற கேள்விக்கு அவை சிறந்த கல்விமான்களை உருவாக்குவது பற்றி நாங்கள் குறிப்பிட முடியும். தென்கிழக்கு, கொழும்பு, பேராதனை, கிழக்கு பல்கலைக்கழகங்களில் இருக்கின்ற அரபு இஸ்லாமிய நாகரீகப் பீடங்களில் கலாநிதிகள், விரிவுரையாளர்கள் நிறையப்பேர் இருக்கின்றார்கள். இவர்கள் அனைவரும் அரபுக் கல்லூரிகளால் உருவாக்கப்பட்டவர்கள் என்பதை மறந்துவிடக்கூடாது. மேலும் இந்த நாட்டிலே பல சட்டத்தரணிகள், அரசாங்கப் பாடசாலைகளில் பணிபுரியும் ஆங்கில ஆசிரியர்கள் கூட அரபுக் கல்லூரிகளில் இருந்து வெளியான மௌலவிமார்கள் என்பதை நாம் விளங்கிக் கொள்ள வேண்டும். இவ்வாறு சிறந்த கல்விமான்கள், பேராசிரியர்கள் போன்றவர்கள் எமது அரபுக் கல்லூரிகள் உருவாக்கிவிட்ட பொக்கிஷங்கள் என்பதை நாங்கள் மறந்து விடக்கூடாது.
நடுநிலையான குடும்பத்தைச் சேர்ந்த மாணவர்களை உயர் நிலைக்குக் கொண்டு வருகின்ற பணியிலே எமது அரபுக் கல்லூரிகள் மிகச் சிறந்த பங்களிப்பைச் செய்து வருகின்றன. அரபுக் கல்லூரிகளில் பயின்ற மௌலவிமார் அவர்களின் ஊர்களில் முதல் பட்டதாரி என்ற பெருமைக்குரியவர்களாக இருக்கின்றார்கள். இதே போல அநுராதபுரம், பொலநறுவை, மொனராகல போன்ற பிரதேச மாணவர்கள் அரபுக் கல்லூரிகளுக்கு வந்து அவர்கள் க.பொ.த சாதாரண, உயர்தரப் பரீட்சைகளுக்குத் தோற்றி பின்னர் அவர்கள் பல்கலைக்கழகத்திற்கு தெரிவு செய்யப்பட்டு பட்டதாரிகளாக பணிபுரிந்து வருகின்றார்கள். சிலர் அதிபர் பதவி போன்றவற்றையும் வகித்துக்கொண்டிருக்கின்றார்கள். அது மட்டுமல்லாமல் என்னிடத்திலே ஒரு பெற்றார் வந்து எனது பிள்ளையை உங்கள் கல்லூரியில் சேர்க்க விரும்புகிறேன். ஏனென்றால் பாடசாலைக்குச் செல்வதென்றால் டியூசனுக்கு அனுப்ப வேண்டும். டியூசனுக்கு அனுப்புவதற்கு என்னிடத்தில் பணம் இல்லை, என்னிடத்தில் வசதி இல்லை என்றார். பின்னர் அந்த பிள்ளை எம்மிடத்திலே எவ்வித டியூசனுக்கும் செல்லாமல் பயின்று மௌலவியாவாக மாத்திரமல்ல ஒரு பட்டதாரியாகவும் இருப்பதை இந்த இடத்திலே குறிப்பிட்டுக் கூற வேண்டும்.
எனவே இவ்வாறு நாடு முழுக்க வசதி குறைந்த மாணவர்கள் எமது அரபுக் கல்லூரிகளில் கற்று அவர்கள் பெரும் பட்டதாரிகளாக இந்நாட்டிலே சிறந்த சேவைகள் செய்து கொண்டிருப்பது இந்த அரபுக் கல்லூரிகள் இந்நாட்டுக்குச் செய்கின்ற பெரும் சேவையாகும்.
