நாட்டின் சிங்கள பௌத்த மக்களின் அடையாளத்தை உறுதி செய்ய வேண்டியது கட்டாயமாகும்
பெண் இராணுவச் சிப்பாய்களை துஸ்பிரயோகம் செய்ததாக சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்களில் எவ்வித உண்மையுமில்லை என பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
20ம் திருத்தச் சட்டம் தொடர்பில் இன்றைய தினம் நடைபெற்று வரும் நாடாளுமன்ற விவாதத்தில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
பத்து பெண் இராணுவச் சிப்பாய்களை தாம் பாலியல் துஸ்பிரயோகம் செய்ததாக ஆளும் கட்சியின் உறுப்பினர் ஒருவர் குற்றம் சுமத்தியதாகவும் அதில் எவ்வித உண்மையும் கிடையாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இராணுவம் என்பது மிகவும் சீரிய ஒழுக்கத்தை உடைய ஓர் அமைப்பாகும் எனவும் அங்கு இவ்வாறான செயற்பாடுகள் இடம்பெறாது எனவும், சிலர் இராணுவத்தின் நன்மதிப்பை சீர்குலைக்க முயற்சிப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
20ம் திருத்தச் சட்டத்தை அமுல்படுத்தினால் அது ஓர் சர்வாதிகார ஆட்சியாகவே மாற்றமடையும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த சட்ட திருத்தத்தின் மூலம் ஜனாதிபதியின் கரங்கள் பலப்படுத்தப்படும் எனவும், ஜனாதிபதியின் ஒரு சில வார்த்தைகள் சர்வாதிகாரி ஒருவரின் வாயிலிருந்து வெளிவரும் வார்த்தைகளாகவே தென்படுகின்றது எனவும், அண்மையில் தமது வாய்மொழி மூல உத்தரவுகளே வர்த்தமானி அறிவித்தல் எனக் கூறியதனை சுட்டிக்காட்ட விரும்புவதாக சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
நாட்டின் சிங்கள பௌத்த மக்களின் அடையாளத்தை உறுதி செய்ய வேண்டியது கட்டாயமாகும். இந்த விடயத்தை 20ம் திருத்தச் சட்டத்தில் உள்ளடக்க வேண்டும், அதற்கு நாமும் ஆதரவு வழங்குவோம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
எனினும், ஏனைய இன மத மக்களுக்கு தேவையான பாதுகாப்பினையும் சுதந்திரத்தையும் வழங்குவோம் என்ற விடயமும் இதில் உள்ளடக்கப்பட வேண்டுமென சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
Post a Comment