Header Ads



கொதிகலன் வெடிப்பு: ஒருவர் பலி - 2 பேர் காயம்


கொட்டதெனிய- கரபொட்டுவாவ பிரதேசத்திலுள்ள இரும்பு உருக்கும் பட்டறையின் கொதிகலன் ஒன்று வெடித்ததில் ஒருவர் உயிரிழந்து மேலும் இருவர் காயமடைந்துள்ளனர் என, கொட்டதெனிய பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த வெடிப்புச் சம்பவம் இன்று (3) காலை இடம்பெற்றுள்ளது. சம்பவத்தில்  காயமடைந்தோரும் இந்தியப் பிரஜைகள் என, கொட்டதெனிய பொலிஸார் தெரிவித்தனர்.

அதிகமான இந்தியர்கள் கடமையாற்றும் இந்த நிறுவனம், இந்தியாவுக்குச் சொந்தமான நிறுவனம் என தெரிவிக்கப்படுகிறது. 

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, இன்று காலை வழமைபோன்று இரும்பு உருக்கும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டிருந்தபோது, கொதிகலன் திடீரென வெடித்துள்ளது. இதனால் உருகியிருந்த இரும்பு பாகங்கள் வெடித்து சிதறியதில் மூவர் தீ காயங்களுக்கு உள்ளாகியுள்ளனர். 

இதனையடுத்து காயமடைந்த மூவரும் மீரிகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் ஜாவிட் என்பவர் உயிரிழந்துள்ளார். படுகாயமடைந்த ஏனைய இருவரும் மேலதிக சிகிச்சைக்காக  வத்துபிட்டிவல ஆரம்ப வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என, பொலிஸார் தெரிவித்தனர்.

வெடிப்பு சம்பவத்தையடுத்து சிதறிய இரும்பு தூசுகள் ஆங்காங்கே பரவி காணப்படுவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பில் பொலிஸ் குற்றத் தடுப்பு பிரிவினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதுடன், உயிரிழந்த நபரின் பிரேதப் பரிசோதனை வத்துபிடிவல வைத்தியசாலையில் இன்றைய தினம் முன்னெடுக்கப்படவுள்ளதாக, பொலிஸார் தெரிவித்தனர்.  

No comments

Powered by Blogger.