Header Ads



'எனது சட்டியில் என்ன வேகுது என்று பாராமல், உங்கள் சட்டிகளில் என்ன கருகுது என்று பாருங்கள்' - வியாழேந்திரன்


வ. சக்தி

'எனது சட்டியில் என்ன வேகுது என்று பாராமல், உங்கள் சட்டிகளில் என்ன கருகுது என்று பாருங்கள்' என, தபால்துறை மற்றும் வெகுசன ஊடக தொழில் அபிவிருத்தி, பின்தங்கிய கிராம அபிவிருத்தி, கால்நடை வளர்ப்பு, சிறு வர்த்தகப் பயிர் செய்கை அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் தெரிவித்தார். 

'இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன் போன்றவர்களால் பேசமுடியும். ஆனால், செயல் வடிவம் கொடுக்க முடியதென', மட்டக்களப்பில் சனிக்கிழமை (12) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது, தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்திருந்தார்.

 இந்நிலையில், ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் மட்டக்களப்புத் தொகுதிக்கான இளைஞர் மாநாடுஇ  நேற்று (13) நடைபெற்றது. அதில்,  கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே, இராஜாங்க அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார். 

இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில், 'தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் எம்.பியான அடைக்கலநாதன், தமிழ் மக்களுக்குப் பெற்றுக்கொடுத்த தீர்வுகளும் அதிகாரங்களும், சொல்லில் அடங்காதவை. 72 வருட காலத்தில் அவர்கள் தமிழ் மக்களுக்குப் பெற்றுக் கொடுத்தவைகளை வைப்பதற்கே இடமில்லாம் உள்ளது. 

 'அடைக்கலநாதன் அண்ணன் உட்பட, நான் பலருக்குச் சொல்லும் அறிவுரை என்னவெனில், வியாழேந்திரன் என்ன செய்கின்றார், அவர் தலை சொறிகின்றாரா, மூக்கைச் சொறிகின்றாரா என்று பார்க்காமல், வியாழேந்திரனின் சட்டியில் என்ன வேகுது என்று பாராமல், உங்கள் சட்டிகளில் என்ன கருகுது என்று பாருங்கள். 

'எனது அலுவலகத்தில் தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் தமது தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்வதற்காக வருகின்றார்கள். அடைக்கலநாதன் போன்றவர்களால் எதுவும் செய்ய முடியாது என்பது அந்த மக்களுக்குத் தெரியும். மக்கள் எங்களிடத்தில் வீடு, வேலைவாய்ப்பு, வீதி என்பவற்றைப் பெற்றுத்தாருங்கள் எனக் கேட்டார்கள். அதைத்தான் நாங்கள் தற்போது செய்து வருகின்றோம்' என்றார்.

No comments

Powered by Blogger.