Header Ads



ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ்வை சந்திக்க, சட்டத்தரணிகளுக்கு மறுப்பு - விசாரணைகளிலிருந்து தலைமை நீதிபதி விலகல்


( எம்.எப்.எம்.பஸீர்)

ஏப்ரல் 21 தாக்குதல்கள் தொடர்பில் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள சிரேஷ்ட சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ்வை சந்தித்து ஆலோசனைப் பெற்றுக்கொள்ள, அவரது சட்டத்தரணிகளுக்கு அனுமதியளிக்குமாறு சி.ஐ.டி. பணிப்பாளருக்கு உத்தரவு பிறப்பிக்க கோரி தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு விசரணைகளில் இருந்து மேன் முறையீட்டு நீதிமன்ரின் தலைமை நீதிபதி அர்ஜுன ஒபேசேகர விலகியுள்ளார்.

 தனிப்பட்ட காரணிகளுக்காக அம்மனு மீதான பரிசீலனைகளில் இருந்து விலகுவதாக அவர் இன்று திறந்த மன்றில் அறிவித்தார்.

 ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ்வின் உரிமைகள் தொடர்பில்  சட்டத்தரனி சலன பெரேரா தாக்கல் செய்துள்ள மனு இன்று மேன் முறையீட்டு நீதிமன்றின் தலைமை நீதிபதி அர்ஜுன ஒபேசேகர,  சோபித்த ராஜகருணா ஆகியோர் முன்னிலையில்  பரிசீலனைக்கு வந்தது. இதன்போதே  தலைமை நீதிபதி அர்ஜுன ஒபேசேகர தான்  பரிசீலனைகளில் இருந்து விலகுவதாக அறிவித்தார்.

அதன்படி இந்த மனுவானது எதிர்வரும் 14 ஆம் திகதி  பிரியந்த பெர்ணான்டோ மற்றும் சோபித்த ராஜகருனா அகையோர் அடங்கிய நீதிபதிகள் குழாம் முன்னிலையில்  பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.

 இது தொடர்பில்  பிரதிவாதிகளுக்கு அறிவிக்குமாறு மனுதாரர் தரப்புக்கு தலைமை நீதிபதி அர்ஜுன ஒபேசேகர குறிப்பிட்டார்.

ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ் சார்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள இந்த மனுவில் சி.ஐ.டி.யின் பணிப்பாளர், விஷேட விசாரணைப் பிரிவின் பொறுப்பதிகாரி, சட்ட மா அதிபர் உள்ளிட்டோர் பிரதிவாதிகளாக பெயரிடப்பட்டுள்ளனர்.

கடந்த செப்டம்பர் மாதம் முதல் இதுவரை ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ்வை சந்திக்க அவரது சட்டத்தரணிகள் உள்ளிட்ட எவருக்கும் சந்தர்ப்பம் வழங்கப்படவில்லை என  மனுவில் சுட்டிக்காட்டியுள்ள சட்டத்தரணிகள்,  தடுப்பில் உள்ள ஹிஜாஸை சந்திக்க அனுமதியளிக்குமாறு சி.ஐ.டி. பனிப்பாள்ருக்கு உத்தர்வுமாரு கோரியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.