Header Ads



நாட்டிலிருந்து தப்பிச்சென்ற 129 பேருக்கு எதிராக சிவப்பு அறிவித்தல்


சென்னையில் கைது செய்யப்பட்ட கிம்புலா எல குணா மற்றும் அவரது மகன் உள்ளிட்ட ஐந்து குற்றவாளிகளையும் நாட்டிற்கு அழைத்து வருவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

சர்வதேச பொலிஸார் மற்றும் இராஜதந்திர ரீதியில் நடவடிக்கைககள் எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பல்வேறு குற்றச்செயல்களில் ஈடுபட்டு, வௌிநாடுகளில் தலைமறைவாகியுள்ள சந்தேகநபர்களை கைது செய்வதற்கு சர்வதேச பொலிஸாரினூடாக சிவப்பு அறிவித்தல் விடுக்கப்படுகின்றன.

இதனடிப்படையில் நாட்டிலிருந்து தப்பிச்சென்ற 129 பேருக்கு எதிராக இதுவரை சிவப்பு அறிவித்தல் பிறப்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர், பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

இவர்களில் 40 பேர் நிதி மோசடியில் ஈடுபட்டுள்ளமை தெரியவந்துள்ளது.

முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்கவை இலக்குவைத்து குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவத்தின் பிரதான சந்தேகநபரான கிம்புலா எல குணா எனப்படும் சின்னையா குணசேகரன் சென்னை விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டார்.

கிம்புலா எல குணாவுடன் அவரது மகன் உட்பட 5 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டதாக Times Of India பத்திரிகை நேற்று முன்தினம் செய்தி வெளியிட்டிருந்தது.

No comments

Powered by Blogger.