Header Ads



முஸ்லிம்களின் உடல்களை அடக்கம்செய்ய, தொழில்நுட்ப குழு அனுமதி வழங்குமென்ற நம்பிக்கையில்லை - பாராளுமன்றில் ஹலீம்


(ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வஸீம்) 

முஸ்லிம்களின் சடலங்களை அடக்கம் செய்வதற்கு தொழில்நுட்ப குழு அனுமதிவழங்குமென்ற நம்பிக்கை எமக்கில்லை. அதனால் அரசாங்கம் முஸ்லிம்களின் கலாசாரத்துக்கு மதிப்பளித்து சாதகமான முடிவொன்றை எடுக்கமென நம்புகிறோம் என ஐக்கிய மக்கள் சக்தி உறுப்பினர் எச்.எம்.ஏ.ஹலீம் தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் இன்று (30) திங்கட்கிழமை இடம்பெற்ற அடுத்த வருடத்துக்கான வரவு செலவு திட்டத்தில் சுகாதார அமைச்சு மற்றும் இராஜாங்க அமைச்சுகளுக்கான நிதி ஒதுக்கீடு தொடர்பிலான குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில், கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. உயிரிழப்புகளும் நூறு பேரை கடந்துள்ளது. கொவிட் ஒழிப்புக்காக சுகாதாரத்துறையினரும் பாதுகாப்பு படையினரும் அர்ப்பணிப்புடன் பணியாற்றி வருகின்றனர்.

மேலும் கொவிட் காரணமாக உயிரிழக்கும் முஸ்லிம்களின் சடலங்கள் எரிக்கப்படுவது தொடர்பில் பாரிய பிரச்சினைகள் உள்ளன. இந்தப் பிரச்சினை தொடர்பில் பல சந்தர்ப்பங்களில் நாடாளுமன்றத்திலும் கலந்துரையாடல்கள் நடத்தப்பட்டுள்ள போதிலும் இன்னமும் தீர்வு கிடைக்கவில்லை.

தொழில்நுட்ப குழுவின் அறிவிப்பு கிடைக்கும்வரை காத்திருப்பதாக ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் அரசாங்கம் கூறுகிறது. தொழில்நுட்ப குழு மாறுபட்ட நிலைபாட்டை கொண்டிருப்பதால் அக்குழுவின் ஊடாக தீர்வு கிடைக்கும் என்ற எமக்கு நம்பிக்கையில்லை என்றார்.

1 comment:

  1. முஸ்லீம்களின் ஜனாஸா எரிப்பு விடயத்தை எமது கலாச்சாரத்தோடு தொடர்பு படுத்தி முன்னாள் அமைச்சர் இங்கு பதிவிட்டுள்ளது வருந்தத் தக்கதும் கண்டிக்க தக்கதுமாகும்.ஜனாஸாவின் இறுதிக்கிருகைகள் வெறும் கலாச்சாரமில்லை.மாறாக ஜனாஸாவை நல்லடக்கம் செய்வது இஸ்லாமிய மார்க்கத்தின் கட்டாய கடமை என்பதை முதலில் இந்த எம்பி புரிந்து கொள்ள வேண்டும்.

    ReplyDelete

Powered by Blogger.