Header Ads



கருணாவின் கருத்துக்கு எதிரான, மனு வாபஸ்


இராணுவ வீரர்கள் கொலை தொடர்பில் கடந்த பொதுத் தேர்தல் சமயத்தில் முன்னாள் பிரதி அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் என்ற கருணா அம்மானின் கருத்து தொடர்பில் விசாரணையொன்றை மேற்கொள்ளுமாறு பொலிஸ்மா அதிபருக்கு உத்தரவொன்றை வௌியிடுமாறு கோரி தாக்கல் செய்யப்பட்டிருந்த அடிப்படை உரிமை மனுவொன்று இன்று (09) வாபஸ் பெறப்பட்டதை தொடர்ந்து, அதை நீக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. 

கடுவலை முன்னாள் மாநகர உறுப்பினரான போசெத் கலெஹெ பதிரணவால் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. 

குறித்த மனு இன்று எல்.டி.பீ. தெஹிதெனிய, முர்து பெர்ணான்டோ மற்றும் அச்சல வெங்கப்புலி ஆகிய மூவரடங்கிய நீதிபதிகள் குழாம் முன்னிலையில் அழைக்கப்பட்டது. 

இதன்போது, கருணா அம்மானின் கருத்து தொடர்பில் பொலிஸ்மா அதிபரின் உத்தரவின் கீழ் நீதிமன்றிற்கு விடயங்களை அறிவித்து விசாரணையொன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக மனுதாரர் தரப்பு சட்டத்தரணி தெரிவித்தார். 

குறித்த சம்பவம் தொடர்பில் தற்போதைய நிலையில் விசாரணையொன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளதால் குறித்த மனுவை தொடர்ந்து முன்னெடுப்பது அவசியமற்றது எனவும் அதனை வாபஸ் பெற அனுமதியளிக்குமாறும் மனுதாரர் தரப்பு சட்டத்தரணி நீதிமன்றில் கோரியிருந்தார். 

குறித்த கோரிக்கையை ஏற்ற உயர்நீதிமன்றம் மனுவை வாபஸ் பெற அனுமதி வழங்கியுள்ளது.

1 comment:

Powered by Blogger.