Header Ads



மாலைதீவில் இலங்கையர்களின் ஜனாஸாக்களை அடக்குவதா..? வெளிவிவகார அமைச்சு உரிய விளக்கத்தை விரைவில் அளிக்கும்


கொவிட்-19 தொற்றால் மரணமடையும் முஸ்லிம்களின் ஜனாஸாக்களை புதைப்பது தொடர்பில் எவ்விதமான உத்தியோகபூர்வ அறிவிப்புகளும் விடுக்கப்படாத நிலையில், மாலைத்தீவுக்கு கொண்டுச் சென்று புதைப்பதற்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியிருந்தன.

இந்நிலையில், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, மாலைத்தீவு அரசாங்கத்திடம் விடுத்த கோரிக்கைக்கு அமைவாகவே, இந்தத் தீர்மானம் எட்டப்பட்டுள்ளதென செய்திகள் வெளியாகியிருந்தன.

 எனினும், அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் இணையவழி ஊடகவியலாளர் சந்திப்பு நேற்று (15) நடைபெற்றது. அதில் கலந்துகொண்ட, ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்த அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல,'அந்த விவகாரம் தொடர்பில் அமைச்சரவைக்கு தெரியாது, அமைச்சரவையின் கவனத்துக்கும் கொண்டுவரப்படவில்லை' என்றார்

இந்நிலையில், மேற்படி விவகாரம் தொடர்பில், வெளிநாட்டலுவல்கள் அமைச்சு, உரிய விளக்கத்தை விரைவில் அளிக்கும் என்றும் அவர் தெரிவித்தார். 

மாலைத்தீவு அரசாங்கத்திடம் இலங்கை அரசாங்கம் கோரிக்கை விடுத்துள்ளதாகவும் சம்பந்தப்பட்ட இடங்களில் இது குறித்து அவதானம் செலுத்தப்பட்டதாக தெரிவித்த அமைச்சர், இது தொடர்பில் வெளிவிவகார அமைச்சு தெளிவுப்படுத்தும் என்றார்.

முன்னதாக கேள்வியெழுப்பிய ஊடகவியலாளர்இ, ' ஜனாஸாக்களை, மாலைத்தீவுக்கு அனுப்புவது தொடர்பில், ஜனாதிபதிக்கும் அந்நாட்டு பிரதமருக்கும் இடையில், தொலைபேசி கலந்துரையாடல் இடம்பெற்றதா? ஏன்? அப்படி செய்கின்றீர்கள், அப்படியாயின், அது ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் இடையிலான கொள்கை ரீதியான முரண்பாடாக அமையாதா? எனக் கேட்டார்.

ஏனெனில், நிபுணர் குழுவின் பரிந்துரைகளின் பிரகாரமே அதனை முன்னெடுக்க வேண்டுமென பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இதற்கிடையில், மாலைத்தீவுக்கு சடலங்களை (ஜனாஸாக்களை) கொண்டுச் சென்று புதைக்கும் நடவடிக்கைகளில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தீவிரம் காட்டிவருகின்றார் என ஊடகவியலாளர் தான் எழுப்பிய கேள்வியின் ஊடாக சுட்டிக்காட்டினார்.

'இந்த விவகாரத்தில் அரசாங்கம், இறுதித் தீர்மானம் எதனையும் எடுக்கவில்லை. நிபுணர் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. அக்குழுவின் பரிந்துரைகளுக்கு அமைய செயற்படுவோம்.  அரசாங்கம் தீர்மானத்தை எடுக்குமாயின் நிபுணர் குழுவை நியமித்ததில் எவ்விதமான பிரயோசனமும் இல்லை' என்றார். 

இந்த விவகாரத்தில். அரசாங்கம் தனித்தீர்மானம் எதனையும் எடுக்காது, நிபுணர் குழுவின் பரிந்துரைகளை பெறும் அதன் பின்னரே தீர்மானிக்கப்படும் என்றார்.

No comments

Powered by Blogger.