Header Ads



அரசாங்கத்தை விமர்சிப்பதாக நினைத்து நாட்டினை நெருக்கடியில் தள்ளிவிட வேண்டாம்


நாட்டில் கொவிட் -19 வைரஸ் பரவல் நிலைமைகளில் இருந்து மக்களை மீட்க தெற்கிற்கு எவ்வாறு நிவாரண வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றதோ அதேயளவு நிவாரணங்கள் வடக்கிற்கும் கிழக்கிற்கும் கொடுக்கப்படுவதாக  ஆளும் கட்சி உறுப்பினர் டிலான் பெரேரா சபையில் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் இன்று வியாழக்கிழமை, 2020 ஆம் ஆண்டுக்கான நிதி ஒதுக்கீடு மீதான விவாதத்தில் உரையாற்றிய போதே அவர் இதனைக் கூறினார். இது குறித்து அவர் மேலும் கூறுகையில்,

நாட்டில் கொவிட் -19 வைரஸ் பரவலை கட்டுப்படுத்த அரசாங்கம் பல்வேறு வேலைத்திட்டங்களை முன்னெடுத்து வருகின்றது. இதில் பாதிக்கப்பட்ட சகலருக்கும் நிவாரணங்களை வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. இதில் தெற்கிற்கு கொடுக்கும் முன்னுரிமை வடக்கு கிழக்கு பிரதேசங்களுக்கும் கொடுக்கப்படுகின்றது. இதனை தமிழ் தரப்புகளும் ஏற்றுக்கொண்டுள்ளனர். வடக்கு கிழக்கிற்கு அபிவிருத்திகள் செய்யப்படுகின்றது, வைத்தியசாலைகள் உருவாக்கப்படுகின்றது. இந்த அபிவிருத்திகள் அவர்களின் கண்களுக்கு தெரிகின்றது.

அதேபோல் கொரோனாவிற்கு மதம், இனம் எதுவும் தெரியாது. எமக்கு வாக்களித்தவர்களும், எதிர்க்கட்சிக்கு வாக்களித்தவர்களும் என சகலருக்கும் கொரோனா வைரஸ் பரவுகின்றது. எனவே சகல மக்களையும் இந்த வைரஸ் தாக்கத்தில் இருந்து மீட்க சகலரும் இணைந்து கடமையாற்றுவோம். எங்காவது எம்மால் தவறுகள் விடப்பட்டால்  அதனை சுட்டிக்காட்டுங்கள், நாம் அதனை திருத்திக்கொள்கிறோம். ஆனால் அரசாங்கத்தை விமர்சிப்பதாக நினைத்து நாட்டினை நெருக்கடியில் தள்ளிவிட வேண்டாம் என்றார். 

No comments

Powered by Blogger.