Header Ads



சிறைக்கைதிகளின் உரிமைகளை பாதுகாப்பதற்கான அமைப்பு தெரிவித்துள்ள முக்கிய விடயங்கள்


அரசாங்கம் சிறைச்சாலைகளில் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கையை எடுத்திருந்தால் மஹர சிறைச்சாலையில் கலவரம் இடம்பெற்றிருக்காது என சிறைக்கைதிகளின் உரிமைகளை பாதுகாப்பதற்கான அமைப்பு தெரிவித்துள்ளது

சிறைக்கைதிகளின் உரிமைகளை பாதுகாப்பதற்கான அமைப்பு மேலும் தெரிவித்துள்ளதாவது:

கொழும்பில் இன்று -30- இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் அந்த அமைப்பு இதனை தெரிவித்துள்ளது.

மஹர சிறைச்சாலை நிலவரம் இன்னமும் கட்டுப்பாட்டின் கீழ் வரவில்லை இதனால் சிறைக்கைதிகளின் உயிர்களுக்கு இன்னமும் ஆபத்துள்ளது என தகவல்கள் கிடைத்துள்ளன.

அரசாங்கம் சிறைச்சாலைகளில் கொரோனா வைரஸ் நிலவரத்தை கட்டுப்படுத்துவதற்கு அவசியமான நடவடிக்கைகளை எடுத்திருந்தால் சிறைக்கைதிகளின் கோரிக்கைகளை செவிமடுத்திருந்தால் இந்த நிலைமையை தவிர்த்திருக்கலாம்.

மார்ச் 16 ம் திகதி சிறைச்சாலைகளில் காணப்படும் கொரோனா வைரஸ் நிலவரம் குறித்து நாங்கள் ஜனாதிபதிக்கு கடிதமொன்றை எழுதியிருந்தோம், ஜனாதிபதியை சிறைச்சாலைகளில் கொரோனாவைரஸ்நிலவரத்தை கட்டுப்படுத்துவதற்காக தலையிடுமாறு நாங்கள் வேண்டுகோள்விடுத்திருந்தோம்.

சிறைக்கைதிகள் பாதிக்கப்படக்கூடிய ஆபத்துள்ளதால், எழுந்தமானமாக பிசிஆர் சோதனைகளை மேற்கொள்வதை விட அனைத்து சிறைக்கைதிகளையும் பிசிஆர் பரிசோதனைக்கு உட்படுத்துமாறு நாங்கள் வேண்டுகோள் விடுத்திருந்தோம்

தடுப்புக்காவல் உத்தரவு காரணமாக பலர் சிறையில் உள்ளனர், சிறிய குற்றங்களை இழைத்த பலர் சிறைகளில் உள்ளனர், சிறைக்கைதிகள் நெருக்கமாக வைக்கப்பட்டுள்ள நிலையை முடிவிற்கு கொண்டுவரவேண்டும்.


அரசாங்கம் சுமார் 100 பேரை விடுவித்துள்ளதன் மூலம் சிறைக்கைதிகள் நெருக்கமாக உள்ள நிலையை முடிவிற்கு கொண்டுவர முயன்றுள்ளது.

ஆனால் இலங்கையில் 12000 கைதிகளை மாத்திரம் பேணக்கூடிய ஒரு அமைப்பில் தற்போது 20,000 கைதிகள் காணப்படுகின்றனர்.

நாங்கள் பல கோரிக்கைகளை முன்வைத்திருந்தோம் அவர்கள் அவை எவற்றையும் நடைமுறைப்படுத்தவில்லை

கொரோனா வைரசின் முதலாவது அலை வெற்றிகரமாக கட்டுப்படுத்தப்பட்டது.ஆனால் இரண்டாவது அலையின் போது இலங்கையில் உள்ள 29 சிறைகளில் அனேகமானவற்றில் கொரோனா வைரஸ் பரவியுள்ளது.

சிறைகளில் காணப்படும் நெரிசல் காரணமாக அவை கொரோனா வைரசினால் பாதிக்கப்படக்கூடிய ஆபத்து அதிகம்.

வவுனியா சிறையில் 0.6 மீற்றர் இடைவெளியே சிறைக்கைதிகள் மத்தியில் காணப்படுகின்றது.கொரோனா வைரசிலிருந்து பாதுகாப்பதற்கான ஆக்குறைந்தளவு கட்டயமான இடைவெளியாக கூட அது காணப்படவில்லை, பலகைதிகள் படிகளில் உறங்குகின்றனர்.

அரசாங்கம் சிறைச்சாலைகளி;ல் கொரோனா வைரசினை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கையை எடுக்காவிட்டால் அது முதிய மற்றும் பலவீனமான நிலையி;ல் உள்ள சிறைக்கைதிகளுக்கு மரணதண்டனையை விதிப்பதற்கு சமம்.

பல தடவைகள் சிறைக்கைதிகள் இந்த நிலைமைக்கு எதிராக எதிர்ப்பை வெளியிட்டுள்ளதுடன் தங்களின் உயிர்களை கொரோனாவிலிருந்து பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளை எடுக்குமாறு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

ஆனால் இன்னமும் உரிய பொறிமுறைகளை அரசாங்கம் சிறைச்சாலைகளிற்குள் நடைமுறைப்படுத்தவில்லை, பல சிறைகளில் கொரோனா வைரஸ் தொடர்பான ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்றதை நாங்கள் பார்த்திருக்கின்றோம்,

இந்த நிமிடத்திலும் சிறைச்சாலைகளில் காணப்படும் நிலவரத்திற்கு எதிராக சிறைக்கைதிகள் போராடுகின்றனர் இன்றும் வெலிக்கடை சிறைச்சாலையின் கூரை மீது சிறைக்கைதிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

மஹர சிறைச்சாலையில் இடம்பெற்ற சம்பவங்கள் ஏனைய சிறைகளில் இடம்பெறாததை அரசாங்கம் உறுதி செய்யவேண்டும்.

கொரோனா வைரசின் முதலாவது அலையின் போதும் நாங்கள் அனுராதபுரத்தில் இவ்வாறான சம்பவம் இடம்பெற்றதை பார்த்தோம், இருவர் சுட்டுக்கொல்லப்பட்டனர் அதன் பின்னர் அரசாங்கம் அவர்கள் தப்பிச்செல்ல முயன்றனர் என தெரிவித்தது, சிறைக்கைதிகள் உயிரிழக்கும் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் அல்லது சிறைச்சாலைகளில் வன்முறை வெடிக்கும் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் அரசாங்கம் இதனையே தொடர்ந்து காரணமாக தெரிவித்து வருகின்றது.

இந்த விடயங்கள் குறித்து விசாரணைகள் இடம்பெறவேண்டும் என நாங்கள் வேண்டுகோள் விடுக்கின்றோம்,

No comments

Powered by Blogger.