Header Ads



சீன அரசாங்கத்திற்கு நன்றிகளை தெரிவித்தார் பிரதமர் மகிந்த



முன்னாள் சீன வெளிவிவகார அமைச்சரும் தற்போதைய கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் பணியக உறுப்பினருமான யெங் ஜியேச்சி (Yang Jiechi) அவர்களின் தலைமையிலான சீன உயர்மட்ட குழுவினர் இன்று -09- அலரி மாளிகையில் கௌரவ பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்களை சந்தித்தனர்.

உலகளாவிய கொரோனா தொற்றுக்கு மத்தியில் சீன அரசாங்கத்தின் உயர்மட்ட இராஜதந்திர குழுவினர் தெற்காசிய பிராந்தியத்தில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் முதலாவது சந்தர்ப்பம் இதுவாகும்.

கொவிட்-19 உலகளாவிய தொற்றுக்கு எதிராக போராடுதல் மற்றும் பொருளாதார உறவுகளை மேம்படுத்துதல் ஆகிய துறைகளில் இலங்கை – சீன ஒத்துழைப்பை மேலும் பலப்படுத்தும் நோக்கில் இச்சந்திப்பு இடம்பெற்றது.

முன்னாள் சீன வெளிவிவகார அமைச்சரும் தற்போதைய கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் பணியக உறுப்பினருமான யெங் ஜியேச்சி அவர்கள் உள்ளிட்ட உயர்மட்ட குழுவினரை வரவேற்று பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ உரையாற்றினார்.

யெங் ஜியேச்சி அவர்களை மீண்டும் இலங்கைக்கு வரவேற்க கிடைத்தமை குறித்து மகிழ்ச்சியடைகிறேன். நீங்கள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுடன் மிகச் சிறந்த கலந்துரையாடலொன்றில் ஈடுபட்டிருக்கக்கூடும் என நான் எதிர்பார்க்கிறேன். தாம் எப்போதும் இரு நாடுகளுக்கிடையில் நெருங்கிய ஒத்துழைப்புடன் முன்னோக்கி செல்வதற்கு எதிர்ப்பார்ப்பதாகவும் பிரதமர் சுட்டிக்காட்டினார்.

மேலும், உலகளாவிய கொரோனா தொற்றுக்கு மத்தியில் சீன உயர்மட்ட இராஜதந்திர குழுவினர் தெற்காசிய பிராந்தியத்திற்கு சுற்றுப்பயணத்தில் ஈடுபட்ட முதலாவது சந்தர்ப்பம் இதுவாகும். இச்சுற்றுப்பயணத்தின் ஊடாக தற்போதுள்ள இருதரப்பு உறவை மீண்டும் உறுதிபடுத்துவதற்கு இலங்கைக்கும், சீனாவிற்கும் சாத்தியமாகியுள்ளமை குறித்து நான் மகிழ்ச்சியடைகிறேன். கொவிட்-19 தொற்றுக்கு எதிராக போராடுவதற்கு ஆதரவு வழங்கியமை தொடர்பில் சீன அரசாங்கத்திற்கு நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

கொவிட்-19 தொற்றுக்கு மத்தியில் இலங்கை பிரஜைகளை பாதுகாப்பதற்கு பாதுகாப்பு கருவிகள் மற்றும் மருத்துவ பொருட்களை நன்கொடையாக வழங்கியமை குறித்து சீன அரசாங்கத்திற்கு நன்றி தெரிவிக்க வேண்டும். கொவிட்-19 தொற்று நிலைமைக்கு பின்னர் நாட்டில் ஏற்பட்ட பொருளாதார தாக்கத்திலிருந்து மீள் எழுவதற்கு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டியுள்ளது.

எமது நாட்டின் பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதற்கு நடவடிக்கை எடுக்கும்போது முதலீட்டாளர்கள் மத்தியில் மீண்டும் நம்பிக்கையை நிலைநாட்டுவதற்கு சீன அரசாங்கத்துடனான எமது நீண்ட கால நட்பை பயன்படுத்திக் கொள்ள முடியும் என்று நான் நம்புகின்றேன்.

கொவிட்-19 தொற்று தாக்கத்தின் பின்னர், அரசாங்கம் உலகளாவிய ரீதியில் முதலீடுகளை பெற்றுக் கொள்வதற்கு ஆர்வம் காட்டுவதுடன், அதில் கொழும்பு துறைமுக நகரத்திற்கே முன்னுரிமை வழங்கப்படும் என்றும் பிரதமர் குறிப்பிட்டார்.

இலங்கைக்கு வருகை தந்து முதலீடுகளை மேற்கொள்வதற்கு சீன நிறுவனங்களை ஊக்குவிப்பதற்கு சீன அரசாங்கத்திற்கு முடியும் என எதிர்பார்ப்பதாக தெரிவித்த பிரதமர், அது ஏற்றுமதி வருவாயை உருவாக்குவதுடன், இலங்கையர்கள் விசேடமாக இளைஞர் யுவதிகளுக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்குவதற்கும் உதவியாக அமையும் என்றும் நம்பிக்கை வெளியிட்டார்.


இந்த நிலைமைக்கு மத்தியில் சுற்றுலாத்துறைக்கு உலகளாவிய ரீதியில் பாரிய தாக்கம் ஏற்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டிய பிரதமர், சுகாதார அதிகாரிகளின் அறிவுறுத்தல்களுக்கு ஏற்ப செயற்பட்டு இலங்கையின் சுற்றுலாத் துறையை மீண்டும் கட்டியெழுப்புவதற்கும் உலகளாவிய ரீதியிலுள்ள சுற்றுலாப் பயணிகளுக்கு பாதுகாப்பான சுற்றுலாத் தலத்தை ஏற்படுத்திக் கொடுப்பதற்கு இலங்கை ஆர்வம் கொண்டு செயற்பட்டு வருவதாகவும் பிரதமர் தெரிவித்தார்.


இந்த உலகளாவிய கொரோனா தொற்றை ஒழிப்பதற்கான போராட்டம் மற்றும் இலங்;கை பொருளாதார உறவை மேம்படுத்துதல் உள்ளிட்ட தொற்றினால் ஏற்படும் சவால்களுக்கு தீர்வு காணுதல் தொடர்பில் கூட்டாக தீர்வு காணுவதற்கு சீன அரசாங்கத்துடன் இணைந்து பணியாற்றுவதற்கு எதிர்பார்ப்பதாகவும் பிரதமர் குறிப்பிட்டார்.

தொடர்ந்து, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் உள்ளிட்ட அரசாங்கத்தின் தேர்தல் வெற்றிக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வதாக குறிப்பிட்ட முன்னாள் சீன வெளிவிவகார அமைச்சரும் தற்போதைய கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் பணியக உறுப்பினருமான யெங் ஜியேச்சி, சீன குடியரசிற்கும் இலங்கைக்கு இடையில் காணப்படுவது வரலாற்று ரீதியான வலுவான நட்பாகும் என குறிப்பிட்டார்.

இரு நாடுகளுக்கும் இடையிலான அந்த நட்பின் பிணைப்பு இதுவரை புதுப்பிக்கப்பட்டு வருவதாக தெரிவித்த யெங் ஜியேச்சி அவர்கள், கொவிட்-19 தொற்றை இல்லாதொழிப்பதற்கு இரு நாடுகளும் ஒன்றிணைந்து செயற்பட்டு வருவதாக நினைவுறுத்தினார்.

சீனா கொவிட்-19 தொற்றை இல்லாதொழிப்பதற்கு தேவையான ஒத்துழைப்பை உலக சுகாதார அமைப்பிற்கு தொடர்ந்து வழங்குவதாகவும், இலங்கை கொவிட்-19 தொற்றை மிகவும் சிறப்பாக கட்டுப்படுத்தியுள்ளதாகவும் யெங் ஜியேச்சி அவர்கள் குறிப்பிட்டார்.

இரு நாடுகளுக்கும் இடையிலான பொருளாதார ஒத்துழைப்பின் போது பெற்றுக் கொண்ட வெற்றி சீனாவிற்கு போன்றே இலங்கைக்கும் உள்ளதாக சுட்டிக்காட்டிய யெங் ஜியேச்சி அவர்கள், அனைத்து சந்தர்ப்பங்களிலும் இலங்கையில் முதலீடுகளை மேற்கொள்வதற்கு சீன நிறுவனங்களுக்கான ஊக்குவிப்புகளை சீன அரசாங்கம் ஏற்படுத்தியுள்ளதாகவும் நம்பிக்கை வெளியிட்டார்.

கொழும்பு துறைமுக நகரம் உள்ளிட்ட ஏனைய திட்டங்களுக்கான அபிவிருத்தி செயற்பாடுகளுக்கான எமது ஒத்துழைப்பு ஏற்கனவே இலங்கைக்கு கிடைத்துள்ளது. சுற்றுலாத் துறையில் இரு நாடுகளுக்கும் இடையிலான உறவு மிகவும் முக்கியமானதாகும். கொவிட்-19 நிலைமை கட்டுப்படுத்தப்பட்டவுடன் உடனடியாக அந்த உறவு தொடர்ந்து நீடிக்கும் என நாம் நம்புகின்றோம். சீனா, இலங்கையின் உள்நாட்டு உற்பத்திகளின் இறக்குமதியை அதிகரித்துள்ளதாகவும் குறிப்பிட்டார்.

மேலும், தமது இந்த சுற்றுப்பயணத்தின் ஊடாக இரு நாடுகளுக்கும் இடையிலான உறவு மேலும் விரிவடையும் என நம்புவதாகவும், இலங்கையின் ஜனாதிபதி, பிரதமர் மற்றும் சீன ஜனாதிபதி ஸீ ஜின்பிங் ஆகியோர் ஒன்றிணைந்து இருதரப்பு உறவை மேலும் மேம்படுத்துவதன் ஊடாக பொருளாதார ஒத்துழைப்புடன் இரு நாட்டு அபிவிருத்தி நடவடிக்கைகளும் மேலும் விரிவடையும் என்று நம்பிக்கை கொள்வதாகவும் தெரிவித்தார்.


No comments

Powered by Blogger.