Header Ads



புதிய பயணம் செல்ல வேண்டியுள்ளது, கடந்த காலங்களை நினைத்து வேதனைப்படுவதால் எவ்வித பலனும் ஏற்படாது - ரணில்


எம்.சி.சி ஒப்பந்தத்திற்கான கால எல்லையை நீடிக்குமாறு ஏற்கனவே இரு முறை கோரப்பட்டிருந்த நிலையில் மூன்றாவது தடவையாகவும் கோரிக்கை வைக்கப்பட்ட நிலையிலேயே இலங்கைக்கு கிடைக்கப்பெறவிருந்த கடனற்ற 480 மில்லியன் அமெரிக்க டொலர்கள் ரத்தாகியுள்ளதாக ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

கொள்ளுப்பிட்டியில் அமைந்துள்ள ஐ.தே.க தலைவர் ரணில் விக்ரமசிங்கவின் இல்லத்தில் வியாழக்கிழமை இடம்பெற்ற கட்சி உறுப்பினர்களுடனான சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

இதன் போது பேசிய அவர்,

எம்.சி.சி ஒப்பந்தத்தின் ஊடாக இலங்கைக்கு கிடைக்கப்பெறவிருந்த 480 மில்லியன் அமெரிக்க டொலர்களும் தற்போது இல்லாமள் போயுள்ளது. மிலேனியம் சவால் பணிப்பாளர் சபை இதனை உத்தியோகப்பூர்வமாகவே அறிவித்து விட்டது. கடனற்ற வெறும் நிதி உதவியான 89 பில்லியன் ரூபா இலங்கைக்கு இனி கிடைக்காது.

குறித்த எம்.சி.சி ஒப்பந்தத்திற்கான கால எல்லை நீடிக்குமாறு ஏற்கனவே இரு முறை கோரப்பட்டது. மூன்றாவது முறையும் கோரிக்கை விடுக்கப்பட்ட நிலையிலேயே ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டது. ஆனால் தாங்கள் நிராகரித்து விட்டதாகவே தற்போது அரசாங்கம் கூறும்.

எவ்வாறாயினும் அடுத்த ஆண்டு நாட்டின் பொருளாதாரத்திற்பு தீர்க்கமான காலப்பகுதியாக அமையும்.

எனவே புதியதொரு பயணமொன்று நாம் செல்ல வேண்டியுதுள்ளது. எம்முடன் இருப்பவர்களை பாதுகாத்தும் எம்மை விட்டு சென்றவர்களை கைவிட்டும் செல்ல நாம் தயாராக வேண்டும். கடந்த காலங்களை நினைத்து வேதனைப்படுவதால் எவ்வித பலனும் ஏற்பட போவதில்லை. எனவே அனைத்திற்கும் தயாரானவர்களாக இருக்க வேண்டும்.

மாகாண சபை தேர்தலில் புதிய முகங்களை போன்று பழைய முகங்கள் பலவும் ஆளும் கட்சி சார்பில் போட்டியிடும். தேர்தலுக்கு செலவிட வேட்பாளர்களிடம் பணமிருக்காது. மறுப்புறம் கொரோனா அச்சுறுத்தல் உள்ளது. எனவே மாகாண சபை தேர்தலை நடத்துவது சிக்கல் என்பதுடன் சவால்மிக்கது என்றார்.

1 comment:

Powered by Blogger.