Header Ads



மைத்திரிக்கு தனது பிள்ளைகள் குறித்து நினைவில்லையா..? சட்டத்தரணிக்கு வந்த கோபம்


உயிர்த்தஞாயிறு தாக்குதல் நடத்தப்பட்டவேளை முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சிங்கப்பூருக்கான விஜயத்தை மேற்கொண்டிருந்தார்.

இந்த விஜயத்தில் தனது பிள்ளைகள் தன்னுடன் பயணித்தமை தொடர்பில் தனக்கு நினைவில்லை என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சாட்சி வழங்கியமை, பல்வேறு சர்ச்சைகளை தோற்றுவித்துள்ளது.

இது தொடர்பில் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் விசாரணை நடத்தும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் கேள்வி எழுப்பப்பட்ட போதே அவர் நினைவில்லை என பதிலளித்துள்ளார்.

முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்ணான்டோ சார்பில் முன்னிலையான சட்டத்தரணி தில்ஷான் ஜயசூரிய, முன்னாள் ஜனாதிபதியிடம் கேள்விகளை எழுப்பினார்.

“16ம் திகதி இந்த புனித யாத்திரை பயணத்தில் உங்களின் மனைவி மற்றும் மூன்று பிள்ளைகளும் இணைந்துக்கொண்டார்களா?” என சட்டத்தரணி குறுக்கு கேள்வி எழுப்பியுள்ளார்.

இவ்வாறு எழுப்பப்பட்ட கேள்விக்கு புன்னகையுடன், 3 பிள்ளைகள் வருகை தந்தார்களா என்பது நினைவில் இல்லை. ஆனால். மனைவி வருகை தந்தது நினைவில் இருக்கின்றது என பதிலளித்தார்.

இதன்போது குறுக்கிட்ட சட்டத்தரணி தில்ஷான் ஜயசூரிய, மிகவும் கோபத்துடன்

“முன்னாள் ஜனாதிபதி அவர்களே…! இது கேலியான விடயம் அல்ல. தேசிய பாதுகாப்புக்கு முழுமையாக அச்சுறுத்தலை ஏற்படுத்திய ஒரு சந்தர்ப்பம். இதன்போது நாட்டின் ஜனாதிபதி தனிப்பட்ட சுற்றுப் பயணத்தை மேற்கொண்டுள்ளார். 16ம் திகதி நாட்டை விட்டு வெளியேறும் போது, முன்னாள் பொலிஸ் மாஅதிபர் பூஜித் ஜயசுந்தர விமானத்தில் ஏறி, மரியாதை செலுத்தியதாக நீங்களே கூறினீர்கள். அவ்வாறு அந்த விடயம் நினைவில் இருக்கும்போது, உங்களுடன் சென்ற உங்களின் பிள்ளைகள் குறித்து ஏன் நினைவில்லை என்பதனை ஏற்றுக்கொள்ள சொல்கின்றீர்களா?” என கேள்வி எழுப்பினார்.

“உண்மையாகவே நினைவில்லை” என முன்னாள் ஜனாதிபதி இதன்போது சாதாரணமாக பதிலளித்தார்.

1 comment:

Powered by Blogger.