Header Ads



ஈரானிய உதவியுடன், இலங்கையில் நிறைவேறிய சாதனை


உமா ஓயா பல்நோக்கு மேம்பாட்டுத் திட்டமானது மார்ச், 2010 இல் உத்தியோகபூர்வமாகத் தொடங்கி வைக்கப்பட்டது. இதன் ஆரம்ப செலவு 514 மில்லியன் அமெரிக்க டொலர்களாக மதிப்பிடப்பட்டிருந்தது. இத்திட்டத்தில் ஏற்பட்ட தாமதங்களினால் இதனை நிறைவு செய்வதற்கான காலத்தை தொழில் நிறுவனத்தார் நீடித்துத் தந்துள்ளனர். இந்த ஆண்டு இத்திட்டம் நிறைவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நீரின் கீழ்நிலைத் தேவையைப் பாதிக்காமல் அதிகப்படியான நீரை உமாஓயா ஆற்றுப் பள்ளத்தாக்கின் மேல் பகுதிகளிலிருந்து தென்கிழக்கு வரண்ட மண்டலத்தில் உள்ள கிரிந்தி ஓயா ஆற்றுப் பள்ளத்தாக்குக்கு மாற்றுவது இத்திட்டத்தின் நோக்கமாகும். இதனால், இப்பகுதியில் நீரின் தேவை உகந்த முறையில் பூர்த்தி செய்யப்படுகின்றது. இச்செயற்பாட்டின் போது, நீரூற்றுக்களின் இருப்பிடங்களுக்கும், அது தேவைப்படும் இடத்திற்கும் இடையிலான உயரத்தில் கணிசமான வேறுபாடு காணப்படுவதால், பொருத்தமான நீர் மின்சக்தியை உருவாக்குவது அவசியமானதாகக் கருதப்படுகிறது. இதனால், நீர்மின் உற்பத்திக்கு இதனை திறம்பட பயன்படுத்த முடியும்.

தேவையான நீரானது முதலாவது அணையான புஹுல்பொல அணைக்குப் பின்னால் சேமிக்கப்படுவதனால் பெறப்படுகிறது. இது உமாஓயா ஆற்றை மையப்படுத்தியுள்ளது. மேலும், இந்நீர் தைராபா பகுதியிலுள்ள மஹா தொதில்ல ஓயா ஆற்றை மையப்படுத்தி கட்டப்பட்டுள்ள மற்றொரு அணையை உடைய நீர்தேக்கத்தினூடாக அமைந்துள்ள சுமார் 3.75 கி.மீ தூர சுரங்கப்பாதை வழியாக இணைக்கப்பட்டு மற்றொரு சுரங்கப் பாதை வழியாக நிலத்தடி மின்நிலையத்திற்கு அனுப்படும். மின்சக்தி நிலையத்திலிருந்தான வெளியேற்றம் சுமார் 3.6 கி.மீ தூரம் கொண்ட டெயில்ரேஸ் சுரங்கப்பாதை வழியாக கிரிந்தி ஆற்றின் கிளை நதியான அலிகொட எர ஊடாக அமைக்கப்பட்டுள்ளது.

உமாஓயா பல்நோக்கு மேம்பாட்டுத் திட்டம் இலங்கையின் தென்கிழக்கு உலர் மண்டலத்திலிருந்து 5,000 ஹெக்டர் புதிய நிலங்களுக்கு நீர்ப்பாசனம் செய்வதற்கு 23 கி.மீ சுரங்கப் பாதை வழியாக உமா ஓயாவிலிருந்து கிரிந்தி ஓயா வரை 145 எம்.சி.எம் தண்ணீரை திருப்புவதற்கு உதவுகின்றது. அவ்வாறே, இத்திட்டத்தின் ஊடாக அனைத்து இலங்கையருக்கும் பயனளிக்கும் வகையில் தேசிய மட்டத்தில் சுமார் 120 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்வதற்கான ஒரு நீர்மின் உற்பத்தி ஆலையை அமைப்பதும் நோக்கமாகும்.


இத்திட்டத்தின் தனிக்கூறுகள் விரிவான பரப்பளவில் பரந்து காணப்படுவதோடு, ஒன்றிலிருந்து மற்றொன்று வெகுதொலைவில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும். எனவே, ஐரோப்பா மற்றும் ஈரானைச் சேர்ந்த நன்கு தேர்ச்சி பெற்ற ஆலோசனைப் பொறியியலாளர்கள் விசாரணை, ஆய்வு மற்றும் மேற்பார்வைக்கு பணியமர்த்தப்பட்டிருந்தனர். இதன் இறுதி அறிக்கைக்கு தொழில் நிறுவனத்தார் ஒப்புதல் அளித்தனர். இதனால், இந்த திட்டத்தை நிறைவேற்றுவதற்காக,ஈரான், இலங்கை மற்றும் ஐரோப்பாவைச் சேர்ந்த துணை ஒப்பந்தக்காரர்கள் வேலைத் தளத்திலிருந்து இலங்கை, ஈரான் மற்றும் பிற நாடுகளைச் சேர்ந்த பொறியியலாளர்கள், தொழில்நுட்ப வல்லுநர்கள் மற்றும் தொழிலாளர்களுடன் வெவ்வேறு பணிமுனைகளில் ஈடுபடுபட்டிருந்தனர். இதனால், தற்போது இத்திட்டத்தின் 96.35 வீதமான பணிகள் நிறைவடைந்துள்ளன.

இத்திட்டத்தின் அனுகூலங்கள் பின்வருமாறு:

இத்திட்டத்தின் மூலமாக ஆண்டுக்கு 231 ஜிகா வாற் மின்சாரம் உற்பத்தி செய்யும் தேசிய மின் தொகுப்புக்கு 120 மெகா வாற் மின்சாரம் மேலதிகமாக சேர்க்கப்படுகிறது. இது தற்போதுள்ள மின்சக்தி கொள்ளளவில் சுமார் 5 வீதத்திற்குச் சமமானதாகும். இதுநாட்டின் முன்னேற்றப் பாதையில் இது ஒரு முக்கிய படியாகும். இது பலரின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதோடு, தொழில்துறை மற்றும் பொருளாதார வளர்ச்சிக்கும் உதவும்.

இதனால் தென்கிழக்கு உலர் மண்டலத்தில் விவசாய நடவடிக்கைகளில் பெரிய மாற்றங்கள் ஏற்படும். குறிப்பாக ஹம்பாந்தோட்டை, மொனராகலை, அம்பாறை மற்றும் அயல் மாவட்டங்களில் இதனைக் குறிப்பிட முடியும். இது உணவு உற்பத்தி நடவடிக்கையின் அதிகரிப்புக்கு வழிவகுப்பதோடு, நாட்டின் வேலையில்லாப் பிரச்சினையை குறிப்பிட்ட அளவுக்கு குறைக்கும். இத்திட்டத்தில் அமையப் பெறும் இரண்டு அணைக்கட்டுகள் மூலம் நீர்வளத்தை சிறப்பாக நிர்வகிக்க முடிகின்றது. இது வரண்ட காலங்களில் நீரை சேமிக்க உதவுவதோடு, வெள்ளநீரை பொதுமக்களின் நலனுக்காக பயன்படுத்தவும் வழி செய்கின்றது. இதன் மூலம் தொழில்துறையின் வளர்ச்சிக்கு உதவ முடியும்.

அப்துல்லா 

1 comment:

  1. ஈரான் மட்டுமல்ல, சஊதி அரேபியா, குவைத், ஐக்கிய எமிரேட்ஸ்,ஓமான், கட்டார் போன்ற நாடுகளும் எவ்வளவோ உதவிகள் செய்துள்ளன.இவற்றுக்கு ஒத்தாசையாக இருந்தவர்கள் எமது அரசியல்வாதிகள்.ஆனால் பெரும்பான்மை (சில )அரசியல் வாதிகள் இனவாதம் கதைக்கும் போது பேசாமடந்தைகளாக இருந்ததும் நம் முஸ்லிம் அரசியல்வாதிகளே.இந்த உதவிகள், நன்கொடைகள் பற்றி சிங்கள தமிழ் ஊடகங்களில் பெரூம்பாலும் கூறப்படுவதில்லை.இதை நாடாளுமன்றத்தில் கூட இவர்களால் கதைக்க முடியாதா? அப்படிச் செய்தால் ஓரளவு அவர்களின் இனவாததீயை கட்டுப்படுத்த முடியும்.நியாஸ் இப்ராஹிம்

    ReplyDelete

Powered by Blogger.