இலங்கையின் முதலாவது மருத்துவத்துறை, பேராசிரியர் அஜ்வாத் மாகான் மாகார்
First Professor of Medicine of Ceylon - Muhammad Ajward Macan Markar
இலங்கை முஸ்லிம்களின் வரலாற்று ரீதியான சேவைகள் தோண்டியெடுக்கப்படாத புதையலைப் போன்றதாகும். தோண்டத் தோண்ட கிடைத்துக்கொண்டே இருக்கும். சமூகம் அறியாத வகையில் பல்வேறு சேவைகளைச் செய்து மறைமுகமாக வாழ்ந்துகொண்டிருப்பவர்கள் மாகான் மாகார் குடும்பத்தினர்.
பேராசிரியர் அஜ்வாத் மாகான் மாகார், சேர் முஹம்மத் மாகான் மாகார் அவர்களின் மகனாவார். அஜ்வாத் மாகான் மாகார் அவர்கள் லண்டன் பல்கலைக்கழகத்தில் (university of London ) மருத்துவக் கற்கையைப் பூர்த்திசெய்தவர். மகப்பேறு மற்றும் பெண்நோய் தொடர்பான துறை நுபுணரான டாக்டர் அஜ்வாத் மாகான் மாகார் அவர்கள் இந்த துறைகளுக்கான தங்கப்பதக்கம் வென்றவராவார். 1955ம் ஆண்டில் அன்றைய இலங்கைப் பல்கலைக்கழகத்தின்(University of Ceylon) (இன்று பேராதனைப் பல்கலைக்கழகம்) மருத்துவத்துறைப் பேராசிரியராக நியமிக்கப்பட்டார். இலங்கையின் வரலாற்றில் நியமிக்கப்பட்ட முதலாவது மருத்துவத்துறை பேராசிரியர் என்ற பெருமை இவரைச் சாரும். பின்னர் பேராதனை மருத்துவபீடத்தின் பீடாதிபதியாக நியமிக்கப்பட்டார். மருத்துவக்கல்வியில் பேராசிரியர் முஹம்மத் அஜ்வாத் மாகான் மாகார் அவர்கள் மேற்கொண்ட சீர்திருத்தங்கள் மகத்தானவை.
"இலங்கையில் நோய் பரவலைக் கட்டுப்படுத்தி நாட்டின் சுகாதாரத்துறையை மேம்படுத்த பேராசிரியர் முஹம்மத் அஜ்வாத் மகான் மாகார் அவர்கள் அறிமுகம் செய்தி சீர்திருத்தங்களே காரணம் என்று கிழக்குப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் வேந்தரும், மருத்துவத்துறை பேராசிரியருமான தம்பிப்பிள்ளை வரகுணம் அவர்கள் கூறுகிறார்கள்".
இதனால் தான் பிரித்தானியாவின் Royal College of Physicians அவர்களுக்கு உயர்ந்த பட்சகௌரவத்தை வழங்கியிருக்கிறது. இலங்கை பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீடத்தின் முதலாவது பரீட்சகர் Examiner என்ற பெருமையும் அவர்களுக்கு உண்டு. பேராசிரியர் அஜ்வாத் மகான் மாகார் அவர்கள் மிகுந்த மார்க்கப்பற்றாளராக இருந்தார். ஷாதுலியா தரீக்காவுடன் நெருங்கிய தொடர்பை பேணிவந்தார். அமெரிக்காவின் பென்சில்வேனியா மாநிலத்தின் பெடல்பியா நகரில் முதலாவது இஸ்லாமிய நிலையத்தை அமைத்த கௌரவமும் அவர்களைச் சாரும். எங்கிருந்தாலும் வெள்ளிக்கிழமை இரவுகளில் திகிர் மஜ்லிஸில் பங்கேற்கத்தவறுவதில்லை. காலி பஹ்ஜதுல் இப்றாஹீமிய்யா அரபுக் கல்லூரிக்கு அன்று மகத்தான உதவிகளை வழங்கியதோடு இன்று வரை அவரது குடும்பமே செலவினங்களை ஏற்றுநடத்திவருகிறது. இவரது தந்தையான சேர் முஹம்மத் மாகான் மகார் துருக்கி நாட்டுக்கான இலங்கையின் கவுன்ஸல் ஜெனரலாக பணியாற்றினார். பிரித்தானிய மகாராணியால் சேர் பட்டம் வழங்கிகௌரவிக்கப்பட் இலங்கையின் முதலாவது முஸ்லிம் பேராசிரியர்; அஜ்வாத் மகான் மாகார் அவர்களின் தந்தை சேர் முஹம்மத் மாகான் மாகார் ஆவார்.
படம் பேராசிரியர் அஜ்வாத் மாகான் மாகார் அவர்களும், அவர்களின் மனைவி ஹாஜா அமீன் அவர்களும்
ஆக்கம்: பஸ்ஹான் நவாஸ்
செய்தி ஆசிரியர்
இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம்.
Post a Comment