Header Ads



யாழ்ப்பாணம் எந்நேரமும் முடக்கப்படலாம், சிக்கலான சூழலை எதிர்நோக்கியிருக்கிறோம் - அரச அதிபர் மகேசன்


யாழ்ப்பாண மாவட்டத்தினை எந்நேரத்திலும் முடக்க வேண்டிய தேவை ஏற்படலாம். ஏனெனில் தற்போதைய நிலைமையின் சிக்கலான அபாயகரமான சூழலை மாவட்டம் எதிர்நோக்கியிருப்பதாக யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் தெரிவித்தார். யாழ்.மாவட்ட செயலகத்தில் நேற்று நடைபெற்ற கொரோனா ஒழிப்பு செயலணி கூட்டத்தினை தொடர்ந்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் ​போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில்,


கம்பஹா மாவட்டத்தில் ஆடைத் தொழிற்சாலையில் பணிபுரிந்தவர்கள் என்ற அடிப்படையில் இனங்காணப்பட்டிருந்தவர்களில் இருவர் புங்குடுதீவை சேர்ந்தவர்கள் இங்கு வருகை தந்திருக்கிறார்கள். 30ஆம் திகதி மற்றும் மூன்றாம் திகதி இரண்டு பேர் இங்கு வந்திருக்கிறார்கள். அவர்களில் 3 ஆம் திகதி வந்தவருக்கு கொரோணா தொற்று இனங்காணப்பட்டுள்ளது.


அதன் அடிப்படையில் அவருடைய நெருங்கிய குடும்பங்களைச் சேர்ந்த 22 பேர் புங்குடுதீவு பகுதியில் கட்டாய சுய தனிமைப்படுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளார்கள். வேலணை பிரதேச செயலர் பிரிவில் 57 பேர் போக்குவரத்தில் மற்றும் ஏனைய இடங்களில் அந்த பெண்ணுடன் தொடர்புபட்ட என்ற அடிப்படையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்கள்.


நெடுந்தீவு பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட பகுதியில் கொரோனா தொற்றுக்குள்ளான பெண் உடன் பஸ்ஸில் பயணித்தவர் என்ற அடிப்படையில் சுமார் 88 பேர் சுய தனிமைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்கள்.


மருதங்கேணி - குடாரப்பு கிராமத்தில் 73 நபர்கள் அங்கு சுய தனிமைப்படுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளார்கள். 9 பேர் தனிமைப்படுத்தல் முகாமுக்கு அனுப்பட்டுள்ளார்கள். இதனைவிட எழுவைதீவைச் சேர்ந்த ஐந்து குடும்பங்களை சேர்ந்த 22 பேர் சுய தனிமைப்படுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர்.


புங்குடுதீவில் ஒருவருக்கு உறுதி செய்யப்பட்டுள்ள காரணமாக ஆயிரத்து 212 குடும்பங்களைச் சேர்ந்த 3915 பேர் கட்டாய சுயதனிமைப்படுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளார்கள். அந்த பகுதியில் முழுமையான முடக்கம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.


இச் சந்தர்ப்பத்தில் யாழ்ப்பாண மாவட்டம் தற்போதைய அனர்த்தத்தை மிகவும் சிக்கலான நிலைமையினை எதிர்கொள்ளும் பாரிய ஒரு அபாயகரமான நிலைமை ஏற்பட்டிருக்கின்றது. ஆகவே அபாயகரமான சூழல் என்று நாங்கள் தற்பொழுது கருதப்பட வேண்டிய புங்குடுதீவு பகுதி முற்று முழுதாக முடக்கப்படுத்தப்பட்டுள்ளது.


இருந்த போதிலும் ஏனைய பகுதிகளிலும் சில சில செயற்பாடுகளை அரசாங்கத்தினுடைய அறிவுறுத்தலின் பிரகாரம் முடக்கி இருக்கின்றோம். அல்லது தற்காலிகமாக நிறுத்தி இருக்கின்றோம் என்றார்.

No comments

Powered by Blogger.