Header Ads



இன்று நள்ளிரவு வெளிவரும் புதிய, வர்த்தமானியில் உள்ள முக்கிய அம்சங்கள் (வாசிக்கத் தவறாதீர்கள்)



புதிய தனிமைப்படுத்தல் சட்டத்தின் கீழ் பொதுமக்கள் நடமாடும் பொது இடங்களில் சமூக இடைவௌியை பேணுதல், முகக்கவசம் அணிதல் உள்ளிட்ட பிரதான சுகாதார பாதுகாப்பு வழிகாட்டல்களை செயற்படுத்தல் உள்ளிட்ட விசேட வர்த்தமானி அறிவித்தல் ஒன்றை வெளியிட தற்போதைய நிலையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு அறிக்கை ஒன்றை வௌியிட்டு தெரிவித்துள்ளது. 


அதன்படி, குறித்த வர்த்தமானி அறிவித்தலில் சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி கைச்சாத்திட்டுள்ள நிலையில் இன்று (15) நள்ளிரவு குறித்த வர்த்தமானி அறிவித்தல் வௌியிடப்படவுள்ளது. 


குறித்த புதிய வர்த்தமானி அறிவித்தல் வௌியானதும் தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறுபவர்களுக்கு 10 ஆயிரம் ரூபாய் அபராதம் அல்லது 6 மாதம் சிறைதண்டனை விதிக்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது. 


அதற்கு மேலதிகமாக குறித்த வர்த்தமானி அறிவிப்பில் வணிக மற்றும் பணியிடங்களில் நுழைவது மற்றும் பணியிடங்களை பராமரிப்பது குறித்து பல விடயங்கள் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. 


பணியிடங்களிலும் வணிக இடங்களிலும் நுழையும் ஒவ்வொருவரும் எல்லா நேரங்களிலும் முகக்கவசம் அணிய வேண்டும். 


இரண்டு நபர்களுக்கு இடையில் ஒரு மீட்டருக்கு குறையாத சமூக இடைவௌியை பராமரிக்கப்பட வேண்டும். 


பணியிடத்திற்குள் நுழைவதற்கு முன்பு ஒவ்வொரு நபரின் உடல் வெப்பநிலையும் அளவிடப்பட வேண்டும். 


கிருமி நாசினி திரவத்துடன் போதுமான அளவு கை கழுவுவதற்கு வசதிகள் ஏற்படுத்தப்பட வேண்டும். 


உள்வரும் ஒவ்வொரு நபரின் பெயர், அடையாள அட்டை இலக்கம மற்றும் தொடர்புத் தகவலின் பதிவு பராமரிக்கப்பட வேண்டும். 


அதேபோல், பயணத் தடைகள், தனிமைப்படுத்தல் மற்றும் போக்குவரத்து போன்ற குறிப்பிட்ட விடயங்கள் தொடர்பான சட்டங்களை மேலும் வலுப்படுத்தவும் குறித்த வர்த்தமானி அறிவிப்பு மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

No comments

Powered by Blogger.