எரிக்கப்பட்டது ஜனாஸாக்களே ஆனாலும், உடைக்கப்பட்டது ஈமானிய இதயங்களே...
உயிரோடு உள்ளவரை விட இறந்து போனவரை
கண்ணியமாக போற்றி...
உடல் வலிக்காதிருக்க
சூடும் குளிரும் கலந்த நீரால் குளிப்பாட்டி நல்லடக்கம் செய்யப்படும் உடல்கள்
எரிக்கப்படும் செய்தி கேட்கையில்....
மனங்கள் கவலையால் நிறைந்து...
பீதியில் உறைந்து ...
செய்வதறியாது விழி பிதுங்கி....
வேதனையால் வேகித்தகிக்கிறது..
ஒவ்வொரு நிமிடமும்
யாரோ ஒருவர்
உலகுக்கு பிரியாவிடை
கொடுக்கின்றனர்...
இவ்வரிசையில் நமக்கு
முன் எத்தனைப் பேர்?
பின் எத்தனைப் பேர்?
யார் அறிவார்?
இன்றைய எம் ஆழ்மன
வேண்டுதலெல்லாம்..
கொடிய நோய் கொரோனாவால் மாண்டியச் செய்திடாதே என்பதை தவிர வேறில்லை ...
உணர்வுகள் அமைதியாய்
ஓய்வெடுக்கட்டும் உரிமைகள் நசுக்கப்பட்டாலும்....
உடல்கள் பொசுக்கப்பட்டாலும்
உடையாமல் பொறுமை காக்கட்டும் ஈமானிய இதயங்கள்...
வேலில் பாய்ந்த புண்ணாய் இதயம் ரணமாய் வலிக்கையில்
யாரை நொந்து கொள்ளவது?
சமூகத்தின் தலைமைகளையா?
அரசியல்வாதிகளையா?
யாரையும் குறை சொல்லிப் பயனில்லை ...
மறைமுகமாய் அவர்களும்
சக்திக்குட்பட்ட வகையில்
முயற்சிக்காமலுமில்லை...
ஒரு நிமிடம் சிந்தித்தோமா?
தீயில் வெந்து நொந்து அடங்கிப் போகையில்
அவ்வான்மாக்களின் அவலக்குரலினை...
இயலாமையால் புரையோடிப் போன எம் சமூகத்தால் என்ன தான்
செய்ய முடியும்?
மாற்றங்கள் மலர
ஸூஜூதுகளில் கண்ணீர் சிந்துவோம்...
கரங்களை வான் நோக்கி
உயர்த்தி மன்றாடுவோம்...
இறைவவன் கைவிடமாட்டான்...
இப்ராஹிம் நபிக்கு
குளிர்ச்சியாய் மாறிய தீச்சுவாலைப் போல்
ஒடுக்கப்பட்ட எம் சமூகத்தின் ஆன்மாக்களும் ஷஹீதுகளாக மாறி...
நாளைய நரக நெருப்பு ஒரு ஒப்பந்தம் செய்யும் அவர்களின் உடலை மீண்டும் தீண்டமாட்டோம் என்று....
உறவுகள் ஆறுதல் கொள்ளட்டும்...
ஆன்மாக்கள் விடுதலைப்
பெறட்டும் ...
தஸ்லீமா காதர்
Great lines... Awesome..
ReplyDelete