Header Ads



இந்திய வெளியுறவு அமைச்சரும், இலங்கை ஜனாதிபதியும் இன்று பேசிக்கொண்டது என்ன...?


கோவிட் 19 வைரஸ் நோய்க்கு சிகிச்சையளிக்க இந்தியா தயாரிக்கும் தடுப்பூசியை ஏனைய நாடுகளுக்கு வழங்கும் போது இலங்கைக்கு முன்னுரிமை அளிக்க தயாராக இருப்பதாக இந்திய வெளியுறவு அமைச்சர் கலாநிதி எஸ்.  ஜெய்சங்கர் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களிடம் தெரிவித்தார்.

இரண்டு நாள் விஜயமொன்றை மேற்கொண்டு இலங்கை வந்த இந்திய அமைச்சர் இன்று (06) ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி அவர்களை சந்தித்தார். இச்சந்திப்பின் போது இடம் பெற்ற கலந்துரையாடலில், கோவிட் 19 தொற்றுநோயைக் கட்டுப்படுத்துவதற்கான எதிர்கால நடவடிக்கை குறித்து கருத்துத் தெரிவித்த ஜனாதிபதி அவர்கள் சிகிச்சையின் அவசியத்தை சரியாக மதிப்பிட்ட பின்னர், இந்தியாவில் தயாரிக்கப்படும் கோவிட் தடுப்பூசியைப் பெற இலங்கை விருப்பத்துடன் உள்ளதாக கூறினார்.

தடுப்பூசியை பிற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் போது இலங்கைக்கு முன்னுரிமை அளிப்பதாக கலாநிதி ஜெய்சங்கர் உறுதியளித்தார். பரஸ்பர நன்மைகளை அதிகரிக்க இந்திய-இலங்கை இருதரப்பு உறவை பரஸ்பர நன்மையை பெறும் வகையில் மேம்படுத்த ஜனாதிபதி அவர்களும் இந்திய அமைச்சரும் இணக்கம் தெரிவித்தனர்.

இந்திய பங்களிப்புடன் இலங்கையில் ஏற்கனவே நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் திட்டங்களுக்கு மேலதிகமாக, ஒத்துழைப்பு வளர்ச்சியை விரிவுபடுத்தக்கூடிய பல துறைகள் கலந்துரையாடலின் போது அடையாளம் காணப்பட்டன. கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையம், எல்.என்.ஜி (திரவ, இயற்கை எரிவாயு) மின் திட்டம், வீடுகள் மற்றும் வீதிகள் அமைத்தல், விவசாய அபிவிருத்தி மற்றும் ஆராய்ச்சி, தகவல் தொடர்பு தொழில்நுட்பம் மற்றும் மாற்று மின்சக்தி மூலங்களின் அபிவிருத்தி ஆகியவை இதில் அடங்கும்

முறையான கல்வியை பெற்ற இளைஞர்கள் இலங்கையில் உள்ளதாக குறிப்பிட்ட ஜனாதிபதி அவர்கள் அந்த இளைஞர்களுக்கு பல்வேறு துறைகளில் முறையான தொழில் பயிற்சி அளிக்க இந்தியாவின் உதவியை எதிர்பார்ப்பதாக தெரிவித்தார். இலங்கையின் குறிப்பிட்ட தேவைகள் தெரிவிக்கப்படும்போது தொழில் பயிற்சி திட்டங்களுக்கு உதவ தயாராக இருப்பதாக திரு ஜெய்சங்கர் கூறினார். சூரிய வெப்பத்தை மாற்று மின்சக்தி மூலமாக பயன்படுத்த இந்திய உதவி ஏற்கனவே பெறப்பட்டுள்ளது. இந்த துறைக்கு எதிர்காலத்தில் இந்தியா மேலும் நிதி மற்றும் தொழில்நுட்ப உதவிகளை வழங்க முடியும் என்று அமைச்சர் கூறினார்.

கோவிட் 19 தொற்றுநோயால் வீழ்ச்சியடைந்துள்ள சுற்றுலாத் துறையை புதுப்பிக்க வேண்டிய அவசியம் குறித்து இரு தரப்பினரும் கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டனர்.

“மாலைத்தீவு தொடர்ந்து பபல் முறைமையில் சுற்றுலாப் பயணிகளை அழைத்து வருகிறது. ஏற்கனவே ஏராளமான இந்தியர்கள் அங்கு சென்றுள்ளனர். தொற்றுநோயால் ஏற்படும் மன அழுத்தத்திலிருந்து விடுபட மக்கள் சுற்றுலா பயணம் செய்ய விரும்புகிறார்கள். புது டில்லியில் உள்ள ஹோட்டல்களில் இப்போது இந்தியர்கள் நிறைந்திருக்கிறார்கள். இலங்கைக்குச் செல்ல நாங்கள் அவர்களை ஊக்குவிக்க முடியும், ”என்றும் அமைச்சர் ஜெய்சங்கர் குறிப்பிட்டார்.

சுற்றுலாத்துறையை புதுப்பிக்க புதிய நடவடிக்கைகள் குறித்து முடிவு செய்ய இந்தியா, இலங்கை, மாலைத்தீவு மற்றும் நேபாளம் ஆகியவை இணைந்து விரைவில் கலந்துரையாடல் ஒன்றை நடத்த முடிவு செய்யப்பட்டது.

இலங்கைக்கான இந்திய உயர் ஸ்தானிகர் கோபால் பாக்லே, இந்திய வெளியுறவு அமைச்சின் இணை செயலாளர்கள் அமித் நாரங் மற்றும் கலாநிதி ஷில்பக் அம்புலே, ஜனாதிபதியின் செயலாளர் பி.பீ. ஜயசுந்தர, ஜனாதிபதியின் தலைமை ஆலோசகர் லலித் வீரதுங்க, வெளியுறவு செயலாளர் அட்மிரல் ஜயநாத் கொலம்பகே ஆகியோர் இக்கலந்துரையாடலில் பங்குபற்றினர்.


ஜனாதிபதி ஊடகப் பிரிவு

2021.01.06

1 comment:

  1. 13 திருத்தச் சட்டத்தை அப்படியே அமல் நடத்த வேணடும். அதில கை வைக்கக்கூடாது. இனி புதிய அரசியல் சட்ட தயாரிப்பு, மாகாண சபை ஒழிபபு அனைத்தக் கற்பனைகளும் பழைய பெட்டியில் போட்டு பூட்டிவைக்க வேண்டும்.

    ReplyDelete

Powered by Blogger.