Header Ads



இலங்கை சிறுபான்மை இன மக்கள், பாதிப்புறச் செய்யப்பட்டுள்ளனர் - மனித உரிமைகள் கண்காணிப்பகம்


இலங்கையின் மனித உரிமை விவகாரங்களை ஆராய்வதற்காக புதிதாக ஒரு தீர்மானத்தை ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவை நிறைவேற்ற வேண்டும் என மனித உரிமைகள் கண்காணிப்பகம் வலியுறுத்தியுள்ளது.

இந்த மாதம் 22 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள ஐக்கிய நாடுகளின் மனித உரிமை பேரவையின் 46 ஆவது கூட்டத்தொடரில் அந்தத் தீர்மானத்தை முன்வைக்குமாறு மனித உரிமைகள் கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது.

ஊடகவியலாளர்கள், சிவில் செயற்பாட்டாளர்கள், சட்டத்தரணிகள், பாதிக்கப்பட்டவர்களின் குடும்ப உறவுகள் மற்றும் சிறுபான்மை இன மக்களை இலங்கை அரசாங்கம் பாதிப்புறச் செய்துள்ளதாக மனித உரிமைகள் கண்காணிப்பகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

எனவே, இலங்கை விவகாரத்தை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு கொண்டு செல்லக் கூடிய பிரேரணைக்கு ஆதரவு வழங்குமாறு ஐக்கிய நாடுகள் சபையின் உறுப்பு நாடுகளிடம் மனித உரிமைகள் கண்காணிப்பகம் கோரியுள்ளது.

நாட்டில் பாரிய மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டவர்கள் மற்றும் சர்வதேச மனிதாபிமான சட்டங்களை மீறியமை தொடர்பில் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு பயணத்தடை விதிக்க வேண்டும் எனவும் கண்காணிப்பகம் வலியுறுத்தியுள்ளது.

இலங்கைக்கு நிதியுதவிகளை வழங்கும் போது, அதனை மனித உரிமை வழிகாட்டல்களுக்கு அமைய வழங்குமாறும் மனித உரிமைகள் கண்காணிப்பகம் வௌிநாட்டு நிதி நிறுவனங்கள் மற்றும் நன்கொடையாளர்களிடம் கேட்டுக்கொண்டுள்ளது.

No comments

Powered by Blogger.