Header Ads



ராவணா பாணியை அருந்தினாரா தயாசிறி..? நடந்தது என்ன..??


கொவிட் தொற்றுக்கு இலக்காகி சிகிச்சை பெற்று வரும் தாம் ராவணா பாணியை அருந்தவில்லை என அமைச்சர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.

உள்நாட்டு மருந்து ஒன்று வழங்கப்பட்டதாகவும், தாம் அதனை பயன்படுத்தி வருவதாகவும் வெளியாகும் செய்திகளில் எவ்வித உண்மையும் கிடையாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

குறித்த நபர் தம்மை தொடர்பு கொள்வதற்கு பல்வேறு தடவைகள் முயற்சித்த போதிலும் அதற்கு தாம் இடமளிக்கவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.

எனவே நாட்டு மக்கள் அனைவரும் இந்த விடயம் குறித்து தெளிவுடன் இருக்க வேண்டுமென தெரிவித்துள்ளார்.

மருத்துவர்கள் மற்றும் தாதியரின் ஆலோசனை வழிகாட்டல்களுக்கு அமைய சுகாதார விதிமுறைகளை பின்பற்றி தாம் தனிமைப்படுத்தலில் இருப்பதாகத் தெரிவித்துள்ளார்.

தாமோ தம்முடைய குடும்ப உறுப்பினர்கள் எவருமோ இந்த ராவணா பாணியை அருந்தவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

சிகிச்சை பெற்று வரும் அமைச்சர் வீடியோ தொழில்நுட்பம் ஊடாக சிங்கள தொலைக்காட்சி சேவை ஒன்றுக்கு இது குறித்து விளக்கமளித்துள்ளார்.

ராவணின் வழித்தோன்றலான தாம் கொவிட்டை குணப்படுத்தக் கூடிய மருந்து கண்டு பிடித்துள்ளதாகவும், பல்வேறு பிரபுக்கள் இந்த மருந்தை பயன்படுத்தியுள்ளதாகவும், அமைச்சர் தயாசிறி ஜயசேகரவிற்கும் இந்த மருந்தை வழங்கியதாகவும் தேவேந்திர லக்ஸித ரணசிங்க என்னும் உள்நாட்டு மருத்துவர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.