அமைச்சர் சரத் வீரசேகரவின் செயற்பாடுகள், எமக்கு தனித் தமிழீழத்தைப் பெற்றுத் தந்துவிடும் - செல்வம் Mp
- IBC -
பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையிலான போராட்டத்தில் மக்கள் எழுச்சியாக கலந்து கொண்டிருந்தனர். மக்கள் ஜனநாயக முறையில் கொரோனா சமூக இடைவெளியை கடைப்பிடித்து போரட்டத்தை மேற்கொண்டிருந்தார்கள்.
ஆகவே இந்த போராட்டம் ஜனநாயக ரீதியில் இடம் பெற்ற ஓர் போராட்டம் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார்.
மன்னாரில் உள்ள அலுவலகத்தில் இன்று வெள்ளிக்கிழமை -19- இடம் பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,
பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையிலான ஆர்ப்பாட்டத்தில் மக்கள் எழுச்சியாக கலந்து கொண்டிருந்தனர். இந்த நிலையில் போராட்டத்தில் கலந்து கொண்ட இளைஞர்கள் , பொது மக்கள் , நாடாளுமன்ற உறுப்பினர்களை பொலிசார் தேடித் தேடி விசாரிக்கின்றார்கள்.
நீதிமன்ற உத்தரவை மீறியதாகவும், நீதிமன்றத்தை தமிழர்கள் அவமதித்துள்ளார்கள் என காட்டுவதற்காகவும் இந்த முயற்சி நடை பெறுகின்றது.
என்னைப் பொறுத்த மட்டில் மக்களுடைய எழுச்சி போராட்டம் இலங்கை அரசாங்கத்தினால் எமது மக்களுக்கு செய்யப்பட்ட அநீதிக்கு எதிராகவும் தமிழ் மக்கள் வாழ்கின்ற இடங்களை புறக்கணிக்கின்ற அல்லது சிங்களக் குடியேற்றங்களை உள்ச்சேர்க்கின்ற செயற்பாட்டையும் வன விலங்கு பறவைகள் சரணாலயம் , மகாவலி வலயம் , புதைபொருள் ஆராய்ச்சி என்ற பெயரில் தமிழரின் மரபுகளை அழித்தல் போன்றவற்றிற்கு எதிராகவே மக்கள் கிளர்ந்தெழுந்துள்ளார்கள்.
இதே நேரம் ஐ.நா மனித உரிமை ஆணையாளரினால் கொடுக்கப்பட்டுள்ள அறிக்கையானது மிகவும் வலுவான அறிக்கையாக இருக்கிறது.
இதனால் மக்கள் புரட்சிகளை தடை செய்வதும் அவர்களை அச்சமூட்டுவதும் இந்த ஆர்ப்பட்டத்தில் கலந்து கொண்ட நாடாளுமன்ற உறுப்பினர்களின் உறுப்புறுரிமைகளை இல்லாது செய்கின்ற வன்முறையாகத்தான் பொலிஸாரின் நடவடிக்கை உள்ளது.
பொது மக்கள் பாதுகாப்பு தொடர்பான அமைச்சர் சரத் வீரசேகரவின் செயற்பாடுகள் எமக்கு தனித் தமிழீழத்தை பெற்றுத் தந்து விடும். ஏன் எனில் ஐ.நா சபை தீர்மானம் நிறை வேற்றினால் இரண்டாக உடையும் என்று கூறியிருக்கின்றார்.
சரத் வீர சேகரவின் கருத்து வடக்கு கிழக்கு தமிழர்களை இல்லாதொழிக்க வேண்டும் என செயற்படுகின்றார். ஆகவே தமிழீழம் கிடைப்பதற்கு அதிக வாய்ப்பு இருப்பதாகவே நான் கருதுகின்றேன்.
Post a Comment