Header Ads



சேலைன் குழாயில் கழுத்து, இறுகி சிறுவன் மரணம் - புத்தளத்தில் சம்பவம்


புத்தளம் புதிய எலுவன்குளம் பிரதேசத்தில் மரத்தில் கட்டப்பட்டிருந்த சேலைன் குழாயில் கழுத்து இறுகிய நிலையில் சிறுவன் ஒருவன் பரிதாகமாக உயிரிழந்துள்ள சம்பவம் ஒன்று நேற்று சனிக்கிழமை (21) பதிவாகியுள்ளதாக புத்தளம் மற்றும் கற்பிட்டி பகுதிகளுக்கு பொறுப்பான திடீர் மரண விசாரணை அதிகாரி பதுர்தீன் முஹம்மது ஹிஸாம் தெரிவித்தார்.

குறித்த பிரதேசத்தை சேர்ந்த 09  வயது சிறுவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, 

சம்பவம் இடம்பெற்ற சனிக்கிழமை (21) நண்பகல் வேளை, குறித்த சிறுவன் மதிய உணவு உட்கொண்ட பின்னர் விளையாடுவதற்காக வீட்டிற்கு வெளியே வந்துள்ளார்.

இதன்போது சிறுவனின் தாய் தனது இரண்டாவது மகனுக்கு மதிய நேர உணவைக் கொடுத்துவிட்டு வீட்டுக்கு வெளியே வந்து பார்த்த போது தனது மூத்த மகன் வீட்டு வளவுக்குள் உள்ள கொய்யா மரத்தில் கட்டப்பட்டிருந்த (intravenous infusion set) சேலைன் குழாயில் கழுத்து இறுகி தொங்கிய நிலையில் காணப்பட்டுள்ளார்.

இதனையடுத்து, அதிர்ச்சியடைந்த தாயின் அழுகுரலைக் கேட்ட அயலவர்கள் அங்கு வருகை தந்து, மரத்தில் தொங்கிய நிலையில் காணப்பட்ட குறித்த சிறுவனை உடனடியாக புத்தளம் தள வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.

எனினும், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது குறித்த சிறுவன் உயிரிழந்துள்ளார்.

இந்நிலையில், சம்பவம் தொடர்பில் பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டதையடுத்து, மரணம் தொடர்பான விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

இதனையடுத்து வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்ட சடலம் இன்று ஞாயிற்றுக்கிழமை (22) பிரேத பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டது.

பிரேத பரிசோதனையில் குறித்த சிறுவன் கழுத்து இறுகியமையால் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதனையடுத்து சிறுவனின் சடலம் பெற்றோர்களிடம் ஒப்படைத்துள்ளதாக புத்தளம் மற்றும் கற்பிட்டி பகுதிகளுக்கு பொறுப்பான திடீர் மரண விசாரணை அதிகாரி பதுர்தீன் முஹம்மது ஹிஸாம் மேலும் தெரிவித்தார்.

No comments

Powered by Blogger.