Header Ads



முஸ்லீம்களாகிய நாங்கள் நாட்டின் சட்டத்தை, பின்பற்றுவது குறித்து கற்றுக்கொடுக்கப்பட்டவர்கள் - இம்தியாஸ்


கொரோனா வைரசினால் உயிரிழந்தவர்களின் உடல்களை தகனம் மாத்திரம் செய்வது என்ற அரசாங்கத்தின் பிடிவாதமான நிலைப்பாட்டினை அரசாங்கம் முன்னெடுப்பது துரதிஸ்டவசமானது என தெரிவித்துள்ள ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் இம்தியாஸ் பாக்கீர் மாக்கார் அரசாங்கத்தின் இந்த கொள்கை காரணமாக இலங்கை உலக நாடுகளில் இருந்து தனிமைப்படுத்தப்படலாம் என குறிப்பிட்டுள்ளார்.

நாங்கள் முஸ்லீம்கள் நாட்டின் சட்டத்தை பின்பற்றுவது குறித்து கற்றுக்கொடுக்கப்பட்டவர்கள், சமூகத்திற்கு ஏதாவது பாதிப்பு ஏற்படுத்துகின்றது என்றால் நாங்கள் அதனை தவிர்க்கவேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் தெரிவித்துள்ளார்.

ஆனால் இந்த விடயத்தில் கொவிட்19 காரணமாக உயிரிழந்தவர்களின் உடல்களை அகற்றுவது குறித்து உலக சுகாதார ஸ்தாபனம் தெளிவாக உள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்ட பின்னர் அரசாங்கம் அதனை இரத்துச்செய்துவிட்டு கொரோனாவினால் உயிரிழந்த அனைவரினதும் உடல்களையும் தகனம் செய்யும கொள்கையை பின்பற்றுகின்றது என குறிப்பிட்டுள்ள அவர் உடல்களை அகற்றுவதை உலக சுகாதார ஸ்தாபனத்தின் வழிகாட்டுதல்களின் அடிப்படையிலோ அல்லது விஞ்ஞானரீதியிலான அடிப்படையிலேயோ அரசாங்கம் முன்னெடுத்தால் அதனை நாங்கள் ஏற்றுக்கொள்ள தயாராகவுள்ளோம் எனவும் தெரிவித்துள்ளார்.

ஆனால் அரசாங்கம் அவ்வாறு நடந்துகொள்ளவில்லை, பல பெரும் மதிப்பிற்குரிய மருத்துவர்கள் இலங்கையில் இன்று பின்பற்றப்படும் கொள்கை விஞ்ஞானரீதியில் எந்த அடிப்படைகளையும் கொண்டிராதது எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர் என இம்தியாஸ் பாக்கீர் மாக்கார் தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.