Header Ads



25 நாடுகள் பிரேரணை தொடர்பில் எதிர் நிலைப்பாட்டில் உள்ளமை தெளிவாகிறது, இலங்கைக்கு எதிரான குற்றச்சாட்டுகள் அடிப்படையற்றவை,


இலங்கைக்கு எதிராக சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் அடிப்படையற்றவை என வௌிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்தார்.

ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட 46/1 தீர்மானம் தொடர்பில் விளக்கமளிப்பதற்காக சற்று முன்னர் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் அவர் இதனைக் கூறினார்.

47 உறுப்பு நாடுகளைக் கொண்ட ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் 22 நாடுகள் மாத்திரமே பிரேரணைக்கு ஆதரவாக வாக்களித்ததாகவும், 11 நாடுகள் எதிராக வாக்களித்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

14 நாடுகள் வாக்களிப்பில் கலந்துகொள்ளாத நிலையில், 25 நாடுகள் இந்த பிரேரணை தொடர்பிலான எதிர் நிலைப்பாட்டில் உள்ளமை வௌிப்படையாக தெரிவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

பிரேரணையை கொண்டு வந்த நாடுகளினால் மனித உரிமைகள் பேரவையில் பெரும்பான்மையைப் பெற்றுக்கொள்ள முடியாமற்போனதாகவும் அவர் குறிப்பிட்டார்.

உயர் நீதிமன்றம் உள்ளிட்ட நீதிமன்ற கட்டமைப்பு மற்றும் ஜனாதிபதி ஆணைக்குழுக்களினால் நாட்டின் இறையாண்மை மற்றும் மனித உரிமைகள் பாதுகாக்கப்படுவதாகவும் தமிழ், சிங்கள, முஸ்லிம் மக்கள் அனைவரும் ஒற்றுமையாக வாழக்கூடிய சூழல் உருவாக்கப்பட்டுள்ளதாகவும் வௌிவிவகார அமைச்சர் குறிப்பிட்டார்.

ஐக்கிய நாடுகளின் கொள்கை பிரகடனத்திற்கு எதிராக உறுப்பு நாடுகள் செயற்பட முடியாது என கூறிய தினேஷ் குணவர்தன, அதன் அடிப்படைக் கொள்கைகளை மீறியே ஒருங்கிணைந்த நாடுகள் இலங்கை தொடர்பிலான பிரேரணையை கொண்டு வந்துள்ளதாகவும் குறிப்பிட்டார்.

1 comment:

Powered by Blogger.