Header Ads



தீயே, திசையை மாற்று...!


- யாழ் அஸீம் -


 இது எங்கள் தேசம்

இங்கு எவருக்கும் உரிமையில்லை

எல்லோரும் வந்தேறுகுடிகள்

ஒரே நாடு 

ஒரே சட்டம்

நீங்கள் விரும்பியவாறு

உண்ண முடியாது

உடுக்க முடியாது

மரணிக்கவும் முடியாது...

இப்றாஹிம் நபியை 

எரிக்கப் புறப்பட்ட

நமரூதின்வாரிசுகள்

இப்போது நம்தேசத்திலும்

இப்படித்தான் கூறுகிறார்கள்...

மனித உரிமைகளையும்

மனச் சாட்சிகளையும்

குழிதோண்டி புதைத்துவிட்டு

எரித்துக்கொண்டிருக்கிறார்கள்

எம் உடல்களை

எரித்துக்கொண்டிருக்கும்

எம் உடல்களுடன்

நீதியும் எரிந்து சாம்பலாயிற்று.

மனசாட்சி இறந்துபோன

சந்தோசத்தில்

மனுநீதியும் மாண்டுபோனது


வியாபாரத்தளங்களை எரித்தார்கள்

வீடுகளை எரித்தார்கள்

மஸ்ஜித்களை எரித்தார்கள்

புனித குர்ஆனை எரித்தார்கள்

இப்போது எங்கள்

இஸ்லாம் எனும் கோட்டையின்

அடித்தளத்தை இடிக்க வருகின்றார்கள்.


கஃபத்துல்லாவை இடிக்க வந்த

ஆப்ரஹாவின் யானைகளாய்

எங்கள் இஸ்லாத்தின் கொள்கைகளை

இடிக்க துடிக்கின்றனர்.

இன்றைய ஆப்ரஹாக்களுக்கு 

ஒரு துணிச்சல்

அன்றைய அபாபீல்கள்

இன்று வராதென்று


நம்மிடையே வாழும் 

அபூஜஹ்ல்களும் அபூலஹப்களும்

இருக்கும் வரை 

அபாபீல் வராதென்று

அவர்களுக்கொரு துணிச்சல்!


அன்று காத்தான்குடியில்

சுப்ஹூ தொழுகையில் 

சுஜூதிலுள்ள சிரசுகளை

துப்பாக்கியால் துளைத்தவர்களும்,

கர்ப்பிணித்தாயின் வயிறு கிழித்து

சிசுவைக் கொன்று

பசி தீர்த்த பாஸிஸவாதிகளும் 

வடபுல முஸ்லிம்களின் 

வாழ்வை அழித்து

வக்கிரம் புரிந்தவர்களும்

இப்படித்தான் நினைத்தார்கள்!

ஆனாலும், 

சப்பித்துப்பிய வைக்கோலாய்

அவர்கள் சிதைந்தபோதுதான்

இறை தண்டனையின் 

சுவையை உணர்ந்தார்கள்


இனவெறிபிடித்தாடும்

இந்த வீணர்களின் கூட்டமும்

இறைதண்டனையின்

சுவையறிய துடிக்கின்றன.


இதயத்தில் ஈரமின்றி

எங்கள் உணர்வுகளை மிதிக்கும்

இவர்களின் கொட்டமடக்க

சப்பித்துப்பிய

வைக்கோலாய் மாற்ற

சொண்டுகளில் கற்களேந்தி

காத்து நிற்கும் அபாபீல்களை

எரிகின்ற நெருப்பின்

திசைமாற்றும் காற்றை

ஏந்துகின்ற எங்கள் கரங்களும்

நிச்சயம் வரவழைக்கும்!

1 comment:

Powered by Blogger.