ஒரு வருடத்தில் இனிப்பு, பண்டங்களுக்காக 5,000 கோடி ரூபா செலவு
நாட்டு மக்கள் ஒரு வருடத்தில் சுமார் 5,000 கோடி ரூபா பெறுமதியான வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட சீனி மற்றும் இனிப்பு பண்டங்களை பயன்படுத்தியிருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள 2020 ஆம் ஆண்டு அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2019 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 2020 ஆம் ஆண்டில் நாட்டிற்கு இறக்குமதி செய்யப்பட்ட பெரும்பாலான பொருட்களுக்கான இறக்குமதி செலவு குறிப்பிடத்தக்க வகையில் குறைந்துள்ளது. இருப்பினும், சீனி மற்றும் இனிப்பு பண்டங்களுக்கான இறக்குமதி செலவு குறிப்பிடத்தக்க அளவு அதிகரித்துள்ளது. இதற்காக 75.9 மில்லியன் அமெரிக்க டொலர்கள் செலவிடப்பட்டுள்ளது.
வெளிநாடுகளிலிருந்து சீனி மற்றும் இனிப்பு பண்டங்களை நாட்டுக்கு கொண்டு வருவதற்காக 2019 ஆம் ஆண்டில் செலவிடப்பட்ட தொகை 201.2 அமெரிக்க மில்லியன் டொலர்களாகும். இருப்பினும் இத்தொகை கடந்த வருடத்தில் 277.1 மில்லியன் அமெரிக்க டொலர்களாக அதிகரித்திருப்பதாக மத்திய வங்கியின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இது இலங்கை நாணயத்தில் சுமார் 50 ஆயிரம் மில்லியன் என்று கணிப்பிடப்படுகின்றது. இது 37.7 % அதிகரிப்பாகும்.
இதேவேளை எரிபொருளுக்கான இறக்குமதி செலவு 2019 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 2020 ஆம் ஆண்டு குறிப்பிடத்தக்க வகையில் குறைந்துள்ளது. 2019 ஆம் ஆண்டில் மசகு எண்ணெய் ,சுத்திகரிக்கப்பட்ட எரிபொருள் மற்றும் நிலக்கரி ஆகியவற்றை நாட்டுக்கு இறக்குமதி செய்வதற்காக 3891.6 மில்லியன் அமெரிக்க டொலர்கள் செலவிடப்பட்டுள்ளது. இது கடந்த வருடத்தில் 2541.6 மில்லியன் அமெரிக்க டொலர்களாக குறைவடைந்துள்ளது. அதாவது 34.7 மில்லியனாக குறைவடைந்துள்ளது.
தனியார் வாகன இறக்குமதி 2019 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 2020 ஆம் ஆண்டில் 65% குறைவடைந்துள்ளமை விசேட அம்சமாகும். 2019 ஆம் ஆண்டில் தனியார் வாகன இறக்குமதிக்காக 815.7 மில்லியன் அமெரிக்க டொலர்கள் செலவிடப்பட்டுள்ளது.
2020 ஆம் ஆண்டில் இத்தொகை 282.9 மில்லியன் அமெரிக்க டொலர்களாக குறைவடைந்துள்ளதாக இலங்கை வங்கியின் புதிய அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. 2020 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் இலங்கைக்கு மேற்கொள்ளப்பட்ட தனியார் வாகன இறக்குமதிக்கான செலவு 0.5 மில்லியன் அமெரிக்க டொலர்களாகும்
Post a Comment