இன்று பெரும்பாலும் அரபுக் கல்லூரிகளிலே கணினி அறிவுள்ள மாணவர்கள் உருவாகிக்கொண்டிருக்கின்றார்கள். எந்தவொரு அரபுக் கல்லூரியை எடுத்துக்கொண்டாலும் அங்கு கணினி கூடம் கண்டிப்பாக காணப்படுகின்றது. கணினியிலே மாணவர்கள் பயிற்சி செய்கின்றார்கள், படிக்கின்றார்கள். அரசாங்கப் பாடசாலைகளில் படிக்கின்ற மாணவர்களுக்குக் கூட சிலவேளை கணினியைத் தொடுவதற்குக் கூட வாய்ப்பில்லாமல் இருக்கின்றது. ஆனால் அரபுக் கல்லூரிகளிலே பெரும்பாலும் இவ்வாறான கணினி கூடங்கள் இருக்கின்றன. அங்கே அதற்கென்று ஆசிரியர்கள் கற்பித்துக் கொண்டிருக்கின்றார்கள். மாணவர்கள் அத்துறையிலே மிகச் சிறந்த நிபுணத்துவத்தைப் பெற்று பலர் வெளிநாடுகளிலே பணிபுரிந்துகொண்டிருக்கின்றார்கள். மேலும் மத்ரஸாக்களிலே ஆங்கில மொழி, சிங்கள மொழி என்பன கண்டிப்பாகக் கற்பிக்கப்படுகின்றன சிங்கள மொழி எமது அரசாங்கப் பாடசாலைகளில் கூட கிடைக்காத கல்வி மத்ரஸா மாணவர்களுக்குக் கொடுக்கப்படுகின்றது. இவ்வாறு சமூகத்திலே ஒரு சிறந்த அறிவை எமது அரபுக் கல்லூரிகள் கொடுத்துக்கொண்டிருக்கின்றன என்பதை நாங்கள் மறந்து விட முடியாது.
அதே போல மார்க்க அறிவைக் கொடுப்பதிலே எமது கல்லூரிகள் செய்து கொண்டிருக்கின்ற அளப்பெரிய சேவைகளை இந்த இடத்திலே குறிப்பிட்டுக் கூற வேண்டும். மத்ரஸாக்கள் இல்லையென்றால் மார்க்க அறிவு இல்லை என்று கூறும் அளவுக்கு மார்க்கக் கல்வியிலே சிறப்புற்றவர்களாக மத்ரஸாக்களிலே இருந்து வெளியேறுகின்றவர்கள் காணப்படுகின்றனர். அரபு மொழியுடன் மார்க்க அறிவும் அவர்களுக்குப் போதிக்கப்படுகின்றன. அந்த அரபு மொழியைப் பொறுத்தவரையில் நவீன மொழியாற்றலுடன் சர்பு(الصرف), நஹ்வு (النحو), பலாகா(البلاغة) போன்ற இலக்கணங்களை மிகவும் விரிவாகப் படிக்கின்றார்கள்.
மேலும் அவர்கள் அல்குர்ஆன் விரிவுரை, தப்ஸீர் கலையில் விரிவான அறிவைப் பெறுகின்றார்கள். அல்குர்ஆனின் வசன விளக்கங்களைப் பெற்று அல்குர்ஆன் எந்த சந்தர்ப்பத்திலே இறங்கியது? அதனுடைய ஓதல் வகைகள் என்பவற்றையெல்லாம் அந்த மாணவர்கள் பயிலுகின்றார்கள். மேலும் அல்குர்ஆனிய விஞ்ஞானம் என்று சொல்லக் கூடிய உலூமுல் குர்ஆன் என்ற கல்வியையும் அந்த மாணவர்கள் பெறுகின்றார்கள். இதேபோல ஹதீஸிலே அந்த மாணவர்கள் பெறுகின்ற அறிவு ஸிஹாஹுஸ்ஸித்தாக்கள் மாத்திரமல்ல பல ஹதீஸ் கிரந்தங்களை அந்த ஹதீஸினுடைய தரங்கள், தராதரங்கள் போன்றவற்றை பயின்றுகொண்டிருக்கின்றார்கள். அது மாத்திரமா பிக்ஹ் கலையில் அவர்கள் பெறுகின்ற கல்வி அதாவது பிக்ஹிலே வணக்கம், திருமணம், வியாபாரம், சட்டங்கள் போன்ற பல்வேறு விடயங்களை அவர்கள் கற்று அதிலே அவர்கள் சிறந்த நிபுணத்துவம் பெறுகின்றார்கள். அது மாத்திரமா அவர்கள் வாரிசுரிமைச் சட்டங்களை கற்று இந்த நாட்டு நீதிமன்றத்திற்கு கூட அறிவுச் சேவையை வழங்குகிறார்கள். மேலும் இஸ்லாமிய வரலாற்றிலே மூல நூல்களைக் கற்று இஸ்லாமிய வரலாற்றில் சிறந்த அறிவைப் பெறுகின்றார்கள். இவ்வாறு எமது அரபுக் கல்லூரிகளில் மாணவர்கள் பயிலுகின்ற பாடங்களை எம்மால் விபரித்துக் கூற முடியும். இவ்வாறு எத்தனையோ கலைகளை எமது மாணவர்கள் பயின்றுகொண்டிருக்கின்றார்கள்.
மேலும் இந்நாட்டின் அரபுக் கல்லூரிகளிலே பெறுமதி வாய்ந்த நூல் நிலையங்கள் உள்ளன. அதிலே ஆயிரக்கணக்கான கிரந்தங்கள் காணப்படுகின்றன. அரபு மொழியிலே இருக்கின்ற தப்ஸீர், ஹதீஸ், பிக்ஹ் போன்ற ஒவ்வொரு துறையிலும் நிறைந்த நூல்களைக் கொண்டு ஒவ்வொரு அரபுக் கல்லூரிகளின் நூல் நிலையங்கள் காணப்படுகின்றன். இந்நாட்டின் அறிஞர்கள் பலர் அரபு மொழியிலே புத்தகங்களை எழுதிய வரலாற்றையும் நாம் இந்த இடத்திலே நினைத்துப் பார்க்க வேண்டும்.
எனவே இந்நாட்டிலே அரபுக் கல்லூரிகளிலே இருக்கின்ற அரபு நூல்கள் அரபு பொக்கிஷங்கள் எங்குமில்லை என்பதை இந்த இடத்திலே நாங்கள் சுட்டிக் காட்ட வேண்டும். 19 ஆம் நூற்றாண்டிலிருந்து இந்த நாட்டிலே கல்விப்பணிபுரியும் அரபுக் கல்லூரிகள் இந்த நாட்டிற்கு செய்திருக்கின்ற சேவைகளை நாங்கள் யாரும் குறைத்து மதிப்பிடக் கூடாது. மாலைதீவின் முன்னாள் ஜனாதிபதி அப்துல் கையூம் கூட இலங்கையில் காலியிலே இருக்கின்ற அரபுக் கல்லூரி ஒன்றில் பயின்றவர் என்பதை மறந்துவிடக் கூடாது.
எனவே இவ்வாறு இந்த நாட்டுக்கு 19 ஆம் நூற்றாண்டு முதல் சேவை செய்து கொண்டிருக்கின்ற இந்த அரபுக் கல்லூரிகளை மட்டமாகப் பேசுவதையிட்டு நாங்கள் கவலைப்படுகின்றோம்.இந்த நாட்டிலே இருக்கின்ற அரபுக் கல்லூரிகள் ஏதாவது ஒரு பயங்கரவாதச் செயலிலே ஈடுபட்டதென்று யாராவது ஒருவரால் குற்றம் சாட்ட முடியுமா? எமது அரபுக் கல்லூரிகள் மிகவும் ஒழுங்காக சீராக எவ்வித பயங்கரவாதச் செயலும் இல்லாமல் நாட்டுக்கும் தேசத்துக்கும் விசுவாசம் உள்ளதாகத்தான் உருவாகி நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன.
இந்த இடத்திலே எவராவது ஒரு அரபுக் கல்லூரி பற்றி குறைத்து குற்றம் சுமத்த முடியாது என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.மார்க்கத்தின் காவலர்கள் உலமாக்கள். அந்த உலமாக்களை உருவாக்குகின்ற இடங்கள் அரபுக் கல்லூரிகள். அரபுக் கல்லூரிகள் இல்லையென்றால் உலமாக்கள் உருவாக முடியாது. மார்க்கத்தின் சட்டதிட்டங்களை, விளக்கங்களை எடுத்துக் கூற முடியாது.
எனவே மத்ரஸாக்கள்தான் இந்த நாட்டிலே மார்க்கத்தைப் பாதுகாக்கின்ற ஒரு காவலனாக செயற்பட்டுக் கொண்டிருக்கின்றன என்பதை நாம் விளங்கிக் கொள்ள வேண்டும்.- Vidivelli
Not true, mislead the nation
ReplyDeleteThe Problem Has Started after Importing the Saudi Wahhabi Curriculum Which led to The Radicalization and Extremism
ReplyDeleteRadicalization and Extremism
The problem has Started after Importing and Imposing Saudi Wahhabi Curriculum Which Led These Madrasas to Extremism and radicalization.
You are Very True
ReplyDelete