Header Ads



பணபலம் படைத்த வெளிநாடுகளில் உள்ளவர்களே ஈஸ்டர் தாக்குதலை திட்டமிட்டனர், தாக்குதல் பிரதானியை கண்டுபிடிக்க முடியவில்லை


(எம்.எப்.எம்.பஸீர்)

இலங்கையில் கடந்த 2019 ஏபரல் 21 ஆம் திகதி நடத்தப்பட்ட தற்கொலை குண்டுத் தாக்குதலுக்கான சதித் திட்டம் இலங்கையில் தீட்டப்பட்டதல்ல எனவும், இந்த தாக்குதல்களின் பின்னால் உள்ளவர்கள் உலகில் பண பலம் படைத்த, வெளிநாடுகளில் படித்த, ஐ.எஸ்.ஐ.எஸ். உடன் தொடர்புகளைக் கொண்டவர்கள் எனவும் அந்த வலையமைப்பை கண்டறிய முடியாமல் போயுள்ளதாகவும் பதுகாப்பு படைகளின் முன்னாள் தலைமை அதிகாரி அத்மிரால் ரவீந்ர விஜே குணரத்ன  தெரிவித்தார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள்  எனப்படும் 2019 ஏப்ரல் 21 ஆம் திகதி நடத்தப்பட்ட தொடர் தற்கொலை குண்டுத் தாக்குதல்கள் தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி விசாரணை ஆணைக் குழுவில் ஆஜராகி சாட்சியமளிக்கும் போதே அத்மிரால் ரவீந்ர விஜேகுணரத்ன இதனை தெரிவித்தார்.

21/4 உயிர்த்த ஞாயிறு தினம் இடம்பெற்ற தொடர் தற்கொலை தாக்குதல்கள்களை மையப்படுத்தி அது தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்க 1948 ஆம் ஆண்டின் 17 ஆம் இலக்க  விசாரணை ஆணைக் குழுக்கள் சட்டத்தின் (393 ஆம் அதிகாரம்) 2 ஆம் அத்தியாயத்தின் கீழ் கடந்த 2019 செப்டம்பர் 21 ஆம் திகதி நியமிக்கப்பட்ட ஐவர் கொண்ட ஜனாதிபதி  விசாரணை ஆணைக் குழுவின்  சாட்சி விசாரணைகள் பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டப வளாகத்தில் அமைந்துள்ள ஆணைக் குழுவில்  இடம்பெற்று வருகின்றது.

ஆணைக் குழுவின் தலைவர் மேன் முறையீட்டு நீதிமன்றின் நீதிபதி  ஜனக் டி சில்வாவின் தலைமையிலான மேன் முறையீட்டு நீதிமன்றின் நீதிபதி  நிசங்க பந்துல கருணாரத்ன,  ஓய்வுபெற்ற நீதிபதிகளான  நிஹால் சுனில் ரஜபக்ஷ,  அத்தபத்து லியனகே பந்துல குமார அத்தபத்து, ஓய்வுபெற்ற அமைச்சு செயலர் டப்ளியூ.எம்.எம். அதிகாரி ஆகியோர் முன்னிலையில் இடம்பெற்று வருகின்றது.

 இந்த நிலையில் பதுகாப்பு படைகளின் முன்னாள் தலைமை அதிகாரி அத்மிரால் ரவீந்ர விஜே குணரத்ன சிரேஷ்ட அரச சட்டவாதி சஞ்ஜீவ திஸாநாயக்கவின் நெறிப்படுத்தலில் நேற்று சாட்சியமளித்தார். 

இதன்போது, ஆணைக் குழுவின் உறுப்பினர் மேன் முறையீட்டு நீதிமன்ற நீதிபதி நிசங்க பந்துல கருணாரத்ன ' எந்த தகவலும் எமது உளவுப் பிரிவினருக்கு கிடைக்காமல் இத்தகைய தாக்குதலொன்று இடம்பெற சாத்தியம் உள்ளதா?' என எழுப்பிய கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த பதுகாப்பு படைகளின் முன்னாள் தலைமை அதிகாரி அத்மிரால் ரவீந்ர விஜே குணரத்ன.

' இது இலங்கையில் திட்டமிடப்பட்டதல்ல.  சஹ்ரான் கூட நாங்கள் நினைக்கும் பயங்கரவாதி அல்ல.

 நாம் தேடுபவர்கள் உலகில் பண பலம் படைத்த, வெளிநாடுகளில் படித்த,  ஆங்கிலம் பேச முடியுமான ஐ.எஸ். ஐ.எஸ். அமைப்புடன்  தொடர்புகளைப் பேணும் அறிவுடயவர்கள்.  அவர்களே இதன் பின்னணியில் உள்ளார்கள்.  அந்த வலையமைப்பை கண்டுபிடிக்க  எம்மால் முடியாமல் போயுள்ளது.  தாக்குதல்களின் பிரதானியை கண்டுபிடிக்க முடியாமல் போயுள்ளது.

 எந்தவொரு பயங்கரவாத அமைப்பினதும் தலைவன்  தற்கொலைத் தாக்குதலில் நேரடியாக பங்கேட்க மாட்டார்.  குரைந்த பட்சம் இந்த தாக்குதல்களின் பின்னணியில் இருந்து அதனை வழி நடத்திய ' ஹென்டலர்' ஆக செயரற்பட்டவர் கூட எம்மால் கண்டுபிடிக்க இதுவரை முடியவில்லை. (நான் ஓய்வெபெறும் போது இருந்த விடயங்களை வைத்து இதனை கூறுகின்றேன்.) இதற்கு ஐ.எஸ். ஐ.எஸ். உதவியுள்ளதாக தோன்றுகிறது. 

 தாக்குதல்களுக்கு முன்னர் ஐ.எஸ். ஐ.எஸ். இற்காக தாக்குதல்தாரிகள் வழங்கும் சத்தியப் பிரமாண வீடியோவை நன்றாக உற்று நோக்குங்கள்.  அதில் பெண் ஒருவரின் கையை அவதானிக்க முடியும்.  வெள்ளை நிற கையில் ஒரு மோதிரம் போடப்பட்ட ஒரு கையை அவதானிக்க முடியும். யார் அந்த பெண்?  அவர் சத்தியப் பிரமாணம் செய்யும் குழுவிலிருந்து சிறிது தள்ளி நின்று கையுயர்த்துவதை அவதானிக்க முடிகிறது.  

என்னை பொருத்தவரை வெளிநாட்டு பயங்கரவாத அமைப்பொன்றின் பூரண நெறிப்படுத்தலில் இந்த தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளது. என தெரிவித்தார்.

இதனைவிட, ஆணைக் குழுவில் அவர் தொடர்ந்தும் சாட்சியமளிக்கையில் தெரிவித்ததாவது,

 இந்த தாக்குதல்கள் தொடர்பில் முன் கூட்டியே வெளிநாட்டிலிருந்து தகவல்கள் கிடைத்திருந்தன. அந்த தகவலை அப்போதைய அரச உளவுச் சேவை பிரதானி நிலந்த ஜயவர்தன எம்முடன் ஒரு போதும் பகிர்ந்துகொள்ளவில்லை.

உளவுத் துறையை பொருத்தவரை, ஒரு தகவலால் யாருக்கு  நட் பெயர் கிடைக்கும் என எண்ணி வேலை செய்யும் இடமல்ல.  2019 ஏப்ரல் 4 ஆம் திகதி கிடைத்ததாக கூறப்படும் அந்த தகவலை எம்முடன் பகிர்ந்திருந்தால்,   அதன் பின்னர் அதாவது ஏபரல் 8 ஆம் திகதி  இலங்கைக்கு வருகை தந்த இந்திய பாதுகாப்பு செயலர் சஞ்ஜே மித்ரா,  அப்போதைய இந்திய பதில் பாதுகாப்பு படைகளின் அதிகாரி  ஆகியோருடன் பேசி மேலதிக தகவல்களைப் பெற்றிருக்கலாம். 

எனினும் ஏப்ரல் 8 ஆம் திகதி இந்து லங்கா பாதுகாப்பு மாநாட்டில் கலந்துகொள்ள வந்த அவர்களிடம் பேசும் அளவுக்கு கூட எமக்கு அந்த தகவல்களை நிலந்த ஜயவர்தன வழங்கியிருக்கவில்லை. அத்துடன்  தாக்குதல் குறித்த தகவல்களை  அவர்கள் அறிந்திருந்தால், அந்த மாநாட்டுக்கு வந்திருப்பார்களா என்பதும்  ஆராயப்பட வேண்டியதே.

 எவ்வாறாயினும், தாக்குதல் நடாத்தப்படப் போவதாக கிடைத்த தகவல் இந்தியாவிலிருந்து தான் கிடைத்தது என மூலத்தை வெளிப்படுத்தியது, நிலந்த ஜயவர்தன செய்த மிகப் பெரும் தவறாகும். பொதுவாக அவ்வாறு நாம் தகவல் எங்கிருந்து கிடைத்தது என்பதை வெளிப்படுத்த மாட்டோம்.

அதனாலோ என்னவோ,  தாக்குதலின் பின்னர் இந்த வலையமைப்பு தொடர்பில் எந்த தகவலும் வெளிநாட்டு உளவுத் துறைகளிடம் இருந்து எமக்கு கிடைக்கவில்லை.'  என தெரிவித்தார்.

No comments

Powered by Blogger